Monday 5 February 2018

பெருநிலத்தின் ஒற்றை விருட்சம் பாக்யலஷ்மி

ஒரு சுயசரிதையைப் படிப்பதால் நமக்கு என்ன நேரும். அதில் ஒருவகைப்புனைவும் இருக்காதே என்ற பல கேள்விகளுடன் தான் ஸ்வரபேதங்கள் என மலையாளத்தில் பாக்யலட்சுமி என்கிற டப்பிங் கலைஞர் எழுதி தமிழில் கே. வி. ஷைலஜா அவர்கள் மொழிபெயர்த்த நூலினை எடுத்தேன்.
சுயசரிதையில் காந்தியடிகளின் சத்தியசோதனையும்,உ.வே.சாவின் என்சரித்திரம் வாசித்திருந்தாலும்,இரண்டு பெரிய ஆளுமைகளும் தனக்கென பாதை வகுத்து அதில் பயணிக்கையில் ஏற்படும் சோதனகளை அறிந்து இந்த சமூகத்தின் கொடையாக தான் வாழ ஆசைப்பட்டடு பயணித்தவர்கள்.சில கலைஞர்களின் சுய சரிதையினையும் வாசித்திருக்கிறேன்.அவர்கள் அந்தக் கலைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அதனால் ஏற்படும் உயரங்களையும், வீழ்ச்சிகளையும் தெரிந்தே பயணப்பட்டவர்கள்.ஆனால் பாக்யலட்சுமியின் வாழ்க்கை இலட்சியத்திற்காகவோ,கலைக்காகவோ ஒப்புக்கொடுக்க பயணப்பட்ட வாழ்க்கை அல்ல.டப்பிங் தியேட்டருக்குள் அதைப்பற்றி எவ்வித மனத்தயாரிப்புமின்றி வாழ்க்கை அவளை பெரும் காற்றினில் தூக்கிவீசப்பட்ட ஒரு இலையைப் போலத்தான் ஸ்டுடியோவிற்குள் வீழ்கிறாள்.
பிறந்து தாயின் கைபிடித்து நடக்கத் துவங்கிய கணத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் துயரமும்,தனிமையுமே வழிகாட்டுகிறது.தனிமை ஒன்றே அவருக்கு துணையாக வருகிறது.ஒவ்வொரு அன்பிலும் ஏமாற்றமும்,பரிகசிப்பும்,சுரண்டலுமே அவளுக்கான பரிசாக உலகம் தருகிறது.பதிலுக்கு அனைவருக்கும்,அன்பையும்,மெளனத்தையும் அளித்படி ஒரு துறவியென கடந்து செல்கிறார்.தன்மீது அன்பு கொண்ட சிலரையும் வாழ்வு பறித்துக் கொள்கிறது.புரிந்து கொள்ளப்படாத தன் பணத்தின் மீது மட்டுமே வெறி கொண்ட ஒரு தாம்பத்யம்,அதற்காகவே பெற்ற தாயிடமிருந்து பிரித்து டப்பிங் தியேட்டருக்குள் இழுத்து தள்ளிவிட்ட பெரியம்மா,
முன் எச்சரிக்கையுன் வரும் காதல்,என வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவள்மீது துயரமும்,தனிமையும் கொண்ட நதி யின் கரையினில் அமர வைக்கிறது. இன்னும் சில மணித்துளிகளில் பிரசவிக்க நேரிடும் என்கிற நொடியிலும் பிறருக்காக குரல். கொடுக்க ஓடும் அவலம்.ஆனால் அவளுக்கென்று குரல் கொடுக்க யாரும் இல்லாத உலகம்.கேரளத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் அவள் குரல் சிரிக்கிறது,அழுகிறது.ஆனால் அவளின் அவளுக்காக நிஜவாழ்வின் அனைத்தும் ஊமைகளாகவே இருக்கிறார்கள்.அனைத்தும் இருந்தும் பெருநிலத்தின் ஒற்றை. விருட்சமென தனித்தே அனைத்து திசைகளிலிருந்து வரும் துரோக ஊழிக்காற்றினையும்,எப்போதோ சில நண்பர்கள் தான்.
பெற்ற இரு குழந்தைகள் இருக்கும் திசையிலிருந்து வரும் தென்றலையும் தழுவியபடி அவ்விருட்சத்தின் கிளைகள் காற்றில் விரித்து அலைந்தபடி இருக்கிறது.ஒவ்வொரு பெண்ணும் இல்லை துரோகத்தை நம் மீது எந்த நிமிடமும் வீசத் தயாரக இருக்கும் இப் பூவுலகில் பிறக்க நேர்ந்திட்ட அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழ்க்கை பாக்யலட்சுமியினுடையது.
கே.வி.ஷைலஜா மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார்.பாக்யலட்சுமியுடன் இலகுவாக நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சாமிநாதன், 
திருவண்ணாமலை

No comments: