Thursday, 5 April 2018

தாமதமாய் வரும் காதலையும் புரிந்து கொள்ளவைத்த பாக்யலஷ்மி….




அப்படி எனக்கும் ஒரு காதல் வந்தது. ஈர்க்கும் அழகிய கனவுகள் இதழ் விரிக்கும் பதின் பருவத்திலோ, காதல் தீவிரமாய் ஆட்கொள்ளும்  இளமையிலோ அது என்னிடம் வந்து சேரவில்லை. எல்லாத் துணையையும் நிழலையும் இழந்து போன இந்த நடுவயதில் நானொரு காதலியாக மாறினேன்.

நாம் அதிகம் விரும்புபவர்களால் மட்டுமே நம்மை அதிகம் வேதனைப்படுத்தவும் முடியும். வாழ்க்கையில் ஒரு இடத்திலும் தோற்று போகாத என்னை நான் விரும்பிய மனிதர் தோற்கடித்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே இக்கட்டான  சூழலிலேயே வாழ்ந்து வந்ததால் காதலின் மகத்துவம் ஒன்றையும் நான் அனுபவித்திருக்கவில்லை. பதினெட்டு பத்தொன்பது வயதில் இசைக்கச்சேரிகளில் பாடப் போகும்போதும், டப்பிங் தியேட்டர்களிலும் துண்டு சீட்டில் ஐ லவ் யூஎன்று எழுதித் தந்திருக்கிறார்கள். ஆனால் அதை எப்படித் தொடர வேண்டுமென்று தெரியவில்லை. தொலைபேசி இல்லை. தனியே வெளியே வர அனுமதியில்லை. கனவுகளிலும் பெரியம்மா கம்புடன் கூடவேயிருந்தாள்.

முதல் முதலாய்  ஐ லவ் யூஎன்று எழுதிய காகிதத் துண்டு கையில் கிடைத்த நாளை இன்றும் நான் நினைத்துச் சிரிப்பேன். அது கிடைத்தபோது ஒரு படபடப்பு ஏற்பட்டது. என் முகத்தின் கள்ள லட்சணத்தை பெரியம்மா சட்டென உணர்ந்தாள். அப்புறமென்ன, பெரியம்மா அடியின் தாண்டவத்தையே நடத்தினாள். கொம்பு உடையும் வரை அடித்தாள். ஏதாவது ஒரு பையனோடு பேசியதால்தான் அடி வாங்கியிருந்தேன்.  அந்தப் பயத்தினால் அது போன்ற பேப்பர் துண்டுகளையும் என் காதலையும் காற்றில் பறக்க விட்டுவிடுவேன்.
சுதந்திரமாய் நான் இல்லாது போனதால் காதலின் சுகம் என்னவென்று ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. சுதந்திரமாய் வாழ வாய்ப்பு கிடைத்தபோது பருவம் முடிந்திருந்தது.

காதல் வயப்பட்ட பிள்ளைகளைப் பார்க்கும்போது எனக்கு அற்பமாயிருந்தது.  அவர்கள் முட்டாள்களாகவே எனக்குத் தோன்றுவார்கள்.

இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று இல்லையென்றே நான் நம்பினேன். ஆண் பெண் உறவு வெறும் உடல்ரீதியான உறவென்றே தவறாக நினைத்திருந்தேன். ஆனால் எனக்கும் என் நாற்பதாவது வயதில் காதல் வந்தது. எனக்கு அவருடனான காதல், அவருக்கு என்னிடம் இருந்ததாவென்று தெரியவில்லை.  அதனால் நான் பேர் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். எப்போதாவது மட்டுமே தொலைபேசியில் பேசவும், அபூர்வமாகவே பார்க்கும் நண்பர்களாகவும் இருந்தோம். எப்போதும் புத்தகங்களைப் பற்றியே அவர் பேசுவார்.  அதனால் அவர்மீது எனக்கு மிகவும் மரியாதையிருந்தது. திருமண பந்தத்தை உடைத்து வெளியே வந்து வாழும் நாட்கள். ஒரு நாள் நானும் பிள்ளைகளும் பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். நாங்கள் அந்த ரயிலில் பயணம் செய்கிறோமென்று நான் சொல்லியிருந்தேன். வண்டி எர்ணாகுளத்திற்கு வந்தபோது மாலை ஆறு மணி. அவர் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்து ஏறினார்.  குழந்தைகளுக்கு சாப்பிடவும் குடிக்கவும் நிறைய வாங்கி வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் வரேன் என்று சொல்லி இறங்கினார். நேரமாகியும் வண்டி கிளம்பவேயில்லை. அவர் திரும்பவும் வந்தார். 

வண்டி நான்கு மணி நேரம் கழிந்துதான் கிளம்புமாம். நீங்கள் திருவனந்தபுரம்போய் சேரும்போது ஒன்றரை மணியாகும். என்ன செய்வீங்க லஷ்மி?”

என்ன செய்யறது? ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிப் போவோம்,
 இல்லன்னா விடியும்வரை ஸ்டேஷனிலேயே இருப்போம்
அவர் மீண்டும் இறங்கிப் போனார்.
கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார்.
நானும் வரேன் உங்ககூட
ரயிலில் அவர் குழந்தைகளோடு பேசி, சிரிப்பும் விளையாட்டுமாய் இருந்தார். டாய்லெட்டுக்குப் பத்திரமாய் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். வண்டி திருவனந்தபுரம் வந்தபோது அவர் சொன்னதுபோல ஒன்றரை மணி. ஒரு டாக்ஸி பிடித்து எங்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர் திரும்பிப் போனார்.

அப்போதெல்லாம் எனக்கொன்றும் தோன்றவில்லை. ஏனென்றால் அப்படி எனக்கு உதவ நிறையபேர் இருந்தார்கள். உதவுபவர்களிடம் காதல் தோன்றுவது இயல்பானதில்லையல்லவா? அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. பேசிக் கொள்ளவுமில்லை. நான் அதைக் குறித்து யோசிக்கவுமில்லை. 

2001 காலகட்டத்திலெல்லாம் பின்னணிக் குரல்கொடுத்து ஏராளமான கதாபாத்திரங்களுக்கிடையில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு சினிமாவிலிருந்து மற்றொரு சினிமாவிற்கும் ஓடிக் கொண்டிருந்தேன். ரெக்கார்டிங் அறையில் நுழையும்போது நான் எல்லாவற்றையும் மறந்திருந்தேன். அந்த அறையின் உள்ளே போகும்போது நான் என் துக்கத்தை வாசலின் வெளியே வைத்துவிட்டுப் போவேன். பிறகு டப்பிங் முடியும் வரை நான் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்.  கடைசியில் எல்லாம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது அது என்னைத் தேடி வந்து சேரும். யாரும் எனக்காகக் காத்திருக்க ஆளில்லை என்ற உணர்வு என்னைப் பைத்தியமாக்கியது. வாழ்க்கை மிகவும் நிச்சயமற்ற நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருமுறை சென்னைக்கு போயிருந்தபோது வேலை முடிந்து நான் அறைக்குத் திரும்பினேன். இரவு ஒன்பது மணியிருக்கும், நிறைய நாட்களுக்குப்பிறகு அவர் கூப்பிட்டார். வழக்கம் போல பலதையும் பேசினோம். மூன்று நான்கு நாட்களாய் நான் சென்னையிலிருந்தேன். அப்போதெல்லாம் கூப்பிடுவார். அதன்பிறகு அவருடைய தொலைபேசி அழைப்பிற்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
முடிவாக ஒரு நாள் அவர், என்னை மிகவும் காதலிப்பதாகச் சொன்னார்.

