Monday 3 February 2020

பெண்ணின் வலி சொல்லும் ஒரு ஆண் மனசு....



நான் மொழிபெயர்த்த சிறுகதைத்  தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த என்.எஸ்.மாதவனின்சர்மிஷ்டாபற்றி என்னுடைய நண்பரும் தீவிர வாசகருமான சௌந்திராஜன் அவர்கள் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருக்கிறார். மாதவன் தன் படைப்புகளில் லேசாய் தெரிவதாய் பல நுட்பங்களை உள் மடித்து வைத்து வாசகனை கடந்து போக விடாமல் செய்யும் படைப்பாளி. சில வார்த்தைகளில் நான் உடைந்து போய் அழுதிருக்கிறேன், விக்கித்துப் போய் நின்றிருக்கிறேன், மரத்துப் போயிருக்கிறேன். மூச்சு விட முடியாமால் திணறியிருக்கிறேன். பெரு மூச்சு விட்டு என்னைத் தணித்திருக்கிறேன்.

இதில் வரும்பிறகுகதை வலி நிறைந்தது. பெண் மனம் கொண்டு மாதவன் எழுதிப் பார்த்தவை. அதை பவா மிக நேர்த்தியாய் சாதுர்யமாய் சொல்லியிருப்பார். எல்லாம் ஒரு சேர நினைவில் வந்து மோதுகிறது. 


https://www.youtube.com/watch?v=-sJEUwD7rwo


/* சர்மிஷ்டா - வாசிப்பனுபவம் */
(மலையாளம் : என்.எஸ். மாதவன். தமிழில் : கே.வி. ஷைலஜா)
சென்ற டிசம்பரில், கே.வி. ஷைலஜா அவர்களை சந்தித்தபொழுது, சர்மிஷ்டா வாசித்திருக்கிறீர்கள்தானே என்று கேட்டார்கள். நான் வாசித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்கவேண்டிய மீள்வாசிப்புக்குரிய தொகுப்பு இது என்று சொன்னேன். இந்த முறை உட்கார்ந்து ஆற அமர வாசித்தேன். அதுவும் சர்மிஷ்டா கதையை வாசிப்பதற்கும் புரிவதற்கும், ஜெயமோகனின் வெண்முரசுவில் , யயாதி, தேவயானி, சர்மிஷ்டா, அவர்கள் புதல்வர்கள் , அமைச்சர்கள் வரும் மாமலர் பாகங்களை மீண்டும் வாசித்தேன். காண்டேகர் எழுதிய யயாதி நாவலைப் பற்றிய பல விமர்சகர்களின் வாசிப்பனுபவத்தை வாசித்தேன். புலப்பேடி கதையின் அடிநாதத்தை பிடிப்பதற்கு, ரப்பர் நாவலில் இந்த வார்த்தையை பார்த்தமே என்று மீண்டும் ஜெயமோகனே சரணம் என்று அவரின் தளத்தில் விளக்கம் தேட வேண்டியதாகிவிட்டது.
தனது முதுமையை மகன் புருவிற்கு கொடுத்துவிட்டு அவனது இளமையை தனது சுகத்திற்காக வாங்கிக்கொண்ட, பாண்டவர்களின் கவுரவர்களின் மூதாதை அரசன் யயாதி. இளமையில் கிடைக்கும் காமத்தில் இல்லை இன்பம் , தியாகத்தில்தான் இன்பம் என்று புகட்டுவதற்கே யயாதியின் கதை சொல்லப்படுகிறது. பெண் என்பவள் மகளாக, காதலியாக, மனைவியாக, தாயாக தன் வாழ்நாளில் வாழ்ந்தாலும், அவளின் ஆழம் தாய். அந்த ஆழத்தை, தாயின் பதட்டத்தை காட்சி படுத்தும் புதிய பார்வையே, என்.எஸ். மாதவனின் சர்மிஷ்டா. இங்கு என்.எஸ். மாதவன் யயாதி கதையை, சர்மிஷ்டாவின் பார்வையில் சொல்கிறார். அவன் தனக்கு இளமையை தரும்படி கேட்டு கெஞ்சுவதை, புருவைத் தவிர மற்ற நான்கு மகன்களும் எப்படி அவனை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறாள். தேவயானி, இவள் மகன் புரு , வயதானதால் சீக்கிரம் மரணம் எய்துவான் என்று மகிழ்வு கொள்ள, சர்மிஷ்டா சாந்தமாக இருக்கிறாள். இவள் சாந்தமாக இருக்க அவள் வெட்டி திரும்பி தன்னை பார்ப்பதையே சர்மிஷ்டா வெற்றியாக பார்க்கிறாள். இளமையிலேயே முதுமை அடைந்துவிட்ட புருவின் கண்களில் ஓடுவது இளமையின் கனவாக இருக்குமா என்று துடிக்கிறாள். அந்தக் கண்களுக்கு கனிவுடன் முத்தமிடுகிறாள். இளமை திரும்பி சுகம் தேடி வரும் யயாதியை புருவாக பார்க்கிறாள். அருகில் வராதே என்று கன்னத்தில் அறைகிறாள், சர்மிஷ்டா!.
புலப்பேடி கதையில், சாவித்ரி கணவன் இறந்தபிறகு தனிமையில் வாடும் பெண். நெல்குதிரெல்லாம் வைக்கும் அறைக்கும் மேலே பரண் மாதிரி இருக்கும் பெண்களுக்கான தனியறையில் வாசம் செய்கிறாள். கதவிடுக்கில் தெரியும் வாசலிலும், அதில் வரும் ஒளி மாற்றத்திலும் பகல் இரவு மாற்றத்தை அறிகிறாள்.. அதில் நாட்கள் மாதங்கள் மாறுவது தெரிவதில்லை. அவளது கணவன் இறந்து நாளைக்கு பதினைந்தாவது திவசம் என்று வேலைக்காரி பார்வதி சொல்லித்தான் தெரிகிறது. புதிய நெல்லின் பச்சை மணம் அவளுக்கு பழைய நினைவுகளை கிளறிவிடுகிறது. மாலையில் வயல்களிலிருந்து வீடு திரும்பும் புலையர்கள், தங்களை பார்த்து யாரும் தீட்டு பட்டுவிடக்கூடாது என கூவி பாடிக்கொண்டு அவள் வீட்டை கடக்கிறார்கள். அந்தக் கூக்குரல் சாவித்ரியின் உடலை நடுக்கி சிலிர்க்க வைக்கிறது.
அவள் பார்க்க வளர்ந்த கணவனின் தம்பி படித்து முடித்து அண்ணனின் திவசத்திற்காக வந்திருக்கிறான். வந்தவன் , தவறாக அவளிடம் முயற்சிக்க, குழந்தையாகவே பார்த்த அவனை விபூதிப்பெட்டியை முகத்தில் வீசி தப்புகிறாள். முகத்தில் இரத்தம் வழிய வந்த அவனை பார்த்த அம்மாவிடம், வயிற்று வலியால் துடித்த அண்ணியை என்ன என்று கேட்க போன தன்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தாள் என்று பொய்ப் பழி சுமத்துகிறான். இது கதவில் தலையிடித்து வரும் இரத்தம் என்கிறான். தம்பிரான் குடும்பம் அவளை அடங்காதவள் என பழிச் சொல் நிமித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இப்பொழுதும் புலையன் தெருவில் பாடி வருகிறான். அவன் குரல் கேட்டு முதலில் பயப்பட்ட சாவித்ரி, இப்பொழுது அவன் பெயர் கேட்டு அவன் கை பிடித்து ஆற்றை நோக்கிச் செல்கிறாள். அவனோடு சேர்ந்து இவளும் உரக்கக் கூவுகிறாள்.
இரை - கதை முழுக்க முழுக்க திகில். என்னதான் எதிரில் நிற்கும் பெண்ணைச் சுற்றிலும் கத்தி றிவதில் ப்ரமோத் வித்தகன் என்றாலும், ஒருமுறை அவனால், குத்து வாங்கி அம்மிணி ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். அம்மிணிக்கு முன்பு இருந்தவள் தொடையில் குத்து வாங்கி இறந்தாள் என்பதை மானேஜர் கிண்டல் செய்து அவனை உசுப்பு ஏற்றுகிறார். இரையாக நிற்பதற்கு எந்த முதல் அனுபவமும் இல்லாமல் இன்று நிற்கும் அம்மிணியின் சகோதரி ஜெயலட்சுமி , ப்ரமோத்தின் தவறான முயற்சிக்கு 'போடா வெளியே' என்று சொல்லியிருக்கிறாள். பயிற்சி இல்லாத ஜெயலட்சுமிக்கு, பிரமோத்தின் மீது பகைமை மற்றும் பயம். பகைமை, அம்மணி அக்காவை நிறுத்தி வைத்து வாளை வீசுகிறான். பயம் - மம்முட்டியின் கண்களைப் போல ப்ரமோத்தின் கண்களும் ஒரு நாளும் சிரிப்பை உதிர்த்ததில்லை.
