Thursday, 27 February 2014

நாங்கள் இருக்கிறோம் அப்பா…



’’குட்மார்னிங் ஷைலு, நான் பாலு பேசறேன்’’
ஒவ்வொருமுறை என் அலைபேசியில் அவர் பெயர் வரும்போதும் நான் பதற்றமாகிவிடுவேன். இயல்பாய் பேசத்தொடங்க பத்து நிமிடங்களாவதாகும்.  எவ்வளவு பெரிய ஆளுமை அவர். எத்தனை பேருக்கு ஆதர்ஷம், கனவு, வாழ்நாள் லட்சியம், தொலைதூரத்து ஏக்கம், மட்டுமல்ல தன் மைல்கற்களை தானே தாண்டிய ஒரு அபூர்வம், அதன் வழி சிந்தாமலிருக்கும் பூரணத்துவம்.
.
‘‘ஷைலு என்னை அப்பான்னு கூப்பிடும்மா, மற்றவங்க என்னை கூப்பிடறதை விட நீ  கூப்பிடனுன்னு  ஆசையாயிருக்கம்மா’’ என்ற அவரை அப்பா என்று என்னால் கடைசிவரை  கூப்பிட முடிந்ததில்லை. ஒரு மஹா சமுத்திரத்தை எனக்குள் மட்டும் தேக்கி வைத்திட எனக்கு தைர்யம் வந்ததேயில்லை.
‘‘நான் கெளம்பறேன் ஷைலம்மா’’ என்று ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் மறக்காமல்  சொல்வீர்களே, இறுதி சந்திப்பில் மட்டும் என்னிடம் சொல்லிக்கவேயில்லயே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்தபோது ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் ஷைலு, நல்லாயிருக்கேன் என நான் நம்பும்படி சொன்னீர்களே சார்.  உள்ளுக்குள் எதை மறைத்து வைத்திருந்தீர்கள்? ஏன் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? பிறந்து சில மாதங்களிலேயே அப்பாவை இழந்த எனக்கு எதற்காக அந்த உறவின் தளிர்களை தரிசிக்க வைத்தீர்கள்? தலைகோதி கைபிடித்து எதற்காக அதன் எல்லைவரை அழைத்துசென்றீர்கள்?
ஆனாலும் ஆனாலும் எனக்குள்  இதுவரை சேமித்துவைத்திருக்கும் நினைவுகள் போதுமெனக்கு. இந்தப் பேரிரைச்சலிலும் நான் நிறைவடைந்திருக்கிறேன்.
நான் நல்ல சினிமாவை பார்க்க மட்டுமே தெரிந்தவள். அதை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடத் தெரியாது. எனக்கு அன்பை பெறவும், பொத்தி பாதுகாக்கவும் அதனை அடுத்த நெஞ்சுக் கூட்டிற்குள் கடத்தவும் மட்டுமே தெரியும், அதனால்மட்டுமே நான் அவருடைய மகளானேன். பார்க்கிற எல்லோரிடத்திலும், இது  ‘ஷைலு’ என் மக என நானே கூச்சப்படுமளவுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்.
 தன் அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காக திருவண்ணாமலைக்கு வந்த அவர் தினமும் மாலையில் ‘ வம்சி’  அலுவலகத்திற்கு வருவார். மிகவும் வித்தியாசமானதொரு காஸ்ட்யூமில் தொப்பியை கழற்றி வைத்துவிட்டு தலையில் துண்டு கட்டி அதை தோளுக்கும் சற்று கீழே தொங்கவிட்டுக் கொண்டு வந்து உட்காருவார். சென்னையில் கூட கிடைக்காத உலகத் திரைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறீர்களே என ஆச்சரியப்பட்டு கை நிறைய படங்களை அள்ளி சேகரித்துக்கொள்வார். புத்தகக் கடைக்கு வரும் நண்பர்களுக்கு அவரின் இருப்பு பேரதிர்ச்சியாக இருக்கும். என்ன சாப்பிடலாமென்றால் ‘பகோடா சொல்லம்மா, கார பொரி சாப்பிடலாம்’ என்று கேட்டு சாப்பிடும் அவரை தெருவில் போவோர்களும் வருபவர்களும் அதிசயமாய் பார்த்துகொண்டே போவார்கள். கடைக்குள்ளே வரும் வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதை நான் பார்த்ததுண்டு. ஒரு டீ குடித்துவிட்டு நாங்கள்  மலை சுற்றும் வழியிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று கதைகளாகப் பேசிக்கொண்டிருப்போம். தமிழின் ஆகச் சிறந்த கதைகள், மொழிபெயர்ப்பு கதைகள்  தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் , தன் சினிமா அனுபவங்கள்  தான் எடுக்கப் போகும் திரைப்படங்கள் என்று சுழலும் அப்பேச்சிலிருந்து துண்டித்துக்கொள்ள எப்போதும் மனசே வந்ததில்லை.
 இரு நாட்கள் எங்களுடன் தங்க வந்திருந்த சாரும் மவுனிகாவும் ஒரு மதிய உணவிற்கு பிறகு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அன்று மாலை அவரின்  கதைநேரக்கதைகளை திருவண்ணாமலை பார்வையாளர்களுக்காக திரையிட்டோம். மிகக் கண்டிப்பானதொரு வாத்தியாராய் மாறி படம் பார்ப்பதற்கு வைக்க வேண்டிய கலர், காண்டிராஸ்ட், ஒலி என  சொல்லித் தருகிறார். ஆப்பரேட்டருக்கு அது சரி வர புரியாதபோது அவரே குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதை சரி செய்கிறார். தன் படைப்பு மிகச் சரியான வடிவத்திலும் துல்லியத்திலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்ற ஒரு படைப்பாளிக்கே உரிய ஆர்வம் பிரதிபலித்த நிமிடங்கள் அவை. என்னுள் பிரமிப்பாய் நிலைபெற்றதும்கூட.
அடுத்த நாளே வாய்த்த  இரண்டு மணி நேர கார் பயணம் போதும் என் வாழ்வு அர்த்தப் பட.  மாலையும் இரவுமல்லாத  மங்கும் பொழுது அது. சில நேரங்களில் நாம் நினைக்கும்போதே மழை பெய்யுமே அது போல, என்னவென்றே தெரியாமல் காலையிலிருந்தே மனம் சந்தோஷத்தில் அலை அடிக்குமே அது போல முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சார் சொல்லும் ஒவ்வொரு கதையையும் நானும் படித்திருந்தேன். ஜி.நாகராஜன், தி.ஜா., சுந்தர ராமசாமி, அவருக்கும் எனக்கும் எப்போதும் பிடித்த பிரபஞ்சன் என அடித்த சுழல் லா.ச.ரா. வில் வந்து நிலை கொண்டது. லா.ச.ரா.வின் பச்சைக் கனவொளியில்  கிறங்கிய பேச்சின் நடுவே ’எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா  நான் கொஞ்சம் உன் மடியில் படுத்துக்கறேனே’ என பின்னிருக்கையில் என் மடியில் படுத்து உறங்கிப் போன மவுனியை எங்கள் கதாநாயகர்களும் நாயகிகளும் தொந்தரவு செய்யவேயில்லை.