முதல் முறையாக என் வாழ்வில் வார்த்தைகளால், குரல் வழியாக என்னைக் காதலிப்பதாகச் சொல்வதைக் கேட்கிறேன். அதுவும் நான் கேட்கும்படியாக. நிசப்தையாக அவர் சொல்வதை நான் கேட்டபடியிருந்தேன். நான் பேசினால் அவருடைய குரலின் சுகம் தடைபடுமோவெனப் பயந்தேன். ஆமாம், நான் காதலியாக மாறியிருந்தேன். பிறகும் நாங்கள் பேசினோம். பலவற்றையும் பேசினோம், சினிமா, புத்தகம், சங்கீதம், நான் வேலை பார்த்த படங்கள், மேலும் என்னுள்ளில் இருக்கும் பக்குவமின்மையைப் பற்றியும் அவர் பேசினார். முதல் தடவையாகத்தான் ஒரு மனிதன் என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறார். காதல் ஒரு பெண்ணை அழகாக்கும் என்பது சரிதான். ஆமாம், முதல் தடவையாக நான் அழகாயிருக்கிறேன் என்று அவர்தான் சொன்னார். அதுவரை யாரும் என்னிடம் சொன்னதில்லை. என் கணவர் உட்பட. இவர் சொல்வது கேலியோ என்றுகூட தோன்றும். எனக்கும் அப்படியொரு நம்பிக்கையில்லை. நான் காதலெனும் நதியில் மூழ்கிக் கொண்டிருந்தேன். அதுவரை திருத்தமாய் அலங்கரித்துக் கொள்ளவும் விருப்பமில்லாதவளாகத்தான் இருந்தேன். புடவை அழகாய் கட்டவோ, முகம் திருத்திக் கொள்ளவோ நான் முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. புடவைக்குப் பொருத்தமான ரவிக்கை போட வேண்டுமென்றோ அது எனக்கு பொருந்துகிறதா என்றெல்லாம்கூடப் பார்க்க மாட்டேன். நான் சுத்தமாய் என்னை வைத்திருப்பேன், அவ்வளவுதான். அவர் எனக்குப் பொருந்தும் நிறங்களைச் சொல்லித் தந்தார். நான் வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றியும், இசை பற்றியும் உலக சினிமாக்களைப் பற்றியும் சொல்லித் தந்தார்.

அவரும் என்னைப் போலவே முன்கோபியும் கௌரவக்காரராகவும் இருந்தார். குடிக்க மாட்டார், புகையில்லை. இப்படி எனக்குப் பிடித்த நிறைய குணங்கள்தான் என்னை அவரோடு நெருக்கமாக்கியிருந்தன. நாங்கள் அன்பிலாழ்ந்தோம், சண்டையிட்டோம், கோபப்பட்டோம். மகிழ்ந்திருந்தோம். மனோகரமானது அந்த நாட்கள். வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.
நான் என்னைக் கவனிக்கத் தொடங்கினேன். என் குணங்களையும் குணக்கேடுகளையும் பற்றி யோசித்து நான் தெளிவடையத் தொடங்கினேன். நான் மாறிக் கொண்டிருந்தேன். உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும். அதுவரை ரெக்கார்டிங் அறையிலும் வெளியிலும் எல்லா நேரங்களிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எல்லாரையும் கூர்ந்து நோக்கும் ஒரு பாக்யலஷ்மியாக மட்டுமே நானிருந்தேன். எப்போதாவது சிரித்தால் எல்லோரும் என்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருந்தது. அதனாலேயே எனக்கு முன்பாக எப்போதும் யாரும் தீண்ட முடியாத கோட்டினை அழுத்தமாய் வரைந்து வைத்திருந்தேன். முடியை இழுத்துப் பின்னி, ஒருவித ஆணவத்தோடு டப்பிங் தியேட்டருக்கு நான் வருவதைப் பார்க்கும்போது பலரும், இதென்ன இப்படி வருது என்று என் காதுபடச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் காதல், இழுத்துப் பின்னிய என் கூந்தலை விரித்துவிட வைத்தது. நெற்றியில் சிவந்த பொட்டு வைக்கச் சொன்னது. முகத்திலொரு புன்னகையைக் கொண்டு வந்து, மற்றவர்களை நம்பச் சொல்லிக் கொடுத்தது. ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்தில்லாமல் ஒருவரால் வாழ முடியாது என்று நான் நம்பியிருந்தேன்.

நாம் வாழ வேரொருவர் பின்னால் நின்று தாங்க வேண்டிய தேவையில்லை. நம் சக்தியுடன் தைரியமாய் நம்மை நாமே அன்பு செலுத்த வேண்டுமென்றும், எவ்வளவு அன்போடிருக்கும் அம்மா அப்பா வாய்த்தாலும் புருஷனிருந்தாலும் பிள்ளைகள் இருந்தாலும் நம் உடலையும் மனதையும் ஆரோக்யத்தோடு காக்க வேண்டியது நாம் மட்டுமே. யாரும் கடைசிவரை கூடவே இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. யாருமில்லையென்றாலும் நீ உன்னுடைய ஆத்ம தைரியத்தைக் கை விடக்கூடாது. நமக்கு மற்றவரிடம் அன்பு செலுத்த மட்டுமே உரிமையிருக்கிறது; வேதனைப்படுத்த அல்ல. இப்படியாக பல விஷயங்களை அவர் எனக்குச் சொல்லித் தந்தார்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்ற முயற்சித்தார்.
அடிமைத்தனத்தைச் சகிக்க முடியாமல் ஒரு தைரியத்தில் திருமண பந்தத்திலிருந்து வெளியேறினாலும் மற்ற சில காரியங்களில் கொஞ்சமும் தைரியமில்லாதவளாக இருந்தேன்.

2001 வரை நான் அப்படியொன்றும் ஊடகங்களில் தோன்றியதில்லை. எனக்குப் பேசத் தெரியாது.  ஊடகங்களிலும் மேடையிலும் பேசவும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் என்னை அவர் கட்டாயப்படுத்தினார்.

மேடைகளில் பேச வேண்டிய தகவல்களைக் கற்றுத் தந்தார். முதலில் பார்த்துப் படிக்கச் சொல்வார். பார்த்து வாசிப்பது அசிங்கமில்லையா என்று கேட்டால், எவ்வளவோ பெரிய ஆட்கள் பார்த்துப் படிப்பதை நீ பார்த்ததில்லையா என்று கேட்பார். எந்த விஷயம் குறித்துப் பேசினாலும் என் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களை விட நான் கூடுதல் அருகதை உள்ளவள் என்று தோன்ற வேண்டும். ஒரு களி மண்ணைச் சிற்பமாக மாற்றும் முயற்சியிலிருந்தார். நான் தலைகீழாக மாறினேன். எனக்கே என்னைப் பற்றி மரியாதை செலுத்த வேண்டிய விதத்தில் உருவத்திலும் பாவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல சமூகத்திலும் எனக்கொரு ஆளுமையை அவர்தான் ஏற்படுத்தி தந்தார்.