நிற்கும் இரையை கோட்டோவியமாக பார்க்கும் பயிற்சி, ப்ரோமத்திற்கு இருந்தாலும், அவள் 'போடா வெளியே' என்று சொன்னது வந்து போகிறது. ஒரு நிமிடம் கண்ணை மூடி நிதானப்படுத்தி கத்தி வீசுகிறான். வலது கையின் நீண்ட விரல் நகத்தை கத்தி தொட்டும் தொடாமலும் செல்ல , அவள் பயப்படுவதை பிரமோத் உணர்கிறான். காற்றின் வேகம் அறிந்து வீசுகிறான். திரும்பி நின்று கண்ணாடியில் இரையை பார்த்துக்கொண்டு ஜெயலட்சுமியின் தலைக்குமேல் கத்தி குத்தி நிற்கும்படி வீசுகிறான். கடைசி கத்தி உச்சந்தலைக்கு நேராக வரும்பொழுது ஜெயலட்சுமியின் புருவங்களுக்கு இடையில் நமைச்சல். இது கடைசி பக்கத்தின் முதல் வரிகள். திகில் குறைந்த பாடில்லை.
தனது கணவன் முகுந்தன் பற்றி, ஒரு மனைவி சொல்லும் கதை பிறகு. கவிதை நடை. சில நேரங்களில் என் கணவர், சில நேரங்களில் என் குழந்தைகளுக்கு அப்பா, சில நேரங்களில் என் மாமியாரின் பிரியமான இரண்டாவது மகன் என ஒரு பக்கம் முழுவதும் அழகாக நீண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பாக செத்துப் போனான், என்று இறந்த தன் கணவனின் கதையை சொல்கிறாள்.
முகுந்தனின் நாற்பத்து மூன்று வருட வாழ்க்கையை சின்னக் கோடு என்று சொல்லிவிட்டு அந்தக் கோட்டின் பாதியில் தான் வந்து சேர்ந்த இடத்தை சொல்கிறாள். அந்த வருடங்களை உச்சரிப்பதில் உள்ள வலியை சொல்கிறாள். அவனுடன் ஒருமைப்பட முடியாமல் போன வலியைச் சொல்கிறாள்.
முகுந்தனின் கடைசி நிமிடங்கள் குறித்து இரண்டு விஷயங்களை நினைவு கூறுகிறாள். ஒன்று, யாருக்கும் அறிமுகமில்லாத நல்ல நிறமான , உயரமான, கழுத்து நீண்ட பெண் மயானத்திற்கு வந்து முகந்தனின் காலைத் தொட்டு வணங்குகிறாள். கட்டுப்பாடில்லாமல் அழுதபடியும் இருக்கிறாள். இரண்டு, குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் அவசரம் காட்டுகிறாள்.
முகுந்தனுக்கும் நீண்ட கழுத்து உள்ள பெண்ணுக்குமான உறவு, அவள் ஒரு கிளினிக்கு போலாம் வாருங்கள் என்று அவளை துணைக்கு அழைக்கும்பொழுது அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. யாருமில்லாத நளினியை அவளும் , அவள் குடும்பமும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களை அமரவைத்து அவள் கதை சொல்ல, அவர்கள் முகுந்தனாக நளினியைப் பார்க்கிறார்கள். பிறகு கதை , முகுந்தனின் கதை மட்டுமல்ல. பன்முகங்கள் கொண்டு வாழும் பல மனிதர்களின் கதை. கதையின் எந்த இரு பக்கங்களை எடுத்தது படித்தாலும் ஒரு கதை , முகுந்தனின் இன்னொரு முகம் இருக்கிறது.
கதையின் ஆரம்பத்தில் இருந்த நடை , முகுந்தனின் பல முகங்களை அடையாளம் காட்டும் சொல்லாடல்கள், முகுந்தனின் மனைவியும், நளினியின் உரையாடல்களிலும் தொடர்கிறது. (ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பின் அழகும் , நளினமும் இங்கு மிளிர்கிறது.)
நளினி : முதல் முதலாக நான் நாடகத்தில் தலை காட்டியபோது மேடைக்கூச்சத்தை போக்க என்னை இந்தியாகேட்டின் புல் படுக்கையில் நடக்கவைத்த முகுந்தன்.
மனைவி : "அப்புறம்?"
நளினி : "அப்புறம், ம்.. என்னவெல்லாம்.. நான் சமையல் செய்யாத நாட்களில் ஜும்மா மசூதியின் கரீம்ஸிலிருந்து உருமாலி ரொட்டியும், கறிக்குருமாவும் வாங்கிக்கொண்டு வரும் முகுந்தன்"
மனைவி : அப்புறம் உனக்கு உடம்பு சுகம் இல்லாத நேரத்து முகுந்தன் எப்படி ?
நளினி : "ஐ.என்.ஏ. மார்க்கெட்டிலிருந்து நொய்யரிசி வாங்கி வந்து கஞ்சி வைத்துத் தந்த முகுந்தன்"
இருவரிடமும், இரு வேறு ஆணாக இருந்த முகுந்தன் -
மனைவி :"ஜுரம் சரியானபோது உன்னை விட்டுவிட்டுத் தனியாக காரை ஓட்டியபடி பல வாரங்கள் காணாமல் போன முகுந்தன்?"
நளினி: "இல்லை, ஜுரம் சரியானபோது எனக்கு ஒய்வு தேவையென நினைத்து தரம்சாலையின் மக்லோயிட் கஞ்ச்சிற்கு காரில் என்னை அழைத்துக்கொண்டு போன முகுந்தன். அங்கே நான் காண்பித்த திபெத்தியர்களின் அகதி முகங்களை எல்லாம் முகந்தன் புகைப்படமெடுத்தார்."
சுரேஷ்மாத்தான் அறுபத்தைந்து வருடங்களுக்கு அப்புறம், ஹுமாயுன் கல்லறையில் (கதையில்) , பூ விற்ற , பதினாறு வயது பெண்ணான சமேலியிடம், முதலிலேயே ஒரு முழம் பூ வாங்கி இருக்கலாம். ‘முப்பத்தைந்து வயசெல்லாம் ஒரு வயசா சார்’ என்று அவள் கேட்டதில் இளமை திரும்பி, மறைவுக்கு வரச் சொல்லி , சென்ற இடத்தில் அவமானப்பட்டதுதான் மிச்சம்.
அம்மா கதையில், சூசன் தொலை காட்சி நிகழ்வை எடுக்கும்/தொகுக்கும் பெண், சரசம்மா என்ற நக்சல்பாரியின் ஒரு காலத்திய தலைவியை, அவள் வயதாகி ஓய்வாக மகள் நீலிம்மா வீட்டில் பேரன் பைஜுவுடன் விளையாண்டு கொண்டிருக்கும் சமயம் நேர்முகம் காண வருகிறாள். அவளை நேர்முகம் காணும்பொழுது, அவள் முன்னின்று நடத்திய போராட்டத்தில் காலை இழந்த, துஷ்ட இன்ஸ்பெக்டர் கேளு நம்பியாரை பற்றி சொல்ல, கதை , கேளு நம்பியாரை சூசன் பேட்டி காண்பதுபோல் செல்கிறது. எடிட்டரின் கத்தி விளையாடுவதுபோல், கதை சரசம்மாவை பற்றிய தகவல்களை, அந்த போராட்டத்தில் பங்கு கொண்ட மற்ற பெண்களையும் கண்டு பேட்டி காண வைக்கிறது. அவர்களும் சரசம்மாவை பாராட்டுகிறார்கள். குழந்தைகளிடம் பிரியமுடன் இருப்பவர் என்கிறார்கள். கேளு நம்பியாரை மகாதுஷ்டன் என்று திட்டுகிறாரகள். சூசன் எடுத்தது படமாக தொலைக்காட்சியில் வரும்பொழுது, சரசம்மா , மகளையும், பேரனையும் வெளியே அனுப்பிவிட்டு, விளக்கெல்லாம் அணைத்துவிட்டு அமைதியாக பார்க்கிறாள். அவளுக்கு ஏ.கே.ஜி-யை பற்றி அவர் கணவன். சொன்னது நினைவில் வந்து போகிறது. மற்ற குழந்தைகளை விட சரசம்மாவின் பேரன் பைஜுமோனுக்குத்தான் யாரும் கேட்க முடியாத கதைகளை கேட்கும் பாக்கியம் இருக்கிறது என்று சூசன் விளக்கத்துடன் படம் முடிகிறது.
என்.எஸ். மாதவனின் குறியீடுகளையும், மாறுபட்ட நோக்கையும், அழகிய நடையையும் சிறிதும் குலையாமல், கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்து சர்மிஷ்டா தொகுப்பை வாசகன் கையில் கொடுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் முதலில் குறிப்பட்டது போல் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு மறந்துவிடும் கதைகள் அல்ல. உள்வாங்கி வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய கதைகள்.
- வ. சௌந்தரராஜன்
02/02/2020
  