இந்த ஐந்தாறு வருடங்களில் அநேகமாய் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசுவார். தன் சினிமா பட்டறையில் உச்சமாக இலக்கிய வகுப்பெடுத்த பெருமிதத்தை, தன் மாணவன் மிகக் கண்டிப்பாக நவீன இலக்கியம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை, எதோ ஒரு மாணவன் கதைகளைப் படித்தபின் எழுதிக்கொடுத்த சினாப்சிஸில் தன்னை கரைத்துக் கொண்டதை, அவருக்குப் பிடித்த அவருடைய மவுனி புள்ளிகுத்த முடியாத காரணங்களால் அவரிடம் பேசாமல் இருந்த துக்கத்தை பேசி ஆற்றிக் கொள்ள, எப்போதும் படைப்பாளியிடம் அந்தஸ்து தள்ளியே நிற்கும் மாயைக்கு தான் இரையாகாத பேராண்மையை, இந்த வயதில் தான் தனியனாய் வாழ நேரிட்ட துயரம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் அடுத்த அழைப்பிலேயே மழை நீர் முகத்தில்பட்ட குழந்தையாய் குதூகலிக்கவுமான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருந்தது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்ல தான் தான் மிகப்பொருத்தமானவன் என்றும், அவனவன் தன் வாழ்க்கையிலிருந்துதானேம்மா படம் எடுக்க முடியும், என் படங்கள் எப்போதும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாவேதான் இருக்கு என்றும்  சிலாகிப்பார். நான்தான் அவரின் சோகங்களிலிருந்து வெளிவரத்தெரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
.
2011 சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்த என்னிடம்  வந்து  உட்கார்ந்து ’ஒரு டீ சொல்லம்மா’ என்று பேச ஆரம்பித்தார். வழக்கம்போல மானசி தாத்தாவிற்காக ப்ளாக் டீ வாங்கி வர ஓடினாள். வெற்றியோட  ஆடுகளம் படம் பாத்திட்டு நேரா வரேம்மா, அய்யோ எப்படி எடுத்திருக்கான், ஜட்ஜஸ் சரியா அமஞ்சா இந்தப்படம் ஆறு அவார்டு வாங்கும், ஒரு வேளை ஜூரி அவார்டு ஜெயபாலனுக்கு கிடைக்கும். சொந்தக்குரலில் பேசியிருந்தால் தேசிய விருதே கிடைக்கும் என்றார்.  அந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட  தேசிய விருதுகள் அவ்விதமேயானது. விருது அறிவிக்கப்பட்ட அன்று அவருக்கிருந்த சினிமா நுட்பமும் சரியான திரைப்படம் குறித்த தன் அவதானிப்பும் தன்  வாழ்வை சினிமாவில் மட்டுமே வைத்து கரைத்துக்கொண்டிருக்கும் அக்கலைஞனின் அசாத்திய நம்பிக்கையும் என்னை உறைய வைத்தது.
என்  ‘வம்சி புக்ஸ்’ சில புத்தகங்களை பதிப்பிக்கும்போது ஒரு பதிப்பாளராய் பெருமிதத்தில் லேசாய் என் மனம் ததும்பிக்கொள்ளும், அதில் எப்போதும் எங்கள் பாலுமகேந்திரா சார் தான் இருப்பார். எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் தான் உருவாக்கிய கதைநேரக்கதைகளை மூன்று பாகங்களாகவும் தனக்கு எப்போதும் ஃப்ரெஷ்ஷாக பார்க்கத் தோன்றும் வீடு படத்தையும் புத்தகமாக்கி அவர் கைகளில் கொடுத்து அந்த முக சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் நான் தரிசித்துவிட்டேன். அட்டை வடிவமைப்பில் சின்ன சின்ன திருத்தங்களைக் கூட மிக நுட்பமாகப் பார்த்து தன் திரைப்படக் கல்லூரி அலுவலகத்திற்கு டிசைனரை வரச்சொல்லி, திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி சரிபார்த்து என அவர் காட்டும் பொறுமையும் படைப்பின் மீதான அக்கறையும் நாம் அவரிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டியது. வீடு திரைக்கதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்வது தொடர்பாக ஒரே நிமிடத்தில் முடிவெடுத்தோம். ‘ என் அம்மாவுக்குன்னு போடலாம்மா. சரிதானே ஷைலு’ என்றவர் மிக அற்புதமான கவிதையாய் ஒரு சமர்ப்பணம் எழுதி அனுப்பினார்.
.மனுஷ்யபுத்திரனின் கவிதை வரி போல ‘ நாளைக்கு வந்தேன்’ எனச் சொல்லும் குட்டி  இளவரசியின் மனசொத்தவர்.காலம் நேரம், ஒரு தேதி வைத்து வேலைகளை முடிப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் கூப்பிடுகிறேன்.
’சார், ஷைலஜா பேசறேன் சார்’
’அய்யோ ஷைலு  நம்புவியாம்மா நீ நானே கூப்பிடணும்னு இருந்தேன். ஐ வாஸ் சேர்ச்சிங் யுவர் நெம்பர். புது நெம்பர் உன்னோடது சேவ் பண்ணியிருந்தேன். அத எனக்கு எடுக்கத் தெரியல ஷைலு. ஐம் சாரி ஷைலு வீடு பட டிவிடியை நான் இன்னும் முன்னாடியே குடுத்திருக்கணும்மா’
‘சார் தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்ல சார், நான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கமட்டும்தான் கூப்பிட்டேன்’
’எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்கேன். ஐ ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்’
பேசி இரண்டு நாட்கள்கூட முழுமையாய் கடந்துபோகவில்லையே. என்னவாயிற்று சார் உங்களுக்கு?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், மாலையில் எங்களுடன் மூன்று மணிநேரம் இருப்பார். கூட்டம் அதிகமாகயிருக்கும் நீங்கள் வரவேண்டாமென்றால் ‘ஆஃபீஸ்ல போரடிக்குது ஷைலம்மா, என் பேரப் பிள்ளைகளோட இருக்கேனே’ என்று ஆசை ஆசையாய் வருவார். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வாசகனையும் சினிமா தாகம் கொண்டவர்களையும் பெயர் கேட்டு  ’வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா’ என்று எழுதி தேதியிட்டு கொடுத்து நெகிழவைப்பார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளத் துடிக்கும் எந்த இளமனதையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை. இனி நான் நிறைய டெலி ஃபிலிம் எடுக்கப்போகிறேன். சக்காரியாவின் கதைகள் தனக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறதென்றும் அவருடைய  ‘யாருக்குத்தெரியும்’ கதை தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றென்றும் ஜெயஸ்ரீயிடம் பேசினார். அவள் மொழிபெயர்த்த யேசுகதைகள் தொகுப்பைப் பற்றி நிறைய நேரம் அவளோடு விவாதித்தார்.
’இன்னக்கி இங்க வர்றதுக்கு முன்ன ஒரு சின்ன நாட் மனசிலப் பட்டுதும்மா, கேளு’