பிறகு என்ன ஏற்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை.
மெல்ல மெல்ல அவர் என்னிலிருந்து விலகத் தொடங்கினார். தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. பார்க்கவும் முடியவில்லை. இதற்கிடையில் எனக்கொரு விபத்து ஏற்பட்டது. ரொம்பவும் பெரிய விபத்து. ஒரு டாங்க்ர் லாரியில் இடித்து வண்டி சுக்கு நூறானது. எனக்கொன்றும் ஆகவில்லையென்றாலும் அந்தச் சாலையில் ஆட்கள் வந்து சேர்ந்தபோது சட்டென நான் கலவரப்பட்டேன். ஆனால் எனக்குக் கொஞ்சமும் பயம் தோன்றவில்லை. எனக்கு கூப்பிட்டுச் சொல்ல ஒருத்தர் இருக்கிறார். அதுதான் என் தைரியம். உடனே நான் அவரைக் கூப்பிட்டேன். என்னை அதிர வைக்கும் பதில்தான் அவரிடமிருந்து வந்தது.

என்னால் இப்போது வர முடியாது.

அந்த நொடியில் நான் நொறுங்கிப் போனேன்.
வாழ்க்கையில் ஒரு இழப்பு ஏற்பட்டால் நான் முழுவதும் தனிமையிலாவேன். நான் ஒரு அனாதைதான் என்றெல்லாம் தோன்றியது. விபத்தை விடப் பெரிய அதிர்ச்சியைத்தான் அவருடைய பதில் என்னில் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஓடி வந்து உதவியது வேறு ஆட்கள்.

இந்த நிகழ்வு என்னை மிகவும் துவளச் செய்தது.  உனக்கு ஏதாவது ஆயிடிச்சா?’ என்றுகூட அவர் கேட்கவில்லை. இதைப் பற்றிப் பிறகு கேட்டபோது மிகவும் உதாசீனத்தோடுதான் அவர் பதில் சொன்னார். ஆனாலும் நான் என்னைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவருடைய சூழல் அப்படியிருக்கலாம்.

பிறகொரு நாளில் என் சின்ன மகன் ஒரு பைக் விபத்தில் மாட்டிக் கொண்டு மரணத்தோடு மல்லுகட்டி மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் நான் அவரிடம்தான் சொன்னேன்.  நான் ஒட்டு மொத்தமாய் உடைந்து போயிருந்த நேரமது. எல்லோரிடமும் தைரியமாகவேப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்லமுடியாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போதும் அவர் வந்துவிடுவார் என்று முழுக்க நம்பினேன். எல்லாம் சொல்லி அழவேண்டுமே! ஆனால் அன்றும் அவர் வரவில்லை.  ஒரு மாதத்திற்குப் பிறகுதான் என் மகனைப் பார்க்க வருகிறார்.

ஒரு நாள் கட்டாயப்படுத்திக் கேட்டபோது சொன்னார்.
யோசிச்சு பார் லஷ்மி, என்னையும் உன்னையும் ஒன்றாகப் பார்த்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்னை விட்டுவிடு, உன் வாழ்க்கையை அது அதிகம் பாதிக்கும். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணும் ஆணும் ஒன்றாயிருந்தால் ஏற்படும் விளைவுகளை யோசித்து பார். இன்றுவரை உனக்கு ஒரு கெட்டபேரும் ஏற்படவில்லை. இனியும் அது ஏற்படக்கூடாது. இந்தச் சமூகம் நம்மைப் புரிந்து கொள்ளாது

நான் மனதோடு கேட்டுக் கொண்டேன், என்னை மிகவும் நேசிக்கிறேன் என்று சொன்னபோது இதெல்லாம் யோசிக்க வில்லையா? ஒரு ஆளை நேசிக்கவும் வேண்டாமெனவும் இவ்வளவு சுலபமாக முடியுமா?
நான் யோசிக்கிறேன், எங்களுக்கு நிறைய எல்லைகள் இருக்கிறது. குறிப்பாக எனக்கு. ஒரு உறவு வேரறுந்து போகும்போது மற்றொன்றில் வேர்பிடிப்பது சர்வ சாதாரணமானதுதான். அப்படி நான் போய் விழக்கூடாது. இனியொரு திருமணம் எனக்குப் பயமாக இருந்தது. ரகசிய உறவில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.
எல்லா ப்ரியத்தையும் மனதில் ஒதுக்கி அடைகாத்து நாங்கள் பிரிந்தோம்.

அதொரு கடினமான தீர்மானமென்று பிறகு நான் புரிந்துகொண்டேன். அவருடைய அவஸ்தை எனக்குத் தெரியாது. ஆனால் நான் உண்மையில் துடித்துப் போனேன். யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமல் நிரந்தரமாக பத்மநாபசாமி கோவிலில் தூண்களின் மறைவில் உட்கார்ந்து அழுதேன். கடவுளிடம் பேசினேன். உறவுகளில் எதற்காக என்னை இப்படி சிக்குற வைத்து வேதனைப்படுத்த வேண்டும்? முதலில் அப்பா, பிறகு அம்மா, அண்ணன், கணவரின் அப்பா, கடைசியில் இவரும். நான் நேசிப்பவர்களெல்லாம் ஏன் என்னை விட்டுப் போகிறார்கள்? யாருக்கும் என்னை வேண்டாமா?

அவர் எனக்கு ஏன் இவ்வளவு அன்பையும் கொடுத்தார்?

எதற்காக என்னை விட்டுப் போனார்?

 யாருடைய அன்பும் இல்லாமலே இந்தப் பெருவாழ்வை நான் வாழ்ந்து தீர்த்திருப்பேனே!

இதுவரை நான் ஒன்றும் கேட்டதில்லை. எல்லாக் கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொள்கிறேன். இவரை மறக்க எனக்கு உதவு தெய்வமே!

சத்தமிட்டு அழுதேன். கையில் கிடைத்த தூக்க மாத்திரைகளின் உதவியோடு தூங்க ஆசைப்பட்டேன். கேரளாவிலும் சென்னையிலும் மனநல மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் பார்த்தேன். அவர்கள் தந்த மருந்துகளையெல்லாம் சாப்பிட்டேன். இலக்கில்லாமல் கேரளா முழுக்க கார் ஓட்டி அலைந்து திரிந்தேன்.

இந்த நாட்களில்தான் புத்தகத்தின் ஆரம்பத்தில் சொன்ன பாலமந்திரத்தைத் தேடிப் போயிருந்தேன். ஆனாலும் எப்போதாவது  சுகமா லஷ்மி?’ என்று அவரிடமிருந்து ஒரு மெசேஜ் வருமென்று காத்திருந்தேன். ஆனால் அதன்பிறகு ஒருபோதும் அப்படியொரு மெசேஜ் வந்ததேயில்லை. நான் இல்லாமல் போனது அவருக்கு ஒரு பெரிய இழப்பேயில்லையோ? அவர் என்னை காதலிக்கவேயில்லை என்ற நினைவு அப்போதெல்லாம் வந்து,  என்னை மேலும் வேதனைப்படுத்தியது.

எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று வெளிக்காட்டிக் கொள்ள மற்றவர்களிடம் அதிகதிகமாகச் சிரித்துப் பேசத் தொடங்கினேன்.

என் முகம் மாறிவிடக் கூடாது, யாருக்கும் ஒன்றும் தெரிந்து விடக் கூடாது. மனம் பாரம் தாங்கமுடியாமல் கனம் கூடி நின்றது. 15 வருடம் ஒரு மனிதனின் மனைவியாய் வாழ்ந்துவிட்டு பிரிந்தபோதுகூட எனக்கொன்றும் நேர்ந்துவிடவில்லை. நினைத்து லயித்திருக்க எதையும் என் கணவர் எனக்காய் பரிசளித்திருக்கவில்லை.

எல்லாம் சகிக்கும் சக்தி தர வேண்டி லலிதா சகஸ்ரநாமமும் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். அதீத துக்கம் மேலெழும்போது அவருக்கு சடசடவென மெசேஜ் அனுப்புவேன். ஆனால் ஒருபோதும் அதற்குப் பதில் வந்ததில்லை. ஒருவேளை நான் அனுப்பியது பதில் தர முடியாத செய்திகளாக இருக்கலாம். இல்லை, நான் பதிலுக்கு அருகதையற்றவளா, இல்லை அவர் என்னை மறந்திருக்கலாம்.

வாழ்க்கையில் தனிமைப்பட்டு விடக்கூடாதென நினைத்துதான் நான் அவரை நேசித்திருந்தேன். பணமோ  சொத்தோ பாதுகாப்போ எதுவும் வேண்டாமெனக்கு. இதெல்லாம் எனக்காக நானே ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஆத்மார்த்தமாக நேசித்ததுதான் நான் செய்த குற்றம். எதுவும் எதனுடைய தொடக்கமுமல்ல. முடிவுமல்ல என்று எங்கேயோ படித்திருக்கிறேன். ஆனால் இது என் தொடக்கமாயிருந்தது.

கடைசியும்தான். இனி ஒருமுறையும் யாரும் என்னை இப்படி நேசிக்கவும் வேதனைப்படுத்தி அழ வைக்கவும் அனுமதிக்க மாட்டேன். நம் மனசுதான் நம்முடைய உற்ற நண்பன். அந்த நண்பனை அளவில்லாமல் துக்கப்படுத்தினால் அந்த வலி தாங்கமுடியாமல் அது நம்மிலிருந்து நழுவி விடும். கடைசியில் அது போய் சேர்ந்திருப்பது ஏதாவது பைத்தியக்கார விடுதியிலாக இருக்குமென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் மனதை நான் ஒருபோதும் வருத்தப்பட வைக்கமாட்டேன்.

ஒருவேளை இந்தப் பிரிவை அவர் முன்பே தீர்மானித்திருந்திருக்கலாம். என்னை அதற்காக அப்படியாக அவர் தயார்ப் படுத்தியிருக்கலாம். இரண்டரை வருடம் நான் மன அளவில் தளர்ந்து போயிருந்தாலும் இன்று நான் அவர் சொல்லித் தந்ததுமாதிரியே வாழ்கிறேன். எல்லோரையும் நேசிக்கிறேன். ஆனால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, பிள்ளைகளிடமிருந்தும் கூட.

பல இக்கட்டுகளையும் சமாளித்து வந்த பெண்ணல்லவா நான். இது அவ்வளவு பெரிய பிரச்சனையா? சுயமாக ஆசுவாசப்படுத்தி என்னை நிதானப்படுத்த முயன்றேன். மற்ற சமூக, பண்பாட்டு பிரச்சனைகளை நோக்கி மனதைத் திருப்பிவிட்டேன்.  நிறைய பயணம் செய்தேன்.  மூகாம்பிகையிலும் குடஜாத்ரியிலும் போய் தியானித்தேன். அவரைப் பார்க்க சாத்தியப்பாடுகளிருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் தவிர்த்தேன்.  ஒருபோதும் அவரை நினைக்காமலிருக்க, அவர் கொடுத்ததையெல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பைத்தியகாரத்தனம் தான் என்று புரிந்தாலும் அவரை மறக்க என்னால் முடியவில்லை. 

இந்தக் காதலும் இழப்பும் அவருக்கு வலியேயில்லையென்றால் நான் இப்படி அவஸ்தைப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆனாலும் ஒரு சுகமான வலியாக அந்தக் காதலை நான் மனதில் பொத்தி வைத்திருக்கிறேன். இனி ஒருபோதும் மற்ற யாரையும் இதுபோல நேசிக்க வாசல் திறந்து விடக் கூடாது என்று ஆசைப்பட்டு அவரை நேசித்து நேசித்து மறக்க முயற்சி செய்கிறேன்.

Friday, 30 March 2018

மரணம் அழுத்திச் சொல்கிறது





மரண வீடு உருவகங்களின் வசிப்பிடம். அங்குள்ள காட்சிகளில் எல்லாம் மிகையான அழுத்தம் இருக்கிறது.  பிரத்யேகமான சாயல் இருக்கிறது. மரண வீட்டின் திண்ணை நிழலில் உட்கார்ந்து அஞ்சாங்கல் விளையாடும் குழந்தைகள் வாழ்வின் ஸ்திரத் தன்மையைப் பற்றி எதையோ உணர்த்துகிறார்கள். வந்ததிலிருந்தே நிறுத்தாமல் அழும் ஒரு குழந்தை அங்கு வியாபித்திருக்கும்  ஏதோ கேட்டுணரமுடியாத சுருதிக்கேற்ப அழுதது. காப்பி மரத்தினிடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கறுப்புப்பூனை, மிகச் சரியான இடைவெளி விட்டு தொழுவத்திலிருந்து எழும் கறவைப் பசுக்களின் சப்தம், தலையைத் திருப்பி திருப்பி துர்சப்தத்தைக் கேட்ட கோழிகள் என எல்லாமுமாகச் சேர்ந்து அசாதாரணமான சூழலை உருவாக்கின. அங்கேயிருந்து தன் மகளின் முகத்தைப் பார்க்கும் அப்பாவின் கண்கள் என்றென்றைக்குமாய் இழந்தே ஆகவேண்டிய ஒருத்தியல்லவா இவள் என்ற எண்ணத்தில் தயங்கும்.  அன்பு செலுத்துபவர்கள் இன்னும் பெரியன்பின்             அலைகள்  நெஞ்சில் எழுவதை உணர்வார்கள். மரண வீட்டின் நிகழ்வுகள் அழுத்தமானவை. அங்கு கடன் கேட்டுப் பாருங்கள். கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.  அங்கே பொய் சொல்வது சுலபமல்ல. ஒவ்வொருவரின் இறுதி பரிணாமமாக மாறி இருக்கும் அந்த பூத உடல் கௌரவத்தோடு இருக்க உங்களை நிர்பந்தித்தபடி இருக்கும். தவறு செய்தவர்களின் தவறுகளின் சுமை ஏறும். மரண வீடு பிரமாண்டமானதொரு  பின்புலம். மரண  வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின்  புன்னகை  மேலும் மர்மமாகப் பரவி வருவதைத் தெளிவாகப் பார்க்கலாம். மரணம் நமக்கு பல விஷயங்களை அழுத்திச் சொல்கிறது.