Tuesday 26 June 2018

தென்னிந்தியச் சிறுகதைகள் (வாசிப்பனுபவம்)



ஒரு மாங்கனி வேண்டும் என்று ஒரு கல்லை மாமரத்தில் எறிந்தேன். அது என்னுடைய மிகச் சிறந்த குறியாக அமைந்து , ஒரு பழத்திற்கு பதில் , வெவ்வேறு கிளைகளில் இருந்து பழங்கள் பல உதிரக் கண்டேன். அவைகள் மல்கோவா , செந்தூரா, பங்கனப்பள்ளி, ருமானி, கருத்த கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, செம்பட்டான், தேமா, புளிமா என்று பல வகைகளில் கிடைக்கப்பெற்று சுவைத்து மகிழ்ந்தேன். வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள , 'தென்னிந்தியச் சிறுகதைகள்' என்ற புத்தகத்தை முந்நூறு ரூபாய்க்கு வாங்கிப் படித்தது அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான். 28 தென்னிந்திய எழுத்தாளர்கள் தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெவ்வேறு தொனியில் எழுதிய , படிப்பவனை பரவசப்படுத்தும் சிந்திக்கவைக்கும் கதைகளின் சிறந்ததொரு தொகுப்பு. தமிழ் அல்லாத மற்ற தென்னக மொழியில் வந்த கதைகளை, பன்மொழி அறிந்த மொழிபெயர்ப்பாளர்களை வைத்து தக்கபடி மொழிபெயர்த்து, கே. வி. ஷைலஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருக்கும் பாராட்டத்தக்க சிறந்ததொரு செயல்பாடு.
சில கதைகளை, நான் திரும்ப திரும்ப படித்தேன். என்னிடம் கதை பற்றி கதைக்கும் நண்பர்களிடம் சில கதைகளை சிலாகித்து பேசினேன். வாய்ப்பு கிடைத்ததில் , இருபத்தெட்டு எழுத்தாளர்களில் ஒருவரை நேரில் சந்தித்து , “அம்மா, உங்களை சந்தித்ததில் அகம் மகிழ்கிறேன்” என்று சொன்னேன். ஒரே ஒரு முறை படித்தாலும், கதையின் சாராம்சமோ , பாத்திரமோ , மனதில் அழியாத சித்திரமாக நின்றுவிட்ட கதைகளும் உண்டு.
தொகுப்பில் இருக்கும் தமிழ் கதைகளில் , ஜே பி சாணக்யாவின் , "படித்துறை ஆண்கள்", தமிழில் நான் படித்த கதைகளில் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று என என்னை சொல்ல வைக்கிறது. ஒரு வேளை, அந்த விஷயத்தை , கதை சொல்லி கையாண்ட விதமாக இருக்கலாம். அன்னம்மாள் ஆண்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் கணக்குகளும், அவள் மகள் லலிதா தெரிந்து வைத்திருக்கும் கணக்குகளும் சரிதான். அதை அவர்கள் எடுத்தாலும் விதத்தில் உள்ள இரண்டு பரிமாணங்கள் , கதை முடிந்தும் வாசகனுக்கு தொடரும் கேள்விகளையும், வலியையும் விட்டுச்செல்கிறது. இது திரும்ப திரும்ப படித்த மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட கதைகளில் ஒன்று.
“உண்ணியைப் போன்றவனின் சாயலில் ஒருவனைப் பார்த்ததும், வேகமாக வந்து கொண்டிருக்கும் ரயிலில் பறந்துபோய் விழுந்து உடல் சிதறியதை போல உயிர் கலங்கி நின்றேன்”, என்று காதலின் வலி சொல்லும், சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" , நல்லதொரு காதல் கவிதை. இன்று காலை, நண்பன் லிவியுடன் பேசும்பொழுதுகூட இந்தக் கதையை எடுத்துச் சொன்னேன்.
ஒரே ஒரு முறை படித்தாலும், மனசுக்குள் சித்திரத்தை விட்டுச் சென்ற, தொகுப்பிலுள்ள மற்ற தமிழ் கதைகள். காசிரிக்கா நற்றினால் கட்டப்பட்டு தண்டிக்கப்படவிருக்கும் திருடன் தப்பிக்க, ஈரம் தர வந்தது ஒரு காட்டு மழை என, பவா செல்லத்துரை சொல்லும் கதை, "சத்ரு". பெண் பெற்றவர்கள் தனது மகளை கொடுக்கவும், கல்யாண வயதில் உள்ள பெண்கள், தனது கணவனாக்கி கொள்ளவும், என எல்லோருக்கும் பிடித்த கிறிஸ்டோபர் வரும் கதை , எஸ் செந்தில்குமாரின் - "மறையும் முகம்". தாது வருஷ பஞ்சத்தின் போது, ரகசியங்கள் நிறைந்த பட்டியாக இருந்த ஒரு விவசாயியின் இடம் , வளரும் நகரின் பூங்காவாக ஆகிய காலத்தின் கதை சொல்லும் காலபைரவன் எழுதிய “பட்டித் தெரு”. ஊரில் மழை பெய்ய வேண்டி முனி அப்புச்சி கோயில் சாட்ட, மாரியாண்டி முனி வேஷம் போட்டு கோழி குஞ்சின் குரல் வளையம் கடித்து ரத்தம் குடிக்கிறான். எல்லாம் முடிந்து , வேஷம் கலைந்து மாயாண்டியின் குழந்தை, அவனை இன்னும் முனியாகவே பார்க்கிறது என முடியும் , என் ஸ்ரீராம் எழுதிய முனி விரட்டு கதை. மனோஜ் எழுதியிருக்கும், “அட்சர ஆழி” கதையில் எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆழத்துடன் சொல்லியிருப்பதை அறிந்து சபாஷ் போட வைக்கிறது.
மலையாளம் என்றால் கதைகள் நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் நிலை நிறுத்துகின்றன. நண்பன் வாங்கிய கடனுக்கு சாட்சி கையெழுத்துப் போட்ட காரணத்திற்காக , ஓடிப்போன அவனைப் பிடிக்க முடியாமல், வங்கிக்காரன், இவனை வந்து கேட்க , குண்டூர் வாசகன், சுதந்திர தினத்தன்று குடும்பத்துடன் தற்கொலை செய்கிறோம் என்று வீட்டின் முன் அறிவுப்பு பலகை வைக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய 'கொமாலா'. ஊரில் இருக்கும் சட்ட நிபுணர், மன நல மருத்துவர் , சமூக ஆர்வலர் என கூட்டி வைத்து, அப்படி தற்கொலை செய்வது சரியா என கேள்வி கேட்டு ஆராயும் தொலை காட்சி நிகழ்வு, அவர்கள் சொல்லும் வியாக்கியானங்கள், இடையில் வரும் விளம்பரங்கள் என கதை மிகவும் சுவாரஷ்யமாகவும் நகைச்சுவையாகவும் செல்கிறது. " கடன் தலைக்கு மேல ஏறி வாழ வழியில்லாத உங்களுக்கு கள்ளு வாங்கித்தர நிறையப்பேர் இருப்பாங்க, ஆனா ஒரு கிலோ அரிசி வாங்க பணம் கேட்டா ஒருத்தனும் திரும்பி பார்க்கமாட்டான் " என தொலை காட்சி நிகழ்ச்சியில் கருத்து சொல்லும் விசுவன், ஆத்மாக்கள் நிறைந்த 'கொமாலோ' கிராமத்தை பற்றி தெரிந்துகொள்ள, 'பெட்ரோ பராமோ' எழுதிய மெக்ஸிகன் நாவலை படிக்கிறான். தன் வாழ்க்கையும் கொமாலோவைப் போல வறண்டுபோனதுதான் என புரிந்துகொள்ளும் அவன் , ஒரு மரணத்தை நேரில் பார்க்க நேரிடுகிறது. அதற்குப் பின் அவனது தற்கொலை பற்றிய எண்ணம் மாறுகிறது. இன்றைய வாழ்க்கை நிலையையும், மனிதர்களையும் பற்றிய ஒரு புரிதலை கொடுக்க , தொகுப்பில் இருக்கும் இந்த ஒரு கதை போதும்.
அசோகன் செருவில் எழுதியுள்ள "பலவிதமான வீடுகள்" கதையில், இருந்த நகையெல்லாம் விற்று, கிடைக்கின்ற கடன்களையெல்லாம் பெற்று, ஏற்கனவே அறுபது வீடுகள் உள்ள அந்த குடித்தனத்தில் அறுபத்தோராவது வீடு கட்டி இரு குழந்தைகளுடன் ஒரு தம்பதியினர் குடி வருகின்றனர். கிரகப் பிரவேசம் முடிந்த காலையில், பாதிரியார் அவர்களது புது வீட்டில் அழையா விருந்தாளியாக நுழைந்து , “ இறந்தால் கல்லறை கட்டி நல்ல முறையில் அடக்கம் செய்ய இப்பொழுதே தவணை முறையில் பணம் கட்டும் ஒரு திட்டத்தில் சேருங்கள்”, என்று விண்ணப்பம் ஒன்றை வைக்கிறார்.
நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆன பெண்கள் ஒன்று சேர்ந்து சுற்றலா செல்லும் பெண்களின் நகைச்சுவை கலந்த, காயங்கள் கொண்ட உரையாடலால் நிறைக்கப்பட்ட கதை, உண்ணி எழுதியுள்ள , கே. வி. ஷைலஜாவால் மொழி பெயர்க்கப்பட்ட "ஆனந்த மார்க்கம்" கதை. உதாரணத்திற்கு ஒன்று. "என்னோட சொத்து விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும்னு நெனப்பு. தெரியும். மற்றதெல்லாம் தெரியும். ஆனா இது மட்டும் தெரியாது" உஷா தேவி சுடிதாரின் பேண்ட்டை கீழே இறக்கி காண்பித்தாள். பத்து பவுனில் தங்க அரைஞானம் அவள் இடுப்பில் மின்னியது.
ஈ. சந்தோஷ் குமார் மலையாளத்தில் எழுதி ,கே வி ஜெயஸ்ரீயால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கதை, "மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த கதை". கண்ணால் பார்த்து அறிந்ததை, பார்வை அற்றவர்களுக்கு எப்படி விளக்குவது என்பதை சிறிதே அங்கதம் கலந்த தொனியில், நுணுக்கத்துடன் சொல்லப்பட்டுள்ள கதை. உதாரணத்திற்கு, யானை கருப்பாக இருக்கும் என்று பார்வையற்றவனிடம் சொல்ல முடியுமா? ஒரு முறை கூட , பார்வையற்றவர்களிடம் பேசி அறியாதவர்கள், இந்தக் கதை படித்தால் , ஒரு புதுவிதமான புரிதலை அடைவார்கள். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) , மெய்நிகர் உண்மை(virtual reality) பற்றி பேசும் நாம், இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்று நண்பர்கள் சிலரிடம் சொன்னேன்.
குடும்பத்தின் பெருமை காக்க, பெண்கள்தான் எல்லா தியாகங்களும் செய்ய வேண்டும். வீட்டுக்குள் ஒரு கட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும். இல்லை அப்படியெல்லாம் இல்லை, மருமகளே , கணவனை இழந்து நிற்கும் இவளையும் , அவனுக்கு முன்னால் மனைவியாக இருந்த உன்னுடன் அழைத்து செல், என சொல்லும் ஒரு ஆணை (மாமனாரை) அறிமுகப்படுத்தும் கதை - அத்தலூரி விஜயலட்சுமி தெலுங்கில் எழுதி, இளம் பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள , "தொடர் ஓட்டம்". (கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் , இவரைத்தான் (அத்தலூரி விஜயலட்சுமி) ஆஸ்டின் நகருக்கு அவர் உறவினர் வீட்டிற்கு வந்தபொழுது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன்).
கிராமத்து மிராசுதாரின் இச்சைக்கு உடன்பட மறுத்து, கிராமத்து குடிசை வாழ்க்கையை விட்டு , நகரம் வந்து , தெருவில் தூங்கி , கூலி வேலை செய்து வாழ்க்கையை பழகிக் கொள்ளும் தம்பதிகளின் கதையைச் சொல்கிறது - வி ராஜாராம் மோகன்ராவ் எழுதியுள்ள பழகிப் போகும் வாழ்க்கை.
தெலுங்கு கதைகளில், என் புருவங்களை உயர்த்த செய்த கதை , எல் ஆர் இந்திரா எழுதியுள்ள "பலாத்காரம்". ஆட்டோக்காரனால், 'ரேப்' செய்யப்பட்ட பெண் , அவளை பலாத்காரம் செய்தது, அவள் சந்தித்த எல்லா ஆண்களும் என்கிறார். அவர் சொல்லும் பலாத்காரம் ,பெண் என்பதால் , நல்ல படிப்பு படிக்க வேண்டியதில்லை எனச் சொல்லும் ஒரு தகப்பனின் பலாத்காரம். படிப்பும், வேலையும் இருந்தாலும் தனக்கென்று ஒரு மரியாதையை தராத கணவனின் பலாத்காரம். 'ரேப்' விஷயத்தில் தப்பிக்க ஒவ்வொரு நிபுணரும் சொல்லும் முறைகளை இந்த கதை விவாதித்திருப்பது , பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்களும், இல்லை, எல்லா பெண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நல்லுள்ளம் படைத்தவர்களும் படிக்கவேண்டிய கதை.
இந்த தொகுப்பில் இருக்கும் ஏழு கன்னடக் கதைகளும், சிறுவர்களின் பார்வையில் பெரியவர்களைப் பற்றிச் சொல்லும் அற்புத கதைகள். அமானுஸ்ய கதைகளின் தொனியில் , மோஹள்ளி கணேஷ் எழுதியுள்ள , செம்மானின் கங்கை, மனிதனின் பேராசையையும், அதனால் வரும் அழிவையும் அழுகுற சொல்லும் கதை. சித்தப்பா தனது வீட்டுக்கு கூட்டி வரும் பெண் பற்றிய தந்தையின் உரையாடலும், சினிமா பார்க்கச் சென்ற இடத்தில் சித்தப்பாவும் , அந்த பெண்ணும் நடந்து கொண்ட விதமும், எஸ். பி. ஜோ. குரு எழுதியுள்ள வைப்பாட்டி கதையில், கதை சொல்லும் குழந்தைக்கு வினோதமாக இருக்கிறது. நடுங்கும் குளிரில் அதிகாலையில் எழுந்து, "சம்பள நாள்" என்று குஷியுடன் வேலைக்கு செல்லும் சிறுவன் , சாராயம் குடிக்க , அவனது தந்தை ஏற்கனவே முன்பணம் வாங்கிவிட , மாலையில் வீட்டுக்கு போகும் எண்ணம் இல்லாமல் குத்துக்கல்லாக நிற்கிறான் (எழுதியவர் - நாயகபாட). தந்தை சொன்னார் என்பதற்காக, தான் திருடியதாக சொல்லப்பட்ட கேப் தொப்பியை திருப்பித்தர, பத்ம நாப பட் ஷேவ்கர் எழுதிய கதையில், மழையில் செல்லும் சிறுவனுக்கு, அந்த அத்தையும், மாமாவும் நல்லவர்கள் இல்லை என்பது தெரிந்தே இருக்கிறது. கதை சொல்லும் சக்கக்கா அவனுக்கென்று இன்னொரு கதை சொல்லுவாள் என காத்திருக்கும் சிறுவன் வரும் கதை – சந்தீப் நாயக் எழுதியுள்ள “இன்னும் ஒரு கதை”. பெரியவர்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்கும் அவனுக்கு , ராஜகுமாரன் என்று அவனை சொல்லும் அந்த அக்காவிற்கு மறுமணம் நடந்தது என்று அவன் அம்மா சொல்லவே இல்லை. அவனுக்கும் கேட்கும் தைரியம் இல்லை.
மகுடத்தில் வைரம் சூட்டியதுபோல் இன்னொரு விஷயமும் இந்தத் தொகுப்பிற்கு உண்டு. கதைகளின் சக்கரவர்த்தி பிரபஞ்சன், சிறுகதைகள் வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதியிருக்கும் முன்னுரை. அதற்கே இந்த தொகுப்பிற்கு முந்நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டும்.
நன்றி
- வ.சௌந்தரராஜன் (காற்றின்நிழல்©)
06/25/2018