என்று அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப்பற்றிய குறும்படத்திற்கான கதையைச் சொல்கிறார். பிண்ணனியில் அன்னலஷ்மி என்று யாரோ யாரையோ கூப்பிடுவதைக்கேட்டு அதிர்ந்து, பின் சிரித்துக் கொண்டே பதின் வயதில் தனக்கேற்பட்ட காதலையும் அவள் தனக்கு சொல்லிக்கொடுத்த காமத்தையும் சொல்லி சிரிக்கிறார்.
நானும் பவாவும் சேர்ந்து நண்பர்களுக்காக ஒரு சிறு கல்வீடு கட்டினோம். அதன் திறப்புவிழாவை  எங்கள் மகன் வம்சியின் பிறந்த நாளன்று வைத்திருந்தோம். அந்தக் கல்வீட்டின் தரையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்த அவர், ‘என் அம்மா ஒரு சந்தோஷமான மனுஷி. அவள் வீடு கட்ட ஆரம்பித்ததும் தன் எல்லா சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள். அந்த வலியின் மிச்சம்தான் என் ‘வீடு’ ஆனால் என் மகள் ஷைலு இந்த வீட்டைக்கட்டி தன் சந்தோஷங்களை இதில் நிறைத்திருக்கிறாள். இது அசாத்தியமான ஒன்று.  என கவிதையாய் பேசிக்கொண்டே போனார். மாலையில் ஒற்றை அறை கொண்ட எங்கள் நில கெஸ்ட் ஹவுசை திறந்துவைத்தபோது நாங்கள் விரும்பி அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் அபூர்வமாய் எங்களுக்கு நிலைத்துப் போனது.
சென்னைக்கு செல்லும்போதெல்லாம் ஒருமுறை அவரைப் பார்த்து விடுவதும் ஒன்றாய் ஒருவேளை சாப்பிடுவதுமாய் திரும்பிவருவோம். என்கூட தங்க மாட்டேங்கிறீங்க என்று  அவருக்கு பெரிய ஆதங்கமுண்டு. வேறு எந்த வேலையும் இல்லாமல் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமென்று சென்னை சென்றபோது அவரிடம் நாங்கள் அங்கு வந்து தங்குவதாகச் சொன்னோம். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். நானும் பவாவும் ஜெயஸ்ரீயும் நண்பருமாய் போவதற்குள் ஒரு வகுப்பறையை ஒழித்து சுத்தம் செய்யவைத்து புதிய படுக்கைவிரிப்புகள், தலையணைகளில் ஆரம்பித்து என்னென்ன தேவையோ அவ்வளவையும் செய்து மூன்றாம் நாள் திரும்பி வரும்போது பெற்ற தகப்பனைபோல மருமகனுடன் செல்லும் என்னை கண்ணீர் மல்க கார்க் கதவை அடைத்துவிட்டு நின்ற அந்த பிரம்மாண்ட உருவம் எனக்கும் பவாவிற்கும் வாழ்நாளில் மங்கிப்போகாதது.
 இப்போது நினைவுகள் ஊற்றெடுத்து பொங்கி பொங்கி வார்த்தைகளுக்கு வழிவிடுகிறது.
திரைகலைஞர் மம்முட்டியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து பெயர் வைப்பதில் யோசனையாக இருந்த நாட்களில்  ‘மூன்றாம்பிறை’ என்ற தலைப்பு ஒத்து போகிறது. அந்த தலைப்பிற்காய் நான் அவரிடம் அனுமதி கோருகிறேன். ‘ very good ஷைலம்மா, நல்ல தலைப்பு அது, மூன்றாம்பிறையைக்  கொஞ்ச நேரம்தான் பார்க்கமுடியும். ஆனால் அந்த கொஞ்ச நேரத்திற்குள் நல்ல காரியங்கள் பலதையும் செய்வார்கள். அதயே வைய்யம்மா ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். பின்னாளில் என் வலைதளத்திற்கும் அதுவே பெயரேயானது.
’பவா என்றொரு கதைசொல்லி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் படத்தை வெளியிட்டு பேசிக்கொண்டேயிருந்தார். மொத்த உரையும் மிக நெருக்கமாக குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி எங்களைக் கூச்சத்திலும், அதீத நெகிழ்விலும் கரையவைத்தார். பத்துமுறையாவது கண்கலங்கி கைதொழுது நின்றிருப்பேன். பவாவிற்கு படைப்பாளி எப்படி குடும்பத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் படைப்பாளியின் மனைவி என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றும் அதையெல்லாம் என் மகள் ஷைலுக்கு நீங்கள் கொடுக்கக் கூடாதென்றும் தன் அனுபவத்திலிருந்து பேசித்தீர்த்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே  எஸ்.எல்.ஆர். கேமராவில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு தாத்தா பேசுவதைப் படம் எடுத்து தான் எடுத்த படத்தைத் திருப்பி பார்த்த வம்சியை அவ்வளவு கூட்டத்திலும் கவனித்திருக்கிறார். பேச்சின் நடுவே ’வம்சி நாங்களெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதை லேபில் கொண்டுபோய் கொடுத்து அவன் டார்க்ரூமில் கொண்டுபோய் கழுவி எடுத்திட்டு வற்ரவரைக்கும் பொறுமையாய் காத்திருந்து பெற்ற பிள்ளையைப் பார்ப்பதுமாதிரி பார்ப்போம். புகைப்படம் எடுத்தவுடன் திருப்பி பாக்காதே. அப்படி பாத்தா நீ எடுத்த படத்துமேல உனக்கு நம்பிக்கையில்லன்னு அர்த்தம். எடுப்பதற்குமுன் இதுதான் நான் எடுக்கபோற ஃப்ரேம்ன்னு மனசில ஃபிக்ஸ் பண்ணு என்று அவனுக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தார்..
வம்சியையும் மானசியையும் அப்படி பிடிக்கும் அவருக்கு. பிள்ளைகளை வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாலை வாக்கிங் போய்விட்டு வரும்போதே காய்கறிகள் வாங்கிவந்து தானே ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து தாத்தாவும் பேரபிள்ளைகளுமாய் சாப்பிட்டு விளையாடின நாட்களை இனி நான் அவர்களுக்கு மீண்டும் தர முடியாமல் காலம் உறையவைத்துவிட்டதே.
 நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் கேட்டார்,
 ‘வம்சி என்ன பண்ணபோறான்மா?’
அவன் இப்ப சிக்ஸ்த் படிக்கிறான் சார், பரோடாவில் போய் டிசைன்ஸ் படிக்கணும்னு சொல்றான் சார்
இல்லம்மா அவன் என்னமோ எங்கிட்ட வந்திடுவான்னுதான் தோணுது
காலம்தான் எந்த கருணையும் இல்லாமல் ஓடுகிறதே. இரண்டு வருடங்களுக்கு முந்திய ஒரு டிசம்பர் 31 இரவு பத்து மணியிருக்கும். குழத்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சட்டென்று வம்சி சொல்கிறான் ’அம்மா நானொரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்’