பழங்கலத்தின் திண்ணையின் கீழ் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருக்கும் சுருண்ட முடியும்  நடுத்தர வயதுமுடைய கருப்பியின் தனிமையான கண்ணீருக்குத்  தீவிரம் அதிகம்.   கருப்பியின் ஒரு முடி இழையில் எத்தனை சுருள்கள் இருக்கிறதென்று ஒரு நாள் சுமித்ரா பிரித்துப் பார்த்தாள். ஒவ்வொரு முறை பிரித்த போதும் முன்னால் பிரித்த பாகம் முன்னைவிடச் சுருண்டது. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தச் சுருண்ட முடி எப்படி கண்டங்கள் தாண்டி, பெருங்கடல் கடந்து மலைப்பாதை ஏறி கல்பட்டாவில் பஸ்ஸிறங்கி உன் தலையில் வந்து உட்கார்ந்தது என்று சுமித்ரா அவளுடைய குளிர்ந்த சிரிப்பினூடே பலமுறை கேட்டிருக்கிறாள்.

மாலை நேரங்களில் பழங்கலத்தின் தூணில் சாய்ந்து நின்று சுமித்ராவும், தடுக்கில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கருப்பியும் எவ்வளவோ நாட்களைக் கடத்தியிருக்கிறார்கள். பணியன் - பணிச்சிகளைப்போல நீண்ட நேரம் குத்துக்காலிட்டு உட்கார பூமியில் வேறு யாராலும் முடியாது. பணிச்சிகள் நடவு நட்டுவிட்டு உட்கார்ந்தால் அறுவடை காலம்வரை அப்படியே உட்கார்ந்து விட்டு, பின் நெல் அறுக்க அரிவாள் சாணை பிடிக்க மட்டுமே எழுந்திருப்பார்கள் என்று  சுமித்ரா கருப்பியைப் பரிகசித்திருக்கிறாள். சின்னதாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில்  இறுகக் கட்டிய வேட்டியை உதறி மீண்டும் சரியாகக் கட்டி உட்கார்ந்து விடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பாத்திரம் கழுவித்தரவோ, இலை அறுத்துக் கொண்டு வரவோ போவதைத்தவிர மீதி நேரங்களில் திண்ணையிலோ, காப்பிச் செடியின் நிழலிலோ குத்துக் காலிட்டு உட்கார்ந்து விடுவார்கள். உட்கார்ந்த பிறகு எழுந்திருக்க மிகவும் யோசிப்பார்கள். தங்குவதற்கு இடம் இல்லாததால், கிடைக்கும் இடத்தில் உட்காரவும், உடல் மறைக்க ஒரே ஒரு துண்டு மட்டுமே மார்பில் கட்டும் வழக்கமுள்ள பணிச்சிகள் இப்படி உட்காருவதையே இருப்பிடமாக்கியும் பழகியிருந்தார்கள். திருமணமான புதிதில் சுமித்ரா, “இந்த பணிச்சிகள் உள்ளாடைகளுக்குப் பதில் குத்துக் காலிட்டு உட்காரப் பழகிக் கொண்டார்கள்,” என கீதாவுக்குக் கடிதமெழுதியிருக்கிறாள்.

வாசுதேவன் வீட்டில் இல்லாத நேரங்களில் கருப்பி சுமித்ராவின் முடி சிக்கெடுக்க, தலை உலர்த்த என ஒத்தாசைக்கு வருவாள். ஒரு நாள் குளிக்கலன்னாலும் எனக்கே என் பக்கத்தில் நிக்க முடியல. நீ குளிச்சு எத்தனை நாளாச்சு? இல்ல எப்பவாவது குளிக்கற பழக்கமிருக்காஎனக் கேட்கும் சுமித்ராவுக்கு, ஆனாலும் இவளிடமிருந்து எந்த நாற்றமும் வராதது ஆச்சர்யமாக இருக்கும். சுமித்ரா ஆற்றில் குளித்து முடித்து மேலேறி வரும்போது பணிச்சிகளின் குழந்தைகள் இடுப்புத்துணியோடு நாலைந்து முறை பல்டி அடித்து, தண்ணீரைக் கலக்கி விளையாடி, அப்படியே வெயிலில் நின்று, மெல்ல நடுக்கம் நீங்கி, காய்ந்த பிறகு அதே துணியோடு பட்டறைக்கோ, களத்திற்கோ போவார்கள். ஒன்று மட்டும்தான் அவளுக்குப் பிடிக்காது. வழியில் யாரும் இல்லையென்று தெரிந்தால், சற்றே முன்னால் சாய்ந்து நின்று கால் அகற்றி அணைகட்டி நிறுத்தின தண்ணீரைத் திறந்து  விடுவது போல  மூத்திரம் அடிப்பார்கள். உட்கார்ந்துதான் போனால் என்ன? மற்ற நேரங்களில் மட்டும் இப்படி குத்துக் காலிட்டு உட்காருகிறீர்களே! கேட்க நினைத்தாளே தவிர இதுவரை கருப்பியிடம் கூடக் கேட்டதேயில்லை.

எல்லா பணிச்சிகளும் சோம்பேறிகள் என்று சுமித்ரா சொல்வாள். நகர்ந்து உட்காரக்கூட தோன்றாமல் ஒரே இடத்தில் இப்படி உட்கார்வதில் என்ன சுகம் இருக்கிறதோ?

சுமித்ராவைத் திருமணம் செய்து புளிக்கல் வீட்டுக்குக் கூட்டி வரும்போது கேசவனுக்கு மூன்று வயதிருக்கும். அவனை முற்றத்தில் சாய்ந்து நிற்கும் பலாமரத்தில் ஏறி விளையாட விட்டுவிடுவாள் கருப்பி. பட்டறையிலிருந்து வரும் வழியில் பாலுக்கர பொயிலியிலிருந்து ஒளித்து, பறித்து வந்த ஆரஞ்சையோ கொய்யாவையோ எடுத்து வந்து சமையலறை கூரைகளின் மூங்கில் கழிகளில் தட்டி இனிமையாய் கூப்பிடுவாள்.