Thursday 5 April 2018

தாமதமாய் வரும் காதலையும் புரிந்து கொள்ளவைத்த பாக்யலஷ்மி….




அப்படி எனக்கும் ஒரு காதல் வந்தது. ஈர்க்கும் அழகிய கனவுகள் இதழ் விரிக்கும் பதின் பருவத்திலோ, காதல் தீவிரமாய் ஆட்கொள்ளும்  இளமையிலோ அது என்னிடம் வந்து சேரவில்லை. எல்லாத் துணையையும் நிழலையும் இழந்து போன இந்த நடுவயதில் நானொரு காதலியாக மாறினேன்.

நாம் அதிகம் விரும்புபவர்களால் மட்டுமே நம்மை அதிகம் வேதனைப்படுத்தவும் முடியும். வாழ்க்கையில் ஒரு இடத்திலும் தோற்று போகாத என்னை நான் விரும்பிய மனிதர் தோற்கடித்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே இக்கட்டான  சூழலிலேயே வாழ்ந்து வந்ததால் காதலின் மகத்துவம் ஒன்றையும் நான் அனுபவித்திருக்கவில்லை. பதினெட்டு பத்தொன்பது வயதில் இசைக்கச்சேரிகளில் பாடப் போகும்போதும், டப்பிங் தியேட்டர்களிலும் துண்டு சீட்டில் ஐ லவ் யூஎன்று எழுதித் தந்திருக்கிறார்கள். ஆனால் அதை எப்படித் தொடர வேண்டுமென்று தெரியவில்லை. தொலைபேசி இல்லை. தனியே வெளியே வர அனுமதியில்லை. கனவுகளிலும் பெரியம்மா கம்புடன் கூடவேயிருந்தாள்.

முதல் முதலாய்  ஐ லவ் யூஎன்று எழுதிய காகிதத் துண்டு கையில் கிடைத்த நாளை இன்றும் நான் நினைத்துச் சிரிப்பேன். அது கிடைத்தபோது ஒரு படபடப்பு ஏற்பட்டது. என் முகத்தின் கள்ள லட்சணத்தை பெரியம்மா சட்டென உணர்ந்தாள். அப்புறமென்ன, பெரியம்மா அடியின் தாண்டவத்தையே நடத்தினாள். கொம்பு உடையும் வரை அடித்தாள். ஏதாவது ஒரு பையனோடு பேசியதால்தான் அடி வாங்கியிருந்தேன்.  அந்தப் பயத்தினால் அது போன்ற பேப்பர் துண்டுகளையும் என் காதலையும் காற்றில் பறக்க விட்டுவிடுவேன்.
சுதந்திரமாய் நான் இல்லாது போனதால் காதலின் சுகம் என்னவென்று ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. சுதந்திரமாய் வாழ வாய்ப்பு கிடைத்தபோது பருவம் முடிந்திருந்தது.

காதல் வயப்பட்ட பிள்ளைகளைப் பார்க்கும்போது எனக்கு அற்பமாயிருந்தது.  அவர்கள் முட்டாள்களாகவே எனக்குத் தோன்றுவார்கள்.

இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று இல்லையென்றே நான் நம்பினேன். ஆண் பெண் உறவு வெறும் உடல்ரீதியான உறவென்றே தவறாக நினைத்திருந்தேன். ஆனால் எனக்கும் என் நாற்பதாவது வயதில் காதல் வந்தது. எனக்கு அவருடனான காதல், அவருக்கு என்னிடம் இருந்ததாவென்று தெரியவில்லை.  அதனால் நான் பேர் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். எப்போதாவது மட்டுமே தொலைபேசியில் பேசவும், அபூர்வமாகவே பார்க்கும் நண்பர்களாகவும் இருந்தோம். எப்போதும் புத்தகங்களைப் பற்றியே அவர் பேசுவார்.  அதனால் அவர்மீது எனக்கு மிகவும் மரியாதையிருந்தது. திருமண பந்தத்தை உடைத்து வெளியே வந்து வாழும் நாட்கள். ஒரு நாள் நானும் பிள்ளைகளும் பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். நாங்கள் அந்த ரயிலில் பயணம் செய்கிறோமென்று நான் சொல்லியிருந்தேன். வண்டி எர்ணாகுளத்திற்கு வந்தபோது மாலை ஆறு மணி. அவர் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்து ஏறினார்.  குழந்தைகளுக்கு சாப்பிடவும் குடிக்கவும் நிறைய வாங்கி வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் வரேன் என்று சொல்லி இறங்கினார். நேரமாகியும் வண்டி கிளம்பவேயில்லை. அவர் திரும்பவும் வந்தார். 

வண்டி நான்கு மணி நேரம் கழிந்துதான் கிளம்புமாம். நீங்கள் திருவனந்தபுரம்போய் சேரும்போது ஒன்றரை மணியாகும். என்ன செய்வீங்க லஷ்மி?”

என்ன செய்யறது? ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிப் போவோம்,
 இல்லன்னா விடியும்வரை ஸ்டேஷனிலேயே இருப்போம்
அவர் மீண்டும் இறங்கிப் போனார்.
கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார்.
நானும் வரேன் உங்ககூட
ரயிலில் அவர் குழந்தைகளோடு பேசி, சிரிப்பும் விளையாட்டுமாய் இருந்தார். டாய்லெட்டுக்குப் பத்திரமாய் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். வண்டி திருவனந்தபுரம் வந்தபோது அவர் சொன்னதுபோல ஒன்றரை மணி. ஒரு டாக்ஸி பிடித்து எங்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர் திரும்பிப் போனார்.

அப்போதெல்லாம் எனக்கொன்றும் தோன்றவில்லை. ஏனென்றால் அப்படி எனக்கு உதவ நிறையபேர் இருந்தார்கள். உதவுபவர்களிடம் காதல் தோன்றுவது இயல்பானதில்லையல்லவா? அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. பேசிக் கொள்ளவுமில்லை. நான் அதைக் குறித்து யோசிக்கவுமில்லை. 