சின்ன சின்ன மன அசைவிலும் உடல் மொழியிலும் சிதறின துளிகளைக் கொண்டு ஒரு மனிதன் ஒரு குழந்தையை எப்படி அவதானித்திருக்கிறார் என்று நான் மீண்டுமொருமுறை ஆச்சரியப்பட்டு போனேன்.
நானும் ஜெயஸ்ரீயும்  அவரைபோய் பார்த்த ஒரு மதிய வேளையில், நான் மொழிபெயர்த்த  ‘சுமித்ரா’ நாவல் பற்றி பேச ஆரம்பித்தோம். இந்த நாவல் படமாக வந்ததையும் அது சரியாக எடுக்கப் படவில்லையென மூல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் வருத்தப்பட்டார் என்றும் சொன்னேன். மிக கடுமையாகக் கோபம் வந்துவிட்டது அவருக்கு, கதை மட்டும் தான் எழுத்தாளனுக்கு சொந்தம், அது படமாவது ஒரு ஃபிலிம் மேக்கருக்கானது. அது அந்தக்கதையின் மறு ஜென்மம். அது பற்றி எழுத்தாளன் பேசவேகூடாது என்றார். பேச்சு அப்படியே அப்போதுதான் பலசூறாவளியில் அகப்பட்டுவந்த ‘ விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி வந்தது. கமல் ஒரு அசாத்தியமான கலைஞன்,  இந்த படத்தில கமல் வச்ச ஒரு ஷாட்டைக் கூட என்னால வைக்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார்.
வம்சியைப் பற்றி எப்போதும் விசாரித்துக் கொண்டேயிருப்பார்.
’ஷைலு வம்சி இப்ப என்ன பண்றான்?’’
நிறைய வேர்ல்டு கிளாசிக்ஸ் பாக்கறான் சார். அவனுக்கு போட்டோகிராபிதான் விருப்பமா இருக்கு சாந்தினிகேதன் போய் படிக்கப் போறானாம் சார்’.
’வெரி குட், ஆனா அதுக்கு எதுக்கு அவன் அங்கேயெல்லாம் போணும், இன்னும் மூணு வருஷம் முடிச்சிட்டு தாத்தாகிட்ட வரச்சொல்லம்மா. அவன நான் பாத்துக்கறேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா உருவாக்கிக் காட்டறேன்.
கடைசிவரை தாத்தாவின் கை பிடித்து சினிமா மொழி கற்க என் மகனுக்கு வாய்க்காமலே போய்விட்டது.
’ஷைலு அவங்கிட்ட ‘ சந்தியாராகம்’ படம் இருக்கா?’
’இல்ல சார்’
’அப்படியா’ என டேபிளுக்குக் கீழே குனிந்தவர் ஒரு டிவிடியை எடுத்து பொறுமையாய் ‘ என் அன்பு பெயரன் வம்சிக்கு, வாழ்த்துக்களோடு தாத்தா பாலுமகேந்திரா’ என்று தன் அழகான கையெழுத்தில் எழுதி ’வம்சிகிட்ட கொடம்மா’ என்றார். அவர் எழுதி முடிக்கும்வரை எழுந்துநின்று பெருகும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் நின்றிருந்தேன். எனக்குத் தெரியும் தமிழ்நாட்டில் அந்த படம் கிடைக்காமல் தேடியலையும் எத்தனை சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்று.
 மகனே தாத்தா கை பிடித்து அழைத்து செல்லவில்லையென்றாலும் உனக்கான திசையையும் நீ முன்னெடுத்து செல்ல வேண்டிய அக்கினி குஞ்சினையும் உன்னிடம்தான் விட்டு சென்றிருக்கிறார். அதை இதயத்தில் ஏந்திக் கொள்.
’ஷைலு வாம்மா நாம படம் பாக்கலாம்’ என கூட்டிப் போய் தான் இதுவரை எடுத்த தலைமுறைகள் படத்தின் சில காட்சிகளை எனக்கு போட்டுக் காண்பிக்கிறார். அதே அறையில் உட்கார்ந்து  ஒரு க்ரீன் டீ குடித்துக் கொண்டெ பெயரிடப்படாத அக்கதையை முழுமையாகக் கேட்ட நியாபகங்கள் நெஞ்சில் முட்டுகிறது. படத்தில் சுப்புத்தாத்தாவாய் மெல்ல மெல்ல நடந்து, கண்களின் ஓரம் ஈரம் காட்டி உட்கார்ந்திருக்கும் சாரைப் பார்த்து, கால் தடுக்கி விழும் தாத்தாவைப் பார்த்து பதறி விழுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாய் அவை மாறிப் போகும் உன்மத்தத்தில் பல காட்சிகள் தெரியாமல் கண்ணில் நீர் முட்டுகிறது. எழுந்து வெளியே வருகிறோம். சினிமா பட்டறையில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறார்கள். அதை உடனே உணர்ந்தவர், ’இவங்க பேரு ஷைலு, பெஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர். என்னோட படம் மியூசிக்குக் கூட போகாத கட்டத்தில நான் இதுவரைக்கும் யாருக்கும் போட்டு காண்பிச்சதில்ல, சினிமால இருக்கற எந்த கொம்பனுக்கும் நான் காட்டமாட்டேன். ஆனா நான் ஷைலுக்கு காட்டுவேன், பிக்காஸ் ஷீ ஈஸ் மை டாட்டர்’ என்கிறார்.
’ஷைலு’ என பிரியம் ஊறின வார்த்தைகளில் என்னை அழைக்க இனி யார் இருக்கிறார்கள்? மெல்ல என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வரும் கால்கள் எங்கே?
கண்ணாடிப்பெட்டிக்குள் என்னைப்பார்த்து பேசாமல் படுத்திருக்கும் அவரைப்பார்த்த துக்கத்தில் அருகில் நின்ற ‘சுகா’வின் கழுத்தைக்கட்டிக்கொண்டு வெடித்து அழுகிறேன்.  சுகாவும் என்னுடன் சேர்ந்து  பதில் தெரியாது உடைந்து அழுகிறார்.
ஆனால் அப்பா, என் அன்பான அப்பா, ‘ ஷைலு நான் என் கடைசிகாலத்தில் திருவண்ணாமலையில்தான் இருக்கப் போகிறேன். நீயும் பவாவும்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சொன்னதை ஒரு மகளாக  நான் நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் மகனிடமும் அகிலா அம்மாவிடமும்  வேண்டி உங்கள் இன்னொரு மகன் பாலாவிடம் பெற்ற அஸ்தியை கையில் ஏந்தியபடி மனசும் உடம்பும் பதறப்பதற நிற்கிறோம். நானும் பவாவும் சிறிது சிறிதாய் செப்பனிட்டு பிள்ளைகளுக்காகவும் நண்பர்களுக்காகவும் உருவாக்கியிருக்கும் எங்கள் நிலத்தில் அதை விதைத்து, எங்களோடு நீங்கள் கலந்திருக்கிறீர்கள்.
கொழும்பில் மட்டகளம்பு மாகாணத்தில் அமிர்தகழி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த அந்த கால்களும் திரும்பி சொந்த மண்ணிற்குப் போகவே முடியாமல் போனதற்காய் கடைசி நிமிடம்வரை அழுது தீர்த்த கண்களுமாய்  என் ஆசான் நாடற்றவனாக மின்சார மயானம் நோக்கிப் போகிறார் என்று சோமீதரன் கதறினான். அது இல்லை.
உங்களை இதயத்தில் ஏந்திக் கொண்ட பல ஆயிரம் பிள்ளைகளாய்  நாங்கள் இருக்கிறோம்.  எப்போதும் நீங்கள் சொல்வதுபோல இந்த பிரபஞ்ச சக்தி எங்களை உங்களிடமே எப்போதும் தக்க வைத்திருக்கும்.  