எளாம்ப்ராட்டி” (இளம் தம்புராட்டி)
இந்த அழைப்பின் பொருளென்னவென்று சுமித்ரா வாசுதேவனிடம் கேட்டபோது அவர், வீட்டுக்குப் பெரியவரை பாப்பன்என்றும் அவருடைய மனைவியை பாப்பத்திஎன்றும் கூப்பிடுவார்கள். நீ சின்ன எஜமானி அம்மா,  இளம் தம்புராட்டி. நான் இளம் தம்புரான். அதைத்தான் அவர்கள் எளாம்ப்ராட்டி - எளாம்ப்ரான் என்று கூப்பிடுகிறார்கள் என்றார். சுமித்ரா அன்றே கீதாவுக்கும் சுபைதாவுக்கும் கடிதமெழுதிளாள். ஏண்டி கழுதைகளா, நான் இங்க இளைய தம்புராட்டி தெரியுமா? உங்களைப் போல வீட்டு வேலைக்காரி இல்லை. செய்த வேலைக்கு மாமியார் இன்னைக்கு எவ்வளவு மார்க் போடுவாங்கங்கறது தானே உங்க கவலையா இருக்கும்? ஆனா எனக்கு கட்டளை இட்டபடி நடந்தால் போதும். இதோ இப்பகூட ஒரு அடிமைப்பெண் இரண்டு கிண்ணங்களில் வைத்துத் தந்த, இப்போதுதான் பறித்தெடுத்த கொய்யாக்காவை நான் பொறுமையாக சுவைத்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியுமா, வயநாட்டில் விளையும் கொய்யாவுக்குள் அப்படி ஒரு குளிர் இருக்கும். அதே அளவு இனிப்புமிருக்கும். அங்கே விரல் அளவில் பழுக்கும் காய் இங்கே தொடை அளவு பெருத்திருக்கும். ஃப்ரஷ்நெஸ்னா உங்களுக்கு அங்க சூடுதானே. இங்கே  குளிர்.  கொடுத்து வைத்திருக்க வேண்டும் கழுதைகளா

கீழே பட்டறையிலிருந்து குலை நடுங்கும் அலறல் சத்தம் கேட்டு மாதவியை கூட்டிக் கொண்டு சுமித்ரா போனபோது, அடுப்புத் திண்ணையில் கைகள் குத்திநின்றபடி அலறிக் கொண்டிருந்தாள் கருப்பி. கருப்பி அலறாதஎன்று அதட்டியபடி பக்கத்தில் அவள் அம்மா காளியும் நின்று கொண்டிருந்தாள். பிரசவிக்கும் பெண்களிடமிருந்து வரும் அனைத்து அழுக்குடனும் மேலும், நிர்வாணத்துடனும், வெட்கத்துடனும் மன்னிப்புக் கோரும் கண்களுமாய் கருப்பி அன்று இவளைப் பார்த்தபடி கிழிந்த பாயில் படுத்துக்கிடந்ததை சுமித்ரா எப்போதும் நினைப்பதுண்டு. அதற்கான பிராயசித்தமாகக் கூட இருக்கலாம், சுமித்ராவின் நிழலாகக் கூடவே இருந்தாள்  கருப்பி. அவளால் முடிந்த  நாட்களில் ஒரு நாளும்  சுமித்ராவின் வீட்டிற்குப் போகாமலிருந்ததில்லை.

கருப்பியின் வெள்ளை வெளேறென்ற புளியங்கொட்டைப் பற்களைப் பார்த்து டூத்பேஸ்ட்காரர்களுக்கு ஒரு எதிர்விளம்பரம் கொடுக்க வேண்டுமென்று சுமித்ரா நினைப்பாள். எவ்வளவு தேய்த்தாலும் மஞ்சள் நிறம் மாறாத வாசுதேவனின் பல்லையும், உமிக்கரியையோ, மாவிலையையோ, வேப்பங்குச்சியையோ கூட பார்த்தேயிராத கருப்பியின் பல்லையும் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் சுமித்ரா. அது அவர்களுடைய உணவு பழக்கத்தினால் கூட இருக்கலாம். பழைய வயநாட்டின் நீளமான வரப்புகளில் நண்டு வளைகள் மிகுந்திருந்தன. தென்னங்குச்சியின் மெலிதான முனையோ, நாணல் தண்டோ எடுத்து குத்திக் கிளறினால் ஏற்படும் குடைச்சல் சகிக்கமுடியாமல், அந்த குச்சியைப் பிடித்தபடி நண்டுகள் வெளியே வரும். அதைப் பிடித்து, சுட்டு அல்லது அவித்து கூடவே ஏதாவது தழையோ, தாம்போ பறித்து குழம்பு வைத்து, பூசணி இலையை வதக்கி, கஞ்சி வடிக்காத சோற்றுடன் சாப்பிட்டார்கள். பின்னாட்களில் ரசாயன உரம் வயநாட்டின் நண்டுகளை அழித்தது. தழை தாம்பின் சௌந்தர்யத்தையும் கருக்கியது. பணியர்கள் பித்தம் பிடித்த முகமுள்ளவர்களாக மாறினார்கள். அவர்களின் வெள்ளை பற்கள், உடைந்த மஞ்சள் பற்களாக மாறிப் போயின. கடிப்பதெல்லாம் விஷமான பின் குள்ளநரிகள்கூட வயநாட்டில் அபூர்வமாயின. நரிகள் ஊளையிடுவது  கூட தூரத்தில் கேட்கும் சப்தத்தில் ஒன்றானது.

கருப்பியின் வாழ்க்கையில் நடந்த எல்லா  நிகழ்வுகளிலும் சுமித்ராவுக்கும் பங்கிருந்தது. மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகே கருப்பியின் பாஷையை சுமித்ரா புரிந்து கொண்டாள். அதற்காக கருப்பியை விட சுமித்ரா அதிகம் விட்டுக் கொடுத்திருந்தாள்.

கருப்பி, இப்படியே பண்ணான்னா உன்னோட பணியன் கொராம்பிய நான் அடிச்சே அவனைக் கொன்னுருவேன்

தோட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கும், மைசூர் வாழையும், இஞ்சியும் திருடுவது எல்லை மீறிப் போனபோது கொரம்பியை வாசுதேவனே போலீசில் பிடித்துக் கொடுத்தார். சுமித்ரா வாசுதேவனின் காலில் விழுந்து அவனைக் காப்பாற்ற சொல்லி அழுதாள். கொரம்பனை போலீஸ் காலில் அடித்து நடக்க முடியாமல் கூட்டிப் போனதைப் பார்க்க பாவமாக இருந்ததால் வாசுதேவனே அவனை ஜாமீனிலும் வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது.

கொரம்ப’ - பணியன்கள் மழையில் வேலை செய்யும்போது பயன்படுத்தும் குடையின் பெயர் கொரம்ப’. ஒரு வேளை இந்த பூமியின் மிக பெரியதும், பாரமானதுமான குடையே அதுவாகத் தானிருக்கும்.  ஒரு சிறிய குடில் மாதிரியான குடை.

மூங்கில் வாரைகளைக் கிழித்துச் சின்னதாகப் பின்னி, மடித்து, உள்ளே *கூவ இலை வைத்து, இரண்டு தட்டாகப் பின்னி, ஆஜானுபாகுவான ஒரு ஆளுக்கு  நெஞ்சு வரை உயரமிருக்கிற பெரிய குடை. மழையையும், காற்றையும் தடுத்து, உள்ளே உட்கார்ந்தால் மாடத்திற்குள் உட்கார்ந்தது போல பாதுகாப்பு தரும். வசதியாக உட்கார்ந்து அழும் குழந்தைகளைப் பார்த்தால் பிரசவிக்காத பெண்களுக்குக் கூட பாலூட்டத் தோன்றும். அப்படி ஒரு குடை அது. காற்றுக்கு ஈடு கொடுத்து குளிர் தெரியாமல், மிகவும் வசதியாக அதற்குள் நின்று பணிச்சிகள் நாற்றெடுக்கவும், நடவும் செய்தார்கள். சந்தோஷத்தில் காற்றில் பரவ சிரிக்கவும், துக்கத்தில் தேம்பி அழவும் செய்தார்கள். சுமித்ரா அந்தக் குடையை உயர்த்திப் பிடித்துப் பார்த்திருக்கிறாள். இருபத்தைந்து ராத்தல் கனம் இருக்கும். ஏன் இப்படி குடையின் பெயரை மனிதர்களுக்கு வைக்கிறீர்கள் என்று கருப்பியிடம் சுமித்ரா கேட்டிருக்கிறாள். கேட்கும் போதே அதுவும் நல்லதுதானே என்றும் அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

நாங்க அப்படித்தாம்மா வெள்ளி, பூச்சி, கரப்பான், கரையான், கைம வெளியன், தொண்டி, தேன், தும்பி, சொரியன் பேக்கன், மாரி, பொந்து, முனியன், இப்படித்தான் பேரு வைப்போம்.   இந்தப் பூவுலகின் பூச்சிகள், உலோகங்கள், நெல் விதைகள், நிறங்கள், ஊனம் தான் அவர்களின் பெயர்களாகியிருந்தன. பூச்சி, உலோகம், விதை, நிறம், ஊனம் போல அவர்களும் குளிப்பதில்லை! சரியாக உடைகள் மாற்றுவதில்லை. நாட்கள் போகப்போக தவிட்டின் நிறத்திலும், தழையின் நிறத்திலுமாக மாறியிருந்தன அவர்களது ஆடைகள்.     கண் முன்னால் புதிய மல் துணிகள் சேற்றின் நிறத்தினை   அடைந்தன. பிரபஞ்ச ஆரம்பத்திலிருந்த நிறம். இன்னுமதிகமாக கசங்கவோ, பழையதாகவோ முடியாத நிறம்.

* கூவ இலை - அரரொட்டி மாவு கிழங்கின் இலை.


ஒருநாள் கருப்பி சுற்றிலும் யாருமே இல்லாதிருந்த போதும் குரல் தாழ்த்தி, அந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். அவளுடைய மூத்த அண்ணன் கைம, அதீத போதையில் புருஷன் கொரம்பியை அடித்து வெளியில் தள்ளிவிட்டு அவளைப் பலாத்காரம் செய்ய முயற்சித்தான். முன்பெல்லாம் அவர்கள் அப்படியொன்றும் பாதுகாப்பின்மையோடு வாழ்ந்ததில்லை. நோயையும், வலியையும், சந்தோஷங்களையும், சந்தேகங்களையும் அவர்கள் கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு நிம்மதியாய் வாழ்ந்தார்கள். குலத்தலைவர்களான மூப்பர்கள் மேற்பார்வையில் உடுக்கை அடித்து, பீப்பி ஊதி கடவுள் பக்தியில் தங்களை மறந்திருந்தார்கள். அவர்களின் கடவுள்கள் வெற்றிலைத் தோட்டத்திலோ, கள்ளிச் செடியின் அடியிலோ, ஜாதி இந்துக்களின் கடவுள்களிடமிருந்து தொடமுடியாததொரு தூரத்தில் தாழ்மையோடும், அதே சமயம் அருள் வந்தால் உக்ரத்தோடும் உறைந்திருந்தார்கள். பரவாயில்லை, அழ வேண்டாம். இனி அப்படி நடக்க நீ அனுமதிக்காதே. பொம்பளங்க   நாம என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் நடக்காம பாத்துக்கணும்.என்று சுமித்ரா சமாதானம் சொன்னாள். ஒரு காலை திண்ணையிலும் மறுகாலை மடக்கியும் உட்கார்ந்திருந்த அவளிடமிருந்து பிளேடை வாங்கி நகம் வெட்டிக்கொண்டே அதன் பின் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் கருப்பி. வெகு நேரம் தலை குனிந்து அமைதியாயிருந்தார்கள் அவர்கள். எதற்கோ இருவருக்குமே அப்படியொரு மௌனம் தேவைப்பட்டது. 


Thursday, 15 February 2018

'முத்தியம்மா' தொகுப்பு விமர்சனம் - பத்மநாபபுரம் அரவிந்தன்.