2001 காலகட்டத்திலெல்லாம் பின்னணிக் குரல்கொடுத்து ஏராளமான கதாபாத்திரங்களுக்கிடையில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு சினிமாவிலிருந்து மற்றொரு சினிமாவிற்கும் ஓடிக் கொண்டிருந்தேன். ரெக்கார்டிங் அறையில் நுழையும்போது நான் எல்லாவற்றையும் மறந்திருந்தேன். அந்த அறையின் உள்ளே போகும்போது நான் என் துக்கத்தை வாசலின் வெளியே வைத்துவிட்டுப் போவேன். பிறகு டப்பிங் முடியும் வரை நான் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்.  கடைசியில் எல்லாம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது அது என்னைத் தேடி வந்து சேரும். யாரும் எனக்காகக் காத்திருக்க ஆளில்லை என்ற உணர்வு என்னைப் பைத்தியமாக்கியது. வாழ்க்கை மிகவும் நிச்சயமற்ற நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருமுறை சென்னைக்கு போயிருந்தபோது வேலை முடிந்து நான் அறைக்குத் திரும்பினேன். இரவு ஒன்பது மணியிருக்கும், நிறைய நாட்களுக்குப்பிறகு அவர் கூப்பிட்டார். வழக்கம் போல பலதையும் பேசினோம். மூன்று நான்கு நாட்களாய் நான் சென்னையிலிருந்தேன். அப்போதெல்லாம் கூப்பிடுவார். அதன்பிறகு அவருடைய தொலைபேசி அழைப்பிற்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
முடிவாக ஒரு நாள் அவர், என்னை மிகவும் காதலிப்பதாகச் சொன்னார்.

முதல் முறையாக என் வாழ்வில் வார்த்தைகளால், குரல் வழியாக என்னைக் காதலிப்பதாகச் சொல்வதைக் கேட்கிறேன். அதுவும் நான் கேட்கும்படியாக. நிசப்தையாக அவர் சொல்வதை நான் கேட்டபடியிருந்தேன். நான் பேசினால் அவருடைய குரலின் சுகம் தடைபடுமோவெனப் பயந்தேன். ஆமாம், நான் காதலியாக மாறியிருந்தேன். பிறகும் நாங்கள் பேசினோம். பலவற்றையும் பேசினோம், சினிமா, புத்தகம், சங்கீதம், நான் வேலை பார்த்த படங்கள், மேலும் என்னுள்ளில் இருக்கும் பக்குவமின்மையைப் பற்றியும் அவர் பேசினார். முதல் தடவையாகத்தான் ஒரு மனிதன் என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறார். காதல் ஒரு பெண்ணை அழகாக்கும் என்பது சரிதான். ஆமாம், முதல் தடவையாக நான் அழகாயிருக்கிறேன் என்று அவர்தான் சொன்னார். அதுவரை யாரும் என்னிடம் சொன்னதில்லை. என் கணவர் உட்பட. இவர் சொல்வது கேலியோ என்றுகூட தோன்றும். எனக்கும் அப்படியொரு நம்பிக்கையில்லை. நான் காதலெனும் நதியில் மூழ்கிக் கொண்டிருந்தேன். அதுவரை திருத்தமாய் அலங்கரித்துக் கொள்ளவும் விருப்பமில்லாதவளாகத்தான் இருந்தேன். புடவை அழகாய் கட்டவோ, முகம் திருத்திக் கொள்ளவோ நான் முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. புடவைக்குப் பொருத்தமான ரவிக்கை போட வேண்டுமென்றோ அது எனக்கு பொருந்துகிறதா என்றெல்லாம்கூடப் பார்க்க மாட்டேன். நான் சுத்தமாய் என்னை வைத்திருப்பேன், அவ்வளவுதான். அவர் எனக்குப் பொருந்தும் நிறங்களைச் சொல்லித் தந்தார். நான் வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றியும், இசை பற்றியும் உலக சினிமாக்களைப் பற்றியும் சொல்லித் தந்தார்.

அவரும் என்னைப் போலவே முன்கோபியும் கௌரவக்காரராகவும் இருந்தார். குடிக்க மாட்டார், புகையில்லை. இப்படி எனக்குப் பிடித்த நிறைய குணங்கள்தான் என்னை அவரோடு நெருக்கமாக்கியிருந்தன. நாங்கள் அன்பிலாழ்ந்தோம், சண்டையிட்டோம், கோபப்பட்டோம். மகிழ்ந்திருந்தோம். மனோகரமானது அந்த நாட்கள். வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.
நான் என்னைக் கவனிக்கத் தொடங்கினேன். என் குணங்களையும் குணக்கேடுகளையும் பற்றி யோசித்து நான் தெளிவடையத் தொடங்கினேன். நான் மாறிக் கொண்டிருந்தேன். உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும். அதுவரை ரெக்கார்டிங் அறையிலும் வெளியிலும் எல்லா நேரங்களிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எல்லாரையும் கூர்ந்து நோக்கும் ஒரு பாக்யலஷ்மியாக மட்டுமே நானிருந்தேன். எப்போதாவது சிரித்தால் எல்லோரும் என்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருந்தது. அதனாலேயே எனக்கு முன்பாக எப்போதும் யாரும் தீண்ட முடியாத கோட்டினை அழுத்தமாய் வரைந்து வைத்திருந்தேன். முடியை இழுத்துப் பின்னி, ஒருவித ஆணவத்தோடு டப்பிங் தியேட்டருக்கு நான் வருவதைப் பார்க்கும்போது பலரும், இதென்ன இப்படி வருது என்று என் காதுபடச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் காதல், இழுத்துப் பின்னிய என் கூந்தலை விரித்துவிட வைத்தது. நெற்றியில் சிவந்த பொட்டு வைக்கச் சொன்னது. முகத்திலொரு புன்னகையைக் கொண்டு வந்து, மற்றவர்களை நம்பச் சொல்லிக் கொடுத்தது. ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்தில்லாமல் ஒருவரால் வாழ முடியாது என்று நான் நம்பியிருந்தேன்.

நாம் வாழ வேரொருவர் பின்னால் நின்று தாங்க வேண்டிய தேவையில்லை. நம் சக்தியுடன் தைரியமாய் நம்மை நாமே அன்பு செலுத்த வேண்டுமென்றும், எவ்வளவு அன்போடிருக்கும் அம்மா அப்பா வாய்த்தாலும் புருஷனிருந்தாலும் பிள்ளைகள் இருந்தாலும் நம் உடலையும் மனதையும் ஆரோக்யத்தோடு காக்க வேண்டியது நாம் மட்டுமே. யாரும் கடைசிவரை கூடவே இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. யாருமில்லையென்றாலும் நீ உன்னுடைய ஆத்ம தைரியத்தைக் கை விடக்கூடாது. நமக்கு மற்றவரிடம் அன்பு செலுத்த மட்டுமே உரிமையிருக்கிறது; வேதனைப்படுத்த அல்ல. இப்படியாக பல விஷயங்களை அவர் எனக்குச் சொல்லித் தந்தார்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்ற முயற்சித்தார்.
அடிமைத்தனத்தைச் சகிக்க முடியாமல் ஒரு தைரியத்தில் திருமண பந்தத்திலிருந்து வெளியேறினாலும் மற்ற சில காரியங்களில் கொஞ்சமும் தைரியமில்லாதவளாக இருந்தேன்.

2001 வரை நான் அப்படியொன்றும் ஊடகங்களில் தோன்றியதில்லை. எனக்குப் பேசத் தெரியாது.  ஊடகங்களிலும் மேடையிலும் பேசவும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் என்னை அவர் கட்டாயப்படுத்தினார்.

மேடைகளில் பேச வேண்டிய தகவல்களைக் கற்றுத் தந்தார். முதலில் பார்த்துப் படிக்கச் சொல்வார். பார்த்து வாசிப்பது அசிங்கமில்லையா என்று கேட்டால், எவ்வளவோ பெரிய ஆட்கள் பார்த்துப் படிப்பதை நீ பார்த்ததில்லையா என்று கேட்பார். எந்த விஷயம் குறித்துப் பேசினாலும் என் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களை விட நான் கூடுதல் அருகதை உள்ளவள் என்று தோன்ற வேண்டும். ஒரு களி மண்ணைச் சிற்பமாக மாற்றும் முயற்சியிலிருந்தார். நான் தலைகீழாக மாறினேன். எனக்கே என்னைப் பற்றி மரியாதை செலுத்த வேண்டிய விதத்தில் உருவத்திலும் பாவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல சமூகத்திலும் எனக்கொரு ஆளுமையை அவர்தான் ஏற்படுத்தி தந்தார்.

பிறகு என்ன ஏற்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை.
மெல்ல மெல்ல அவர் என்னிலிருந்து விலகத் தொடங்கினார். தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. பார்க்கவும் முடியவில்லை. இதற்கிடையில் எனக்கொரு விபத்து ஏற்பட்டது. ரொம்பவும் பெரிய விபத்து. ஒரு டாங்க்ர் லாரியில் இடித்து வண்டி சுக்கு நூறானது. எனக்கொன்றும் ஆகவில்லையென்றாலும் அந்தச் சாலையில் ஆட்கள் வந்து சேர்ந்தபோது சட்டென நான் கலவரப்பட்டேன். ஆனால் எனக்குக் கொஞ்சமும் பயம் தோன்றவில்லை. எனக்கு கூப்பிட்டுச் சொல்ல ஒருத்தர் இருக்கிறார். அதுதான் என் தைரியம். உடனே நான் அவரைக் கூப்பிட்டேன். என்னை அதிர வைக்கும் பதில்தான் அவரிடமிருந்து வந்தது.

என்னால் இப்போது வர முடியாது.

அந்த நொடியில் நான் நொறுங்கிப் போனேன்.
வாழ்க்கையில் ஒரு இழப்பு ஏற்பட்டால் நான் முழுவதும் தனிமையிலாவேன். நான் ஒரு அனாதைதான் என்றெல்லாம் தோன்றியது. விபத்தை விடப் பெரிய அதிர்ச்சியைத்தான் அவருடைய பதில் என்னில் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஓடி வந்து உதவியது வேறு ஆட்கள்.