                                  
  






Wednesday, 8 January 2014

2014 வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள்


மிகுந்த நிறைவோடிருக்கிறேன். நான் நினைத்தமாதிரி வேலை பார்த்து எல்லா புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறேன். இதன் மூலம் தங்கள் படைப்புகள் தந்து என்னை நம்பினபடைப்பாளிகளுக்கு நேர்செய்திருக்கிறேன். நான்நிறைந்திருக்கிறேன். அந்த மனநிலையில் வம்சியின் புதியபுத்தகங்களின் அட்டைவடிவமைப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.









































Monday, 18 November 2013

இத்ரமாத்ரம்


நேற்றிரவு பிள்ளைகள் எல்லோரும் விடுமுறைக்காக திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள். ஹரியும் வம்சியும் சென்னையில் ஒரே வீட்டில் இருந்து வந்திருந்தாலும் இருவரின் அனுபவங்களும் வெவ்வேறு தளத்தில் இருந்தன. வம்சி நான்கு நாட்களில் நிறைய கற்றிருந்தான். கண்கள் பனிக்க அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே குழந்தையாய் மாறி அம்மா பெரிய தேர் பாக்க போலாமா என்று கேட்டான்.உடனே கிளம்பினோம். இரவு எட்டு மணிக்கு ஏழெட்டு பேர் ஒன்றாகக் கிளம்பி நடக்க ஆரம்பித்தோம். திருவண்ணாமலை, மக்கள் வெள்ளத்தால் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
நிறைய நாட்களுக்குப்பிறகு நீண்டநேரம் நடந்தது மகிழ்ச்சியாகவும் மிகுந்த கால்வலியையும் கொடுத்தது.சாப்பிட்டு முடித்தபிறகு வீட்டிலேயே ஏதாவது நல்ல படம் பார்க்கலாம் என தீர்மானித்தபோது தம்பி சாம் கொடுத்தனுப்பிய மலையாளப்படங்கள் பார்க்கப்படாமலேயே இருப்பது என்னை தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது நியாபகம் வர மொத்தத்தையும் எடுத்துப் பார்த்தேன். அதில் என் சுமித்ரா (மலையாளத்தில் இத்ரமாத்ரம்) புதைத்து வைக்கப் பட்டிருந்தாள். என்னால் அந்த நிமிடத்திய படபடப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கடந்த வருடம் டிசம்பரில் கல்பட்டா நாராயணன் எழுதிய இத்ரமாத்ரம் என்ற நாவலை சுமித்ரா என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தேன். நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இறந்துவிடும் கதாநாயகி சுமித்ரா எப்படி தன் சொந்தங்களோடும் நண்பர்களோடும் ஊர்காரர்களோடும் ஸ்நேகிதிகளோடும் வாழ்ந்தாள் என்பதை கல்பட்டா சொல்லிக் கொண்டே போகிறார். வாழ்வின் மிகப் பெரிய தருணங்களை தரிசிக்கவைக்கும் அவர் மிக அனாசயமாக கதை சொல்லி ஒரு பெரு வாழ்வினை நம்முன் நிகழ்த்திக் காண்பிக்கிறார். மிகக் குறைவான பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நாவல் நம்மை பெரிதும் யோசிக்க வைக்கிறது, பேச வைக்கிறது,மெளனமாக்குகிறது.
 இரண்டுமுறை ரீரைட் செய்த பிறகு வீட்டிற்கு வந்த ஜெயமோகனோடும் கல்பட்டா நாராயணனோடும் புத்தக செழுமைக்காய் ஏழெட்டு மணிநேரம் நடத்தின கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமானது. அதன் பிறகும் அடங்காத மனது பத்துமுறைகளுக்கு மேல் அந்த டெக்ஸ்டில் வேலைபார்க்க வைத்தது. பத்து நாட்களுக்குப் பின் சுமித்ரா என்னைவிட்டுபோகவில்லையானால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.அப்போது என் நண்பர் சீனிவாசன் தன் புத்தக வேலைக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய ஓவியப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அதில் என் சுமித்ராவை ஏதோ ஒரு நாளின் அடங்காத படைப்பு மனநிலையின் உச்சத்தில் படமாக்கியிருந்தார். அதை புத்தக அட்டைப் படத்திற்கு தந்தது மட்டுமல்ல கதை நெடுக வரும் கதாபாத்திரங்களை டிரைபிள் ஆர்ட் மூலம் நாவலுக்கு இணையாக உலவ விட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர்கள் பேசியும் நடந்தும் பாடியும் பார்க்கபோகிறோம் என்கிற நிமிடம் அலாதியானது. கதையைப் போலவே முதல் காட்சியிலேயே சுமித்ராவின் மரணக் காட்சி. மரணத்தோடு நன்றாகப் பொருந்திப் போயிருக்கும் சுமித்ரா நீண்டு நிமிர்ந்து படுத்திருக்கிறாள். அதிலிருந்து ஆரம்பித்து அந்த நாவலில் வரும் புருஷு, தாசன், கீதா, சுபைதா, கெளடர், பணிச்சி, பொதுவாள், வாசுதேவன், அனுசூயா, மரியா என ஒவ்வொருவரும் படத்தில் நாவலுக்கு இணையாக வந்து சென்றார்கள். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் நெடுமுடி வேணு கெளடராக நடிப்பிலும் அனுபவத்திலும் மிளிர்கிறார். கெளடருக்கான          உடல் நிலை சரியில்லாத காட்சியில் பெய்த மழை என்னை அறைக்குள் நனைத்தது. நாய் குரைக்கும் சத்தமும் அழுகை சத்தமும் மிகவும் துல்லியமாக என் மனநிலையோடு பயணம் செய்தன.

காப்பி பூத்திருக்கும் வயநாட்டு காடுகளில் அலைந்து திரிந்த நான் என் கண்ணெதிரே அதன் அசைவுகளைப் பார்த்தது மேலும் என் வயநாட்டுக்குப்போகும் ஆசையை அதிகமாக்கியது. மலையாளப் படங்களில் வரும் யதார்த்தமும் வித்தியாசமாக கதை சொல்லும் பாணியும் புதிய முயற்சிகளும் எப்போதும் போல இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் மிக வித்தியாசமாக எழுதப்பட்ட இந்த நாவல் அப்படியே சினிமாவிற்காக தன் மொழியை மாற்றிக் கொள்ளாமல் பதிவாகியிருக்கிறது. கதையைப் போலவே அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு படமாக்கப் பட்டிருக்கிறது. மரணவீட்டில் வரும் ஒவ்வொரு பந்தங்களும் நட்புகளும் தன் பால்யத்தை சுமித்ராவோடு ஒப்பிடும்போது அந்த கதாபாத்திரங்கள் ஓவர்லேப்பில் பேசுவது மிக இயல்பாகவும் உறுத்தாமலும் இருக்கிறது.மலையாளப் படங்களில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம்.
கதாபாத்திர தேர்வில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த தாசன் கேரக்டர். மிகவும் அறிவார்ந்த தாசன் அப்படி இருந்திருக்கவேண்டாமோ. அதேபோல சுபைதா. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெடித்து விடுவாளோ என்று நினைக்கும் அளவிற்கு தடிமனான பெண் அவள். அதுதான் அவள் பிரச்சனையே. ஆனால் படத்திலோ கறுத்த மெலிந்த பெண்ணாக வருகிறாள்.
படத்தில் கீதாவும் மாதவியும் மிக அற்புதமாக ஒன்றிப் போயிருக்கிறார்கள்.வாசுதேவன் கதையில் இல்லாத அளவிற்கு நல்ல மனிதராகவும் கடைசிக் காட்சியில் பிரேதத்தை எடுத்துப்போகும் காட்சியில் வீட்டு வாசலில் உட்காரும்போதும் நடிப்பில் அசத்தி நம் எல்லோரின் பரிவையும் கோருகிறார்.
கதையும் திரைக்கதையும் ஒன்றல்ல.கதையின் மறு ஜென்மமே திரைக்கதை. மேலும் திரைக்கதை ஃபிலிம் மேக்கருக்கானது.  எப்படி வேண்டுமானாலும் அதை எடுக்கும் உரிமை அவனுக்குண்டு என்று நான் மிகவும் மதிக்கும் நேசிக்கும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சொன்னாலும் படம் பார்க்கும் போது ஒப்பிட்டுப் பார்க்காமல் என்னைப் போன்ற சாதாரணப் பார்வையாளரால் இருக்க முடியாது.
இதெல்லாம் கடந்துபோக என்னில் உறைந்திருந்த சுமித்ரா நேற்றிரவிலிருந்து என்னோடு இயல்பாய் நட்பாய் உரையாட ஆரம்பித்திருக்கிறாள்.      



Wednesday, 13 November 2013

கெங்கபுரம் விவசாயி

சென்னையில் நடந்த இருவேறு நிகழ்ச்சியின் உன்மத்தத்தில், அது கொடுத்த உத்வேகத்தில் இந்த வருடம் வம்சி பதிப்பிக்கப் போகும் 20 புத்தகங்களின் வேலைகளைப் பிரித்து அச்சுக்கும், பிழை திருத்தவும், டைப் செய்யவும், வாசிக்கவும் எனக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.என் நண்பன் ஷெளக்கத் கேரளாவிலிருந்து திரும்பி வரும்போது எனக்கான ஒரு பார்சலை கூரியர் செய்துவிட்டு வந்திருந்தார்.அது மிகச் சரியாக என் பிறந்த நாளன்று வந்து அந்த வருடத்திற்கான சந்தோஷத்தைக் கொடுத்தது.எல்லாம் மிக அற்புதமாக பேசப்பட்ட இளம் தலைமுறையினரின் படைப்புகள். என் மொழிபெயர்ப்புக்கு விடப்பட்ட சவால்கள். நண்பனின் கைகுலுக்கி என் அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டேன்.
இப்படி ஒரு ஈரமான மனநிலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த பெரியவர் ஒருவர் என் அலுவகத்திற்கு வந்தார்.70 வயதை நெருங்கும் அவர் ஒரு இயற்கை விவசாயி.விவசாயில என்னம்மா இயற்கை செயற்கைன்னு, விவசாயின்னா விவசாயிதான் என்று எப்போதும் என்னிடம் சொல்வார். எப்போதும் துறுதுறுவென ஒரு இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் இருக்கும் அவர் மிகவும் சோர்வுடன் இருந்தார்.தான் வளர்க்கும் செடி வகைகள், மரக்கன்றுகள், நெல் வகைகள் பற்றி உரத்த குரலில் பேசும் அவர் என்னிடம் பேசும்போது லேசாக கண்கள் கலங்குவதை கவனித்தேன்.சோர்வுடனோ தளர்ந்தோ யாராவது வந்தால் நான் அதுபற்றி எப்போதும் விசாரிப்பதில்லை. அது இன்னும் அவர்களை சோர்வாக்கிவிடும் ஆனால் அவரே பேச ஆரம்பித்தார்.  “ரொம்ப வயசாயிடிச்சுமா. புள்ளங்க நம்மள மாதிரி இல்ல. ஊரில வந்து விவசாயம் பாக்காதுங்களாம்.நூறு கிலோமீட்டர் தூரத்தில பாண்டிச்சேரியில செட்டிலாகப்போறானாம்.முப்பது வருஷமா கண்ணுல வச்சு காப்பாத்தின பூமிய என்ன பண்றதுன்னே தெரியல. அது யார் கைல மாட்டி எப்படி இருக்கபோகுதோன்னு நெனச்சா ரொம்ப முடியலம்மா’’ உதடு கோணிப்போய் பேச்சு நின்றது. என் கண்கள் நிறைந்து முகம் திருப்பிக்கொண்டேன். வயது வந்த பெண்ணை நிராதரவாய் விட்டுவிட்டுப் போகும் தவிப்பு அது.
பிறகு என்னென்னவோ சமாதானம் சொல்லி காப்பி குடித்து பேச்சை திசைதிருப்பி அனுப்பினாலும் மனசு அந்த முதியவரின் கண்ணீருக்கடியில் தேங்கி நின்றது.

நான் தொகுத்த தென்னிந்திய சிறுகதைகள் தொகுப்பிலிருந்து இந்த நிமிடத்தில் நான் வாசிக்க நினைக்கும் கதை...

















யாருக்கும் வேண்டாத கண்

நான் சமீபத்தில் மொழிபெயர்த்த எனக்கு மிகவும் பிடித்த 
சிஹாபுதின் பொய்த்தும்கடவின் சிறுகதை - நன்றி உயிர்எழுத்து

மலையாளம் மூலம் : சிஹாபுதின் பொய்த்தும்கடவு.
தமிழில்கே.வி.ஷைலஜா.
ஓவியங்கள் : என். சீனிவாசன்


இருள் சூழ்ந்த பாதையிலிருந்து சமீபத்தில் எனக்கொரு கண் கிடைத்தது. இருட்டில் அதொரு வால் நட்சத்திரம் போல மின்னியது. அந்த மின்னலின் ஒளிக்கீற்று என் பார்வையில் படவில்லையானால் ஒரு வேளை நான் அதை மிதித்து நசுக்கி நடந்து போயிருப்பேன்.
சின்ன சந்திலிருந்து வெளிச்சமுள்ள இடத்திற்கு வந்து நின்று நன்றாகப் பார்த்த போதுதான் அதென்ன பொருள் என்று சரியாக உணர முடிந்தது. உணர்ந்தபோது அப்படியே உறைந்து போனேன். அது ஒரு கண். கண்ணே தானா? யாருடையது? எந்த மனிதனின் ஒற்றைக் கண்? எப்படி தொலைந்து போயிருக்கும்? எப்போது காணாமல் போயிருக்கும்? இப்படியான நிறைய கேள்விகள் என் முன்னால் பதில் கிடைக்காமல் அப்படியே வரிசை பிடித்து நின்றன.

கண்ணுக்கு உயிர் இருக்கிறது. அதனுடைய இமைகள் திறக்கவும் மூடவும் செய்கிறது. கருமணி பதட்டத்துடன்  யாரையோ தேடிக்கொண்டிருந்தது. முடிவில் அதன் பார்வை பரிதாபத்துடன் என்னில் நிலைத்து நின்றது. என்னைப் பார்த்த பார்வையில் அடர்ந்த துக்கத்தின் சிவப்பு பரவியிருந்தது. கண்ணில் நீர் முட்டித் ததும்பி நின்று கருமணியை உருட்டி உருட்டி எதையோ கத்திச் சொல்லத் தேம்பியது. நான் பார்வையாலேயே அதை உள் வாங்கிக் கொண்டேன். எனக்கு உள்ளுக்குள் இதொரு நுட்பமான ப்ரச்சனையாக மாறிவிடுமோ என்ற எண்ணமும் சட்டென புகுந்தது.
இப்படியான ரகசியத்தை என் மனைவியிடம்தான் முதலில் பகிர்ந்துகொண்டேன். இரவு உணவிற்குப்பிறகு சாந்தமான சூழலில் நான் கைக் குட்டையில் பொதிந்து வைத்திருந்த கண்ணை அவள் முன் பிரித்துகாட்டினேன். நடந்த சம்பவங்களையெல்லாம் சுருக்கமாக சொன்னேன். அதை கேட்ட நிமிடத்தில் அவள் பயந்து நடுங்கினாள். நான் சாதாரணமாகச் சொன்னேன்.
இதில அப்படி பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இந்த கண்ணுக்கு ஒரு உடமை இருப்பாங்க இல்ல. நாம இதை அவங்ககிட்ட சேத்திடலாம்
எப்படி?”
விடிஞ்சதும் நாம இத போலீசில ஒப்படைச்சிடலாம். கண்ணுக்கு உரியவங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம இருக்க மாட்டாங்க.”
நீங்க இவ்வளவு அறிவில்லாத மனுஷனா இருக்கீங்களே. போலீஸ் ஸ்டேஷன்ல உடனே உங்கள லாக்கப்பில் தள்ளிடுவாங்க அதுக்கப்பறம் கண்ணோட மீதி பாகங்கள் எங்கன்னு உங்ககிட்டயிருந்தே சொல்ல வச்சிடுவாங்க. சும்மா ஆகாத வேலைக்கெல்லாம் போகாதீங்க. இது எங்க இருந்து கெடச்சதோ அங்கேயே கொண்டுபோய் போட்டுடுங்க. அதுதான் புத்திசாலித்தனம்.”
பிறகு நானொன்றும் சொல்லவில்லை. அவள் பேசியவற்றின் முதல் பாகம் யோசிக்க வேண்டியதும், இரண்டாம் பாகம் மிகக் குரூரமாக இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது. மனைவி என்  மனதைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே. அவள் சொன்ன புத்திசாலித்தனத்தோடு என்னால் ஒருபோதும் ஒத்து போக முடியாது. இந்த கண்ணை நடுத்தெருவில் போட்டுவிட்டு வரும் நினைப்பே எனக்கில்லை. கண்டெடுத்த இடத்திலேயே மீண்டும் போட்டுவிட்டால் நாய்களோ, நரிகளோ அதைப் பார்த்தால் என்ன ஆகும்?
கண்ணின் கருணாமயமான பார்வை என்னை மிகவும் கரைய வைத்தது. அதில் பயம் கலந்த பாவத்தையும்  ஒரு வேண்டுகோளையும் உணர முடிகிறது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் நீர் நிறைந்து தளும்பத் தொடங்கியது.


அழாதே... உன்னை உரியவரிடத்தில் நான் எப்படியும் சேர்த்து விடுவேன்நான் தேற்றினேன்.
மகிழ்ச்சியில் அதன் இமைகள் படபடவென அடிக்கவும், அதிக நேரம் அந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திருக்கவும் செய்தன.
மறுநாள் நகரத்தின் புகழ்பெற்ற மாலை நேரப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தேன்.
... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு பொருளைக் கண்டெடுத்திருக்கிறேன். பொருளைத் தொலைத்தவர்கள் சரியான அடையாளத்தைச் சொல்லிப் பெற்றுக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும். மிக அவசரம்...
விளம்பரத்தைப் பார்த்து பலரும் என்னைத் தேடி வந்தார்கள். சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தார்கள்.
அவர்களில் புரோகிதரும், வியாபாரியும், கவிஞர்களும் விமர்சகர்களும், திருடர்களும், பிக்பாக்கெட் அடிப்பவர்களும் சினிமாக்காரர்களும் இருந்தார்கள்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து யாரும் அப்படி ஒரு கண்ணைத் தொலைத்திருக்கவில்லை என்பது தெளிவானது. புரோகிதர் அவருடைய டைரியைத் தொலைத்திருந்தார். அதில் இருக்கும் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை எனக்குத் தர அவர் தயாராக இருந்தார். வியாபாரியோ விற்பனை வரி விதிப்பவர்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தொலைத்திருந்தார். என் காலில் விழ குனிந்து உடம்பைக் குறுக்கி கெஞ்சிய அவரும் என் முன்பாக பணக்கட்டுகளை நீட்டினார்.
கவிஞனோ தான் புதிதாய் எழுதிய முக்கியமான கவிதையின் முதல் படியைத் தொலைத்திருந்தான். சொந்த துக்கத்தின் அடர்த்தியான வண்ணம் கொண்டு எழுதப்பட்ட அந்த வரிகள் நியாபகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாத  தூரத்தில் மாய லோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டிருந்தன. அந்த காகிதத் துண்டுகள் கிடைத்தால் உலகின் உன்னத வரிகளாக  அவை அங்கீகரிக்கப்படுமாம்.
நிராசையோடு கவிஞன் ஒரு பைத்தியகாரனைப் போல திரும்பிப் போனான். ஒவ்வொருவரின் தேவையும் வேறு வேறாக இருந்தது. ஆனால் என் கையிலோ ஒற்றைக் கண் மட்டும் மலங்க மலங்க விழிந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்பத்திரிகை விளம்பரத்திற்குப்பிறகு நான் அதிக நாட்கள் காத்திருந்தேன். யாரும் வரவில்லை. தவறி விழுந்துவிட்ட அக்கண் மேலும் துக்கத்தின் கணத்தில் எனக்கு பாரமேற்படுத்தியது.
நம்பிக்கையை கைவிட வேண்டாம். நானில்லையா உனக்கு? நான் சரியான உடமையிடம் உன்னைச் சேர்த்துவிடுவேன் கவலைப்படாதே
இதற்கிடையில் கையில் கிடைக்கும் எல்லா விதமான பத்திரிகைகளையும் சல்லடை போட்டு வாசிக்கத் தொடங்கி இருந்தேன். எங்கேயாவது, யாராவது கண்ணைத் தொலைந்த செய்தியோ அல்லது விளம்பரமோ தென்படுமாவெனத் தேடத் தொடங்கியிருந்தேன். ஆனால் அப்படி எந்த செய்தியும் இல்லை. பிறகு அது வீண் வேலை என்று புறந்தள்ளினேன்.
வாரங்கள் கடந்தன. அக்கண்ணின் எதிர்பார்ப்பு மங்கலாகத் தொடங்கியிருந்தது.
இம்முறை மாவட்ட தலைநகரிலிருந்து வரும் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன். முன்பு ஏற்பட்ட அனுபவங்கள் இன்னும் அதிகமாக என்னைத் தேடி வந்தன. அதைத் தவிர வேறெந்த தகவலும் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியாகப் போய்கொண்டிருந்த நாட்களின் இடைவேயில் ஒருநாள் அக்கண்ணிடம் கேட்டேன்.
கண்ணே, யாரும் உன்னைத் தேடி வரவில்லை. அப்படி கண்ணைத் தொலைத்த ஆள் பூமியில் இருக்கிறானா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் இப்படியே காத்திருப்பது? உன் பார்வை மங்கிப் போகும் முன் நீ யாருக்காவது பயன்பட வேண்டுமே? அதனால் உன்னை நானொரு கண் வங்கியில் ஒப்படைத்து விடட்டுமா?”
கண்ணின் கருமணியின் உருட்டலிலும், ரப்பைகளின் படபடப்பிலும் அது மிகவும் துக்கத்தில் இருக்கிறதென்பதும் கண் வங்கி என்பதே அதற்கு பிடிக்கவில்லை என்பதும் புரிந்தது. ஆனாலும் கண் அதற்கு சம்மதித்தது.
மறுநாள் காலை நாங்கள் கண் வங்கிக்குப் போனோம். வங்கியின் பொறுப்பாளரைப் பார்த்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அவர் மிகவும் பயத்துடன் அக்கண்ணை எடுத்து திருப்பி திருப்பிப் பார்த்தார்.
மிக நீண்ட தன் முப்பது வருட அனுபவத்தில் இப்படியான ஒரு கண்ணை அவர் பார்த்ததில்லையாம். அந்த பயத்துடனே பேசினார்.
உங்களோட உதவி செய்ய நினைக்கிற இந்த மனசுக்கு நன்றி. ஆனா உயிரில்லாத கண்களை மட்டுமே இங்க வாங்கறோம். ஆனால் இதுக்கு உயிர் இருக்கு. உயிரற்ற கண்களை வாங்க வேண்டுமானால் கூட அதனுடைய சொந்தக்காரனின் முன் கூட்டி எழுதப்பட்ட சம்மதப்பத்திரமும் இரண்டு பேருடைய சாட்சிக் கையெழுத்தும் தேவைப்படும். இக்கண்ணுக்காக நான் தூக்கில் தொங்க முடியாது சார். மன்னிக்கணும்.”
நான் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணைப் பார்த்தேன். என்னை எதிர்கொள்ள சக்தியற்று அது இமைகளைத் தாழ்த்தியது.
கண் வங்கியின் படிகளில் இறங்கும்போது என் வாழ்நாளில் அனுபவித்திராத அனாதை உணர்வு  ஏற்பட்டது. இந்த உலகமே கைவிட்டது போல ... எங்கு போனாலும் புதியதைப் பார்ப்பது போல... எங்கே பார்த்தாலும் எல்லோரும் என்னிலிருந்து எதையோ மறைத்து வைப்பது போல... ஒன்றுமே புரியவில்லை எனக்கு.
அன்று முழுவதும் அக்கண்ணுடன் நகரத்தில் அலைந்து திரிந்தேன். இந்த கண்ணை எப்படியாவது காப்பாற்ற முடியுமா என விசாரிக்கத் தொடங்கினேன். அப்படி அலைந்ததில் நான் பசியையும், தாகத்தையும்நேரத்தையும், காலத்தையும் மறந்தேன்.
காற்றிலும், புழுதியிலும் அலைந்து கலைந்த முடியும் கருத்து சோர்ந்த முகமுமாக நான் அன்று வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். மனைவி விளக்கணைக்காமல் அதிர்ச்சியும் கவலையுமாக எனக்காகக் காத்திருந்தாள்.
என்ன, இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க?” பதட்டத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு அமைதியாக நான் பதில் சொன்னேன்.
இந்த கண்ணோட சொந்தக்காரன நான் இன்னும் பாக்கல. எல்லாம் போகட்டும். கருணையின் அடிப்படையில் கூட இதை யாரும் வாங்கவோ, ஏற்றெடுக்கவோ முன் வரவில்லை...”
மனைவியின் முகபாவனை சட்டென மாறியது. அவள் கோபத்தில் வெடித்து சிதறினாள்.
ஓஹோ... அப்ப இதான் உங்க பிரச்சனையா? நீங்க இன்னும் அந்த அருவெறுப்பான ஜந்துவை தூக்கி எறியல இல்ல? ஏன் இப்படி இருக்கீங்க?”
இதற்கு மேல் எதையும் கேட்க முடியாத நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
இரவு முழுவதும் கண்ணும், அதனுடைய அனாதைத் தன்மையும் என் இதயத்தைக் கீறி வலியைக் கோரியது. இந்தக் கண்ணைக் கைவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லாமல் போய்விட்டதே. வெளியேறும் வழிகள் மூடப்பட்ட பெரும் குகையில் அகப்பட்டது போல தோன்றியது. கடவுளே, இதை விட நீ என்னைக் கொன்றிருக்கலாம். கடவுளே, என்னைக் கொன்று விடு...
யோசனையின் நடுவே நிலவின் கீற்றொன்று சட்டென வந்து விழுந்தது. செய்தித் தாளில் கொடுத்த விளம்பரத்தை மீண்டும் ஒருமுறை மனதிற்குள் வாசித்தேன்.


... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு பொருள் கிடைத்திருக்கிறது. அந்தப் பொருளின் அடையாளங்களை சரியாக சொல்லும் பட்சத்தில்...
பொருள் என்றால் அதற்கு உயிர் இருக்க வேண்டும் என்றில்லை. உயிருள்ள எதையும் நாம் பொருள் என்று சொல்வதில்லையே? நான் விளம்பர வார்த்தைகளின் பிழைக்காக வருந்தினேன். இந்த உலகத்தில் ஒரு வார்த்தையின் தவறுதல் ஏற்படுத்திய மிகப் பெரிய விளைவுகளை எல்லாம் சிந்தித்து பார்த்தேன். மறுநாள் என்ன ஆனாலும் ஆகட்டும் என நினைத்து மற்றொரு விளம்பரம் கொடுக்க தீர்மானித்தேன்.
... நகரத்திலிருந்து ஃபெரோஸ்புரம் கிராமத்திற்கு திரும்பும் வழியில் ஒரு கண்ணைக் கண்டெடுத்திருக்கிறேன். கண் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. மிக அவசரமாக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
விளம்பரம் வெளிவந்த நாளிதழ் எனக்கும் முன்பாக மனைவியின் கையில் கிடைத்தது. அவள் விளம்பரப் பக்கத்தை கோபமும் அழுகைமாக என் முன் விட்டெறிந்தாள். பிறகு வேகவேகமாக நடந்த  அவள் அறைக்குள் சென்று கதவை சாத்தி பெருங்குரலெடுத்து ஓவென கத்தி அழுதாள்.
நான் கைக்குட்டையில் பொதிந்து வைத்திருந்த அக்கண்ணைப் பார்த்தேன். இதயம் மரத்துபோனவனாக அதிக நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். என் வீட்டுக் கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் அடைந்திருந்தது. நானோ கண்ணின் சொந்தக்காரனுக்காகக் காத்திருந்தேன். வாசலில் காலடி ஓசை கேட்கிறதா? கதவை யாராவது தட்டுகிறார்களா? நான் காத்து காத்திருந்தேன். என் காத்திருந்தலின் தூரம் கூடிக் கொண்டே போனது.
யாருமே வரவில்லை. முட்கள் கடிகாரத்தை உரசியபடி கடந்தன. என் கண்கள் நிறைந்து காட்சிகள் கண்ணீரில் கலங்கின.
நான் ஏதும் செய்ய இயலாதவனாக அக்கண்ணைப் பார்த்தேன். அது தன் இமைகளை முடிக்கொண்டு படுத்திருந்தது. நான் மீண்டும் மீண்டும் கூப்பிட்டேன். என் குரல் கம்மித் தேய்ந்து போனதேயொழிய அக்கண் திறக்கவேயில்லை. நான் அதனுடைய மேல் ரப்பையை உயர்த்திப் பார்த்தேன்.
காட்சிகளற்ற என் மனதில் எல்லாம் தகர்ந்தடங்கியது. அதில் கருமணி இல்லை.
இப்போது தொலை தூரத்திலிருந்து ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்கிறது.
அதனூடாக போலீஸின் விசில் சத்ததையும் என்னால் துல்லியமாகக் கேட்க முடிந்தது.