இந்த நிகழ்வு என்னை மிகவும் துவளச் செய்தது.  உனக்கு ஏதாவது ஆயிடிச்சா?’ என்றுகூட அவர் கேட்கவில்லை. இதைப் பற்றிப் பிறகு கேட்டபோது மிகவும் உதாசீனத்தோடுதான் அவர் பதில் சொன்னார். ஆனாலும் நான் என்னைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவருடைய சூழல் அப்படியிருக்கலாம்.

பிறகொரு நாளில் என் சின்ன மகன் ஒரு பைக் விபத்தில் மாட்டிக் கொண்டு மரணத்தோடு மல்லுகட்டி மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் நான் அவரிடம்தான் சொன்னேன்.  நான் ஒட்டு மொத்தமாய் உடைந்து போயிருந்த நேரமது. எல்லோரிடமும் தைரியமாகவேப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்லமுடியாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போதும் அவர் வந்துவிடுவார் என்று முழுக்க நம்பினேன். எல்லாம் சொல்லி அழவேண்டுமே! ஆனால் அன்றும் அவர் வரவில்லை.  ஒரு மாதத்திற்குப் பிறகுதான் என் மகனைப் பார்க்க வருகிறார்.

ஒரு நாள் கட்டாயப்படுத்திக் கேட்டபோது சொன்னார்.
யோசிச்சு பார் லஷ்மி, என்னையும் உன்னையும் ஒன்றாகப் பார்த்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்னை விட்டுவிடு, உன் வாழ்க்கையை அது அதிகம் பாதிக்கும். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணும் ஆணும் ஒன்றாயிருந்தால் ஏற்படும் விளைவுகளை யோசித்து பார். இன்றுவரை உனக்கு ஒரு கெட்டபேரும் ஏற்படவில்லை. இனியும் அது ஏற்படக்கூடாது. இந்தச் சமூகம் நம்மைப் புரிந்து கொள்ளாது

நான் மனதோடு கேட்டுக் கொண்டேன், என்னை மிகவும் நேசிக்கிறேன் என்று சொன்னபோது இதெல்லாம் யோசிக்க வில்லையா? ஒரு ஆளை நேசிக்கவும் வேண்டாமெனவும் இவ்வளவு சுலபமாக முடியுமா?
நான் யோசிக்கிறேன், எங்களுக்கு நிறைய எல்லைகள் இருக்கிறது. குறிப்பாக எனக்கு. ஒரு உறவு வேரறுந்து போகும்போது மற்றொன்றில் வேர்பிடிப்பது சர்வ சாதாரணமானதுதான். அப்படி நான் போய் விழக்கூடாது. இனியொரு திருமணம் எனக்குப் பயமாக இருந்தது. ரகசிய உறவில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.
எல்லா ப்ரியத்தையும் மனதில் ஒதுக்கி அடைகாத்து நாங்கள் பிரிந்தோம்.

அதொரு கடினமான தீர்மானமென்று பிறகு நான் புரிந்துகொண்டேன். அவருடைய அவஸ்தை எனக்குத் தெரியாது. ஆனால் நான் உண்மையில் துடித்துப் போனேன். யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமல் நிரந்தரமாக பத்மநாபசாமி கோவிலில் தூண்களின் மறைவில் உட்கார்ந்து அழுதேன். கடவுளிடம் பேசினேன். உறவுகளில் எதற்காக என்னை இப்படி சிக்குற வைத்து வேதனைப்படுத்த வேண்டும்? முதலில் அப்பா, பிறகு அம்மா, அண்ணன், கணவரின் அப்பா, கடைசியில் இவரும். நான் நேசிப்பவர்களெல்லாம் ஏன் என்னை விட்டுப் போகிறார்கள்? யாருக்கும் என்னை வேண்டாமா?

அவர் எனக்கு ஏன் இவ்வளவு அன்பையும் கொடுத்தார்?

எதற்காக என்னை விட்டுப் போனார்?

 யாருடைய அன்பும் இல்லாமலே இந்தப் பெருவாழ்வை நான் வாழ்ந்து தீர்த்திருப்பேனே!

இதுவரை நான் ஒன்றும் கேட்டதில்லை. எல்லாக் கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொள்கிறேன். இவரை மறக்க எனக்கு உதவு தெய்வமே!

சத்தமிட்டு அழுதேன். கையில் கிடைத்த தூக்க மாத்திரைகளின் உதவியோடு தூங்க ஆசைப்பட்டேன். கேரளாவிலும் சென்னையிலும் மனநல மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் பார்த்தேன். அவர்கள் தந்த மருந்துகளையெல்லாம் சாப்பிட்டேன். இலக்கில்லாமல் கேரளா முழுக்க கார் ஓட்டி அலைந்து திரிந்தேன்.

இந்த நாட்களில்தான் புத்தகத்தின் ஆரம்பத்தில் சொன்ன பாலமந்திரத்தைத் தேடிப் போயிருந்தேன். ஆனாலும் எப்போதாவது  சுகமா லஷ்மி?’ என்று அவரிடமிருந்து ஒரு மெசேஜ் வருமென்று காத்திருந்தேன். ஆனால் அதன்பிறகு ஒருபோதும் அப்படியொரு மெசேஜ் வந்ததேயில்லை. நான் இல்லாமல் போனது அவருக்கு ஒரு பெரிய இழப்பேயில்லையோ? அவர் என்னை காதலிக்கவேயில்லை என்ற நினைவு அப்போதெல்லாம் வந்து,  என்னை மேலும் வேதனைப்படுத்தியது.

எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வெளிக்காட்டிக் கொள்ள மற்றவர்களிடம் அதிகதிகமாகச் சிரித்துப் பேசத் தொடங்கினேன்.

என் முகம் மாறிவிடக் கூடாது, யாருக்கும் ஒன்றும் தெரிந்து விடக் கூடாது. மனம் பாரம் தாங்கமுடியாமல் கனம் கூடி நின்றது. 15 வருடம் ஒரு மனிதனின் மனைவியாய் வாழ்ந்துவிட்டு பிரிந்தபோதுகூட எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நினைத்து லயித்திருக்க எதையும் என் கணவர் எனக்காய் பரிசளித்திருக்கவில்லை.

எல்லாம் சகிக்கும் சக்தி தர வேண்டி லலிதா சகஸ்ரநாமமும் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். அதீத துக்கம் மேலெழும்போது அவருக்கு சடசடவென மெசேஜ் அனுப்புவேன். ஆனால் ஒருபோதும் அதற்குப் பதில் வந்ததில்லை. ஒருவேளை நான் அனுப்பியது பதில் தர முடியாத செய்திகளாக இருக்கலாம். இல்லை, நான் பதிலுக்கு அருகதையற்றவளா, இல்லை அவர் என்னை மறந்திருக்கலாம்.

வாழ்க்கையில் தனிமைப்பட்டு விடக்கூடாதென நினைத்துதான் நான் அவரை நேசித்திருந்தேன். பணமோ  சொத்தோ பாதுகாப்போ எதுவும் வேண்டாமெனக்கு. இதெல்லாம் எனக்காக நானே ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஆத்மார்த்தமாக நேசித்ததுதான் நான் செய்த குற்றம். எதுவும் எதனுடைய தொடக்கமுமல்ல. முடிவுமல்ல என்று எங்கேயோ படித்திருக்கிறேன். ஆனால் இது என் தொடக்கமாயிருந்தது.

கடைசியும்தான். இனி ஒருமுறையும் யாரும் என்னை இப்படி நேசிக்கவும் வேதனைப்படுத்தி அழ வைக்கவும் அனுமதிக்க மாட்டேன். நம் மனசுதான் நம்முடைய உற்ற நண்பன். அந்த நண்பனை அளவில்லாமல் துக்கப்படுத்தினால் அந்த வலி தாங்கமுடியாமல் அது நம்மிலிருந்து நழுவி விடும். கடைசியில் அது போய் சேர்ந்திருப்பது ஏதாவது பைத்தியக்கார விடுதியிலாக இருக்குமென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் மனதை நான் ஒருபோதும் வருத்தப்பட வைக்கமாட்டேன்.

ஒருவேளை இந்தப் பிரிவை அவர் முன்பே தீர்மானித்திருந்திருக்கலாம். என்னை அதற்காக அப்படியாக அவர் தயார்ப் படுத்தியிருக்கலாம். இரண்டரை வருடம் நான் மன அளவில் தளர்ந்து போயிருந்தாலும் இன்று நான் அவர் சொல்லித் தந்ததுமாதிரியே வாழ்கிறேன். எல்லோரையும் நேசிக்கிறேன். ஆனால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, பிள்ளைகளிடமிருந்தும் கூட.

பல இக்கட்டுகளையும் சமாளித்து வந்த பெண்ணல்லவா நான். இது அவ்வளவு பெரிய பிரச்சனையா? சுயமாக ஆசுவாசப்படுத்தி என்னை நிதானப்படுத்த முயன்றேன். மற்ற சமூக, பண்பாட்டு பிரச்சனைகளை நோக்கி மனதைத் திருப்பிவிட்டேன்.  நிறைய பயணம் செய்தேன்.  மூகாம்பிகையிலும் குடஜாத்ரியிலும் போய் தியானித்தேன். அவரைப் பார்க்க சாத்தியப்பாடுகளிருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் தவிர்த்தேன்.  ஒருபோதும் அவரை நினைக்காமலிருக்க, அவர் கொடுத்ததையெல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பைத்தியகாரத்தனம் தான் என்று புரிந்தாலும் அவரை மறக்க என்னால் முடியவில்லை. 

இந்தக் காதலும் இழப்பும் அவருக்கு வலியேயில்லையென்றால் நான் இப்படி அவஸ்தைப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆனாலும் ஒரு சுகமான வலியாக அந்தக் காதலை நான் மனதில் பொத்தி வைத்திருக்கிறேன். இனி ஒருபோதும் மற்ற யாரையும் இதுபோல நேசிக்க வாசல் திறந்து விடக் கூடாது என்று ஆசைப்பட்டு அவரை நேசித்து நேசித்து மறக்க முயற்சி செய்கிறேன்.

Friday 30 March 2018

மரணம் அழுத்திச் சொல்கிறது





மரண வீடு உருவகங்களின் வசிப்பிடம். அங்குள்ள காட்சிகளில் எல்லாம் மிகையான அழுத்தம் இருக்கிறது.  பிரத்யேகமான சாயல் இருக்கிறது. மரண வீட்டின் திண்ணை நிழலில் உட்கார்ந்து அஞ்சாங்கல் விளையாடும் குழந்தைகள் வாழ்வின் ஸ்திரத் தன்மையைப் பற்றி எதையோ உணர்த்துகிறார்கள். வந்ததிலிருந்தே நிறுத்தாமல் அழும் ஒரு குழந்தை அங்கு வியாபித்திருக்கும்  ஏதோ கேட்டுணரமுடியாத சுருதிக்கேற்ப அழுதது. காப்பி மரத்தினிடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கறுப்புப்பூனை, மிகச் சரியான இடைவெளி விட்டு தொழுவத்திலிருந்து எழும் கறவைப் பசுக்களின் சப்தம், தலையைத் திருப்பி திருப்பி துர்சப்தத்தைக் கேட்ட கோழிகள் என எல்லாமுமாகச் சேர்ந்து அசாதாரணமான சூழலை உருவாக்கின. அங்கேயிருந்து தன் மகளின் முகத்தைப் பார்க்கும் அப்பாவின் கண்கள் என்றென்றைக்குமாய் இழந்தே ஆகவேண்டிய ஒருத்தியல்லவா இவள் என்ற எண்ணத்தில் தயங்கும்.  அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரியன்பின்             அலைகள்  நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள். கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.  அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. ஒவ்வொருவரின் இறுதி பரிணாமமாக மாறி இருக்கும் அந்த பூத உடல் கௌரவத்தோடு இருக்க உங்களை நிர்பந்தித்தபடி இருக்கும். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு  பின்புலம். மரண  வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின்  புன்னகை  மேலும் மர்மமாகப் பரவி வருவதைத் தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

பழங்கலத்தின் திண்ணையின் கீழ் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருக்கும் சுருண்ட முடியும்  நடுத்தர வயதுமுடைய கருப்பியின் தனிமையான கண்ணீருக்குத்  தீவிரம் அதிகம்.   கருப்பியின் ஒரு முடி இழையில் எத்தனை சுருள்கள் இருக்கிறதென்று ஒரு நாள் சுமித்ரா பிரித்துப் பார்த்தாள். ஒவ்வொரு முறை பிரித்த போதும் முன்னால் பிரித்த பாகம் முன்னைவிடச் சுருண்டது. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தச் சுருண்ட முடி எப்படி கண்டங்கள் தாண்டி, பெருங்கடல் கடந்து மலைப்பாதை ஏறி கல்பட்டாவில் பஸ்ஸிறங்கி உன் தலையில் வந்து உட்கார்ந்தது என்று சுமித்ரா அவளுடைய குளிர்ந்த சிரிப்பினூடே பலமுறை கேட்டிருக்கிறாள்.

மாலை நேரங்களில் பழங்கலத்தின் தூணில் சாய்ந்து நின்று சுமித்ராவும், தடுக்கில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கருப்பியும் எவ்வளவோ நாட்களைக் கடத்தியிருக்கிறார்கள். பணியன் - பணிச்சிகளைப்போல நீண்ட நேரம் குத்துக்காலிட்டு உட்கார பூமியில் வேறு யாராலும் முடியாது. பணிச்சிகள் நடவு நட்டுவிட்டு உட்கார்ந்தால் அறுவடை காலம்வரை அப்படியே உட்கார்ந்து விட்டு, பின் நெல் அறுக்க அரிவாள் சாணை பிடிக்க மட்டுமே எழுந்திருப்பார்கள் என்று  சுமித்ரா கருப்பியைப் பரிகசித்திருக்கிறாள். சின்னதாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில்  இறுகக் கட்டிய வேட்டியை உதறி மீண்டும் சரியாகக் கட்டி உட்கார்ந்து விடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பாத்திரம் கழுவித்தரவோ, இலை அறுத்துக் கொண்டு வரவோ போவதைத்தவிர மீதி நேரங்களில் திண்ணையிலோ, காப்பிச் செடியின் நிழலிலோ குத்துக் காலிட்டு உட்கார்ந்து விடுவார்கள். உட்கார்ந்த பிறகு எழுந்திருக்க மிகவும் யோசிப்பார்கள். தங்குவதற்கு இடம் இல்லாததால், கிடைக்கும் இடத்தில் உட்காரவும், உடல் மறைக்க ஒரே ஒரு துண்டு மட்டுமே மார்பில் கட்டும் வழக்கமுள்ள பணிச்சிகள் இப்படி உட்காருவதையே இருப்பிடமாக்கியும் பழகியிருந்தார்கள். திருமணமான புதிதில் சுமித்ரா, “இந்த பணிச்சிகள் உள்ளாடைகளுக்குப் பதில் குத்துக் காலிட்டு உட்காரப் பழகிக் கொண்டார்கள்,” என கீதாவுக்குக் கடிதமெழுதியிருக்கிறாள்.

வாசுதேவன் வீட்டில் இல்லாத நேரங்களில் கருப்பி சுமித்ராவின் முடி சிக்கெடுக்க, தலை உலர்த்த என ஒத்தாசைக்கு வருவாள். ஒரு நாள் குளிக்கலன்னாலும் எனக்கே என் பக்கத்தில் நிக்க முடியல. நீ குளிச்சு எத்தனை நாளாச்சு? இல்ல எப்பவாவது குளிக்கற பழக்கமிருக்காஎனக் கேட்கும் சுமித்ராவுக்கு, ஆனாலும் இவளிடமிருந்து எந்த நாற்றமும் வராதது ஆச்சர்யமாக இருக்கும். சுமித்ரா ஆற்றில் குளித்து முடித்து மேலேறி வரும்போது பணிச்சிகளின் குழந்தைகள் இடுப்புத்துணியோடு நாலைந்து முறை பல்டி அடித்து, தண்ணீரைக் கலக்கி விளையாடி, அப்படியே வெயிலில் நின்று, மெல்ல நடுக்கம் நீங்கி, காய்ந்த பிறகு அதே துணியோடு பட்டறைக்கோ, களத்திற்கோ போவார்கள். ஒன்று மட்டும்தான் அவளுக்குப் பிடிக்காது. வழியில் யாரும் இல்லையென்று தெரிந்தால், சற்றே முன்னால் சாய்ந்து நின்று கால் அகற்றி அணைகட்டி நிறுத்தின தண்ணீரைத் திறந்து  விடுவது போல  மூத்திரம் அடிப்பார்கள். உட்கார்ந்துதான் போனால் என்ன? மற்ற நேரங்களில் மட்டும் இப்படி குத்துக் காலிட்டு உட்காருகிறீர்களே! கேட்க நினைத்தாளே தவிர இதுவரை கருப்பியிடம் கூடக் கேட்டதேயில்லை.

எல்லா பணிச்சிகளும் சோம்பேறிகள் என்று சுமித்ரா சொல்வாள். நகர்ந்து உட்காரக்கூட தோன்றாமல் ஒரே இடத்தில் இப்படி உட்கார்வதில் என்ன சுகம் இருக்கிறதோ?

சுமித்ராவைத் திருமணம் செய்து புளிக்கல் வீட்டுக்குக் கூட்டி வரும்போது கேசவனுக்கு மூன்று வயதிருக்கும். அவனை முற்றத்தில் சாய்ந்து நிற்கும் பலாமரத்தில் ஏறி விளையாட விட்டுவிடுவாள் கருப்பி. பட்டறையிலிருந்து வரும் வழியில் பாலுக்கர பொயிலியிலிருந்து ஒளித்து, பறித்து வந்த ஆரஞ்சையோ கொய்யாவையோ எடுத்து வந்து சமையலறை கூரைகளின் மூங்கில் கழிகளில் தட்டி இனிமையாய் கூப்பிடுவாள்.

எளாம்ப்ராட்டி” (இளம் தம்புராட்டி)
இந்த அழைப்பின் பொருளென்னவென்று சுமித்ரா வாசுதேவனிடம் கேட்டபோது அவர், வீட்டுக்குப் பெரியவரை பாப்பன்என்றும் அவருடைய மனைவியை பாப்பத்திஎன்றும் கூப்பிடுவார்கள். நீ சின்ன எஜமானி அம்மா,  இளம் தம்புராட்டி. நான் இளம் தம்புரான். அதைத்தான் அவர்கள் எளாம்ப்ராட்டி - எளாம்ப்ரான் என்று கூப்பிடுகிறார்கள் என்றார். சுமித்ரா அன்றே கீதாவுக்கும் சுபைதாவுக்கும் கடிதமெழுதிளாள். ஏண்டி கழுதைகளா, நான் இங்க இளைய தம்புராட்டி தெரியுமா? உங்களைப் போல வீட்டு வேலைக்காரி இல்லை. செய்த வேலைக்கு மாமியார் இன்னைக்கு எவ்வளவு மார்க் போடுவாங்கங்கறது தானே உங்க கவலையா இருக்கும்? ஆனா எனக்கு கட்டளை இட்டபடி நடந்தால் போதும். இதோ இப்பகூட ஒரு அடிமைப்பெண் இரண்டு கிண்ணங்களில் வைத்துத் தந்த, இப்போதுதான் பறித்தெடுத்த கொய்யாக்காவை நான் பொறுமையாக சுவைத்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியுமா, வயநாட்டில் விளையும் கொய்யாவுக்குள் அப்படி ஒரு குளிர் இருக்கும். அதே அளவு இனிப்புமிருக்கும். அங்கே விரல் அளவில் பழுக்கும் காய் இங்கே தொடை அளவு பெருத்திருக்கும். ஃப்ரஷ்நெஸ்னா உங்களுக்கு அங்க சூடுதானே. இங்கே  குளிர்.  கொடுத்து வைத்திருக்க வேண்டும் கழுதைகளா

கீழே பட்டறையிலிருந்து குலை நடுங்கும் அலறல் சத்தம் கேட்டு மாதவியை கூட்டிக் கொண்டு சுமித்ரா போனபோது, அடுப்புத் திண்ணையில் கைகள் குத்திநின்றபடி அலறிக் கொண்டிருந்தாள் கருப்பி. கருப்பி அலறாதஎன்று அதட்டியபடி பக்கத்தில் அவள் அம்மா காளியும் நின்று கொண்டிருந்தாள். பிரசவிக்கும் பெண்களிடமிருந்து வரும் அனைத்து அழுக்குடனும் மேலும், நிர்வாணத்துடனும், வெட்கத்துடனும் மன்னிப்புக் கோரும் கண்களுமாய் கருப்பி அன்று இவளைப் பார்த்தபடி கிழிந்த பாயில் படுத்துக்கிடந்ததை சுமித்ரா எப்போதும் நினைப்பதுண்டு. அதற்கான பிராயசித்தமாகக் கூட இருக்கலாம், சுமித்ராவின் நிழலாகக் கூடவே இருந்தாள்  கருப்பி. அவளால் முடிந்த  நாட்களில் ஒரு நாளும்  சுமித்ராவின் வீட்டிற்குப் போகாமலிருந்ததில்லை.

கருப்பியின் வெள்ளை வெளேறென்ற புளியங்கொட்டைப் பற்களைப் பார்த்து டூத்பேஸ்ட்காரர்களுக்கு ஒரு எதிர்விளம்பரம் கொடுக்க வேண்டுமென்று சுமித்ரா நினைப்பாள். எவ்வளவு தேய்த்தாலும் மஞ்சள் நிறம் மாறாத வாசுதேவனின் பல்லையும், உமிக்கரியையோ, மாவிலையையோ, வேப்பங்குச்சியையோ கூட பார்த்தேயிராத கருப்பியின் பல்லையும் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் சுமித்ரா. அது அவர்களுடைய உணவு பழக்கத்தினால் கூட இருக்கலாம். பழைய வயநாட்டின் நீளமான வரப்புகளில் நண்டு வளைகள் மிகுந்திருந்தன. தென்னங்குச்சியின் மெலிதான முனையோ, நாணல் தண்டோ எடுத்து குத்திக் கிளறினால் ஏற்படும் குடைச்சல் சகிக்கமுடியாமல், அந்த குச்சியைப் பிடித்தபடி நண்டுகள் வெளியே வரும். அதைப் பிடித்து, சுட்டு அல்லது அவித்து கூடவே ஏதாவது தழையோ, தாம்போ பறித்து குழம்பு வைத்து, பூசணி இலையை வதக்கி, கஞ்சி வடிக்காத சோற்றுடன் சாப்பிட்டார்கள். பின்னாட்களில் ரசாயன உரம் வயநாட்டின் நண்டுகளை அழித்தது. தழை தாம்பின் சௌந்தர்யத்தையும் கருக்கியது. பணியர்கள் பித்தம் பிடித்த முகமுள்ளவர்களாக மாறினார்கள். அவர்களின் வெள்ளை பற்கள், உடைந்த மஞ்சள் பற்களாக மாறிப் போயின. கடிப்பதெல்லாம் விஷமான பின் குள்ளநரிகள்கூட வயநாட்டில் அபூர்வமாயின. நரிகள் ஊளையிடுவது  கூட தூரத்தில் கேட்கும் சப்தத்தில் ஒன்றானது.

கருப்பியின் வாழ்க்கையில் நடந்த எல்லா  நிகழ்வுகளிலும் சுமித்ராவுக்கும் பங்கிருந்தது. மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகே கருப்பியின் பாஷையை சுமித்ரா புரிந்து கொண்டாள். அதற்காக கருப்பியை விட சுமித்ரா அதிகம் விட்டுக் கொடுத்திருந்தாள்.

கருப்பி, இப்படியே பண்ணான்னா உன்னோட பணியன் கொராம்பிய நான் அடிச்சே அவனைக் கொன்னுருவேன்

தோட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கும், மைசூர் வாழையும், இஞ்சியும் திருடுவது எல்லை மீறிப் போனபோது கொரம்பியை வாசுதேவனே போலீசில் பிடித்துக் கொடுத்தார். சுமித்ரா வாசுதேவனின் காலில் விழுந்து அவனைக் காப்பாற்ற சொல்லி அழுதாள். கொரம்பனை போலீஸ் காலில் அடித்து நடக்க முடியாமல் கூட்டிப் போனதைப் பார்க்க பாவமாக இருந்ததால் வாசுதேவனே அவனை ஜாமீனிலும் வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது.

கொரம்ப’ - பணியன்கள் மழையில் வேலை செய்யும்போது பயன்படுத்தும் குடையின் பெயர் கொரம்ப’. ஒரு வேளை இந்த பூமியின் மிக பெரியதும், பாரமானதுமான குடையே அதுவாகத் தானிருக்கும்.  ஒரு சிறிய குடில் மாதிரியான குடை.

மூங்கில் வாரைகளைக் கிழித்துச் சின்னதாகப் பின்னி, மடித்து, உள்ளே *கூவ இலை வைத்து, இரண்டு தட்டாகப் பின்னி, ஆஜானுபாகுவான ஒரு ஆளுக்கு  நெஞ்சு வரை உயரமிருக்கிற பெரிய குடை. மழையையும், காற்றையும் தடுத்து, உள்ளே உட்கார்ந்தால் மாடத்திற்குள் உட்கார்ந்தது போல பாதுகாப்பு தரும். வசதியாக உட்கார்ந்து அழும் குழந்தைகளைப் பார்த்தால் பிரசவிக்காத பெண்களுக்குக் கூட பாலூட்டத் தோன்றும். அப்படி ஒரு குடை அது. காற்றுக்கு ஈடு கொடுத்து குளிர் தெரியாமல், மிகவும் வசதியாக அதற்குள் நின்று பணிச்சிகள் நாற்றெடுக்கவும், நடவும் செய்தார்கள். சந்தோஷத்தில் காற்றில் பரவ சிரிக்கவும், துக்கத்தில் தேம்பி அழவும் செய்தார்கள். சுமித்ரா அந்தக் குடையை உயர்த்திப் பிடித்துப் பார்த்திருக்கிறாள். இருபத்தைந்து ராத்தல் கனம் இருக்கும். ஏன் இப்படி குடையின் பெயரை மனிதர்களுக்கு வைக்கிறீர்கள் என்று கருப்பியிடம் சுமித்ரா கேட்டிருக்கிறாள். கேட்கும் போதே அதுவும் நல்லதுதானே என்றும் அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

நாங்க அப்படித்தாம்மா வெள்ளி, பூச்சி, கரப்பான், கரையான், கைம வெளியன், தொண்டி, தேன், தும்பி, சொரியன் பேக்கன், மாரி, பொந்து, முனியன், இப்படித்தான் பேரு வைப்போம்.   இந்தப் பூவுலகின் பூச்சிகள், உலோகங்கள், நெல் விதைகள், நிறங்கள், ஊனம் தான் அவர்களின் பெயர்களாகியிருந்தன. பூச்சி, உலோகம், விதை, நிறம், ஊனம் போல அவர்களும் குளிப்பதில்லை! சரியாக உடைகள் மாற்றுவதில்லை. நாட்கள் போகப்போக தவிட்டின் நிறத்திலும், தழையின் நிறத்திலுமாக மாறியிருந்தன அவர்களது ஆடைகள்.     கண் முன்னால் புதிய மல் துணிகள் சேற்றின் நிறத்தினை   அடைந்தன. பிரபஞ்ச ஆரம்பத்திலிருந்த நிறம். இன்னுமதிகமாக கசங்கவோ, பழையதாகவோ முடியாத நிறம்.

* கூவ இலை - அரரொட்டி மாவு கிழங்கின் இலை.


ஒருநாள் கருப்பி சுற்றிலும் யாருமே இல்லாதிருந்த போதும் குரல் தாழ்த்தி, அந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். அவளுடைய மூத்த அண்ணன் கைம, அதீத போதையில் புருஷன் கொரம்பியை அடித்து வெளியில் தள்ளிவிட்டு அவளைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தான். முன்பெல்லாம் அவர்கள் அப்படியொன்றும் பாதுகாப்பின்மையோடு வாழ்ந்ததில்லை. நோயையும், வலியையும், சந்தோஷங்களையும், சந்தேகங்களையும் அவர்கள் கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு நிம்மதியாய் வாழ்ந்தார்கள். குலத்தலைவர்களான மூப்பர்கள் மேற்பார்வையில் உடுக்கை அடித்து, பீப்பி ஊதி கடவுள் பக்தியில் தங்களை மறந்திருந்தார்கள். அவர்களின் கடவுள்கள் வெற்றிலைத் தோட்டத்திலோ, கள்ளிச் செடியின் அடியிலோ, ஜாதி இந்துக்களின் கடவுள்களிடமிருந்து தொடமுடியாததொரு தூரத்தில் தாழ்மையோடும், அதே சமயம் அருள் வந்தால் உக்ரத்தோடும் உறைந்திருந்தார்கள். பரவாயில்லை, அழ வேண்டாம். இனி அப்படி நடக்க நீ அனுமதிக்காதே. பொம்பளங்க   நாம என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் நடக்காம பாத்துக்கணும்.என்று சுமித்ரா சமாதானம் சொன்னாள். ஒரு காலை திண்ணையிலும் மறுகாலை மடக்கியும் உட்கார்ந்திருந்த அவளிடமிருந்து பிளேடை வாங்கி நகம் வெட்டிக்கொண்டே அதன் பின் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் கருப்பி. வெகு நேரம் தலை குனிந்து அமைதியாயிருந்தார்கள் அவர்கள். எதற்கோ இருவருக்குமே அப்படியொரு மௌனம் தேவைப்பட்டது.