   கே.வி. ஷைலஜாவை சிறந்த மொழிபெயர்ப்பாளராக அனைவரும் அறிவோம். ஜாலங்களற்ற யதார்த்தமான வார்த்தைகளால் அவர் செய்யும் மொழிபெயர்ப்புகள் மூல நூலின் தரத்தையோ, வாசிப்பானுபவத்தையோ ஒரு போதும் குறைக்காததாய் இருக்கும்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடாகட்டும், எம்.டி ஆகட்டும் மற்றும் என்.எஸ். மாதவன், கல்பட்டா நாராயணன், சிஹாபுதின் பொய்த்தும்கடவு எனும் பலரின் மலையாள எழுத்துக்களையும் அதே கவித்துவமான நடையில் ஷைலஜாவால் தமிழுக்குத் தர முடியும் என்பதனை அவர் தம் மொழிபெயர்ப்புகளில் நிரூபித்துள்ளவர்.
ஷைலஜாவின் மொழிபெயர்ப்பை வாசித்த அனைவருக்கும், அவர் தமிழில் சுயமான படைப்பை தர வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். நானும் அவர்களிடம் பலமுறை இதனை தெரிவித்துள்ளேன்.
முத்தியம்மாவை ஒரு சுழி போட்டு துவங்கி இருப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.
இந்த புத்தாண்டின் விடிவே எனக்கு பவா அண்ணா, ஷைலஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ந்தது. நானும் என் குடும்பத்துடன் திருவண்ணாமலை போயிருந்தேன். அன்றுதான் நான் 'முத்தியம்மா' தொகுப்பை வாங்கினேன்.
காரில் சென்னை வரும் வழியிலேயே படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை (கட்டுரை) முத்தியம்மா வாசித்து முடித்து சற்று நேரம் அக்கதையினை காட்சிகளாக மனதுள் ஓட்டிப் பார்த்தேன். ஒருவரின் மனதினையும், எண்ண ஓட்டங்களையும் மிக சரியாக உள்வாங்கும் ஒருவரால் மட்டுமே இத்தனை தத்ரூபமாய் எழுத முடியும். சபாஷ் ஷைலஜா..
யாருக்கும் தான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரும் இடங்களும் நினைவுகளும் மறக்காது. அதிலும் பசுமை உறைந்து கிடக்கும் ஷைலஜாவின் கேரளாவின் நினைவுகளுள் நம்மையும் கைபிடித்து தன் பாட்டி வீட்டுக்கே அழைத்து செல்கிறார்.
வேறிடத்தில் எத்தனை ஆழமாய் வேரூன்றி கிளைபரப்பி பூக்களை சொரிந்தாலும் அடிவேரின் ஒரு பகுதியில் பிறந்து வளர்ந்த ஊரின் வாசம் கமழத்தான் செய்யும். அது அத்தனைக் கிளைகளிலும் பூக்களிலும் மிஞ்சும்.
இப்பொழுது மாதம் இருமுறை ஹெலிகாப்டரில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் நான் ஒவ்வொரு முறை அதில் ஏறும் போதும் , என் மனதுள் பால்ய காலத்தில் எப்பொழுதாவது ஊரின் மேலே பறந்து செல்லும் ஹெலிகாப்டரைக் காண அண்ணாந்து பார்த்தபடியே பத்மநாபபுரம் தெருவில் ஓடிய ஒரு சிறுவனின் நினைவும், உலகில் எங்கு சென்றாலும்.. பல சமயங்களில் வேளிமலையும், அடர் வனமும், எப்பொழுதும் நீர் நிரம்பி கிடைக்கும் பெருமா குளமும் மனதுள் வந்து நிற்கும். ஷைலஜாவின் ' நினைவில் காடுள்ள மிருகம் நான்' , அதனை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
கடைசியில் சச்சிதானந்தனின் வரிகளான ," நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது ..என் நினைவில் காடுகள் இருக்கின்றன", என்று மிகப் பொருத்தமாய் முடித்துள்ளார்.
நினைவிலிருந்து காடுகளை இழந்த மிருகங்களாகிப்போன மனிதர்கள் இதனைப் படிக்கும் போது தன் பால்யகாலத்தையும், பிறந்து வளர்ந்த ஊரையும் மனதுள் துழாவிப் பார்ப்பார்களென்பது நிச்சயம்.
இயக்குனர் பாலு மகேந்திராவின் மீது பவாவும், ஷைலஜா மற்றும் வம்சியும் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு சகலமும் அழகாய் சொல்லிப்போகிறார்.
தன் தம்பியாய், மகனாய் இருந்த நா. முத்துக்குமாரின் மரணம் தந்த பெருவலியும், அவரது நினைவுகள் தந்துகொண்டிருக்கும் துயரும் மிக உருக்கமாக நம்மை உறைய வைக்கிறது.
உமா பிரேமனைப் பற்றிய கட்டுரை ரொம்பவே மனதினை பாதித்தது. அதனை படித்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் மம்முட்டி ஷைலஜாவிடம் வாசித்துக் காட்டிய, குடியை பற்றிய ஷாஜி குமாரின் நையாண்டிக் கவிதையை சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.
அக்கவிதையினைப் படித்து முடித்ததும் சற்று நேரம் சிரித்தேன். ஆயினும் அக்கவிதை சொல்லும் நிஜம் என்னையும் யோசிக்க வைத்தது.
ஏனெனில் நானும் எப்பொழுதும், '' குடிக்கும் போது மட்டும் ரிஸ்க் எடுப்பதில்லை..  ''அதே போல குடியின் முடிவில்'' நான் ஒருபோதும் என்னானாலும் உருளைக்கிழங்கை மட்டும் தொடமாட்டேன்'', இக் கவிதையின் சம்பவம் எனக்கும் பலமுறை நிகழ்ந்துள்ளது.
யோசிக்க வைத்த கவிதை. குடி மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதனை சுய அனுபவத்தில் அறிந்தவன் நான்.
இப் புத்தாண்டிலிருந்து குடியை நான் மட்டுப்படுத்தி விட்டேன். இருபத்தி எட்டு நாட்கள் கடலில் குடிக்காமல் இருக்க முடிகிற எனக்கு விடுப்பில் வந்ததும் ஏன் அளவிற்கதிகமாய் குடிக்க தோன்றுகிறது?.. நான் ஏன் அக் கவிதையில் வருவது போல ' உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுக்க வேண்டும்', என்றெல்லாம் யோசிக்க வைத்தது.
கவிதையை எழுதிய ஷாஜி குமாருக்கும், வாசித்துக் காட்டிய நடிகர் மம்முட்டிக்கும் அதனை மொழிபெயர்த்து படிக்க வைத்து யோசிக்க வைத்த ஷைலஜாவிற்கும் நன்றிகள் பல.
மொத்தத்தில் தொகுப்பு முழுக்க பல விதமான விஷயங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷைலஜா தொடர்ந்து மொழிபெயர்ப்புடன் சிறந்த புனைகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதவேண்டுமென ஒரு நண்பனாய் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் 
பத்மநாபபுரம் அரவிந்தன்

Wednesday, 14 February 2018

சுமித்ரா - வாசிப்பனுபவம்




    
சீனிவாசன் அவர்களின் அழகிய கோட்டோவியங்கள் பத்து பக்கம், எஸ் ராமகிருஷ்ணனின் ஆழமான முன்னுரை இவையெல்லாம் போக நூறு பக்கங்களே இருக்கும் ‘சுமித்ரா’ நாவலை இரண்டாவது முறையாக படிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். என்ன செய்வது , கல்பட்டா நாராயணனின் , “இத்ரமாத்திரம்” எனும் மலையாள நாவலை , சுமித்ரா என்ற பெயரில், கே வி ஷைலஜா அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் வாசிக்க வாசிக்க, ஒரு கவிதை புத்தகத்தை வாசிப்பதுபோல் இருந்தது. நூறு பக்க நாவலைப் படிக்க வேண்டுமானால் படிப்பவர்களின் வேகத் திறனைப்பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மணி ஆகும். எவ்வளவு வேகமாக படிப்பவர் என்றாலும், அதே கவிதை புத்தகமாக இருந்தால் வாரம் அல்லது மாத கணக்கு ஆகும் அல்லவா? கவிதைகளை படிக்கும்பொழுது ஒவ்வொருவரும் செய்யும் செயல்பாடுகள் ஒன்றுதானே. நிலை குத்திய பார்வையில் உள்ள ஒரு பைத்தியக்காரனாக (பிடித்துப்போய்த்தான்) இருந்தேன். படித்துவிட்டு கொஞ்சம் தொண்டையில் எச்சில் விழுங்கினேன். மேலே அண்ணாந்து பார்த்தேன். தலையைச் சொறிந்துகொண்டு எனக்குத் தெரிந்த அந்தப் பெண்களை போல் , அந்த உறவினரைப் போல், இறந்துபோன தெரிந்த ஒருவரைப்போல் என்று நினைவுகளை கொஞ்சம் பின் நோக்கி கடத்தினேன்.
ஒரு மரணம் பற்றி சொல்லிவிட்டு, அதற்கான காரணம் என்ன என்ற தேடலில் வாசகனை ஒரு துரித மனப்பான்மையில் படிக்கவைக்காமல், மரணமடைந்தவளின் சுற்றியிருப்பவர்களுடைய வாழ்வியலை முகத்தில் அடிக்கும் உண்மை நிகழ்வுகளுடன், அவர்களின் அகங்களை காட்சிப்படுத்திக் கொண்டு செல்லும் நாவல். முதல் முறை படித்து மூன்று மாதங்களாகியும், சுமித்ராவும், அவளுக்கு பிடித்த பழங்கலம் இடமும், அவளது தலைவலியும், மாதவியும், வயநாட்டு ஆண்களும் , அவர்களை பற்றி காப்பிச்செடிகள் தெரிந்து வைத்திருந்த ரகசியமும், எதிர்த்து வந்து நின்றாலும் அடையாளம் தெரியாத வாசுதேவனும், அண்ணனும் தம்பியும் சேர்ந்து வியாபாரம் மட்டும் செய்யவில்லை என சொல்லும் கீதாவும், எல்லோருக்கும் வேலை செய்யும் தாசனும் , அழுமூஞ்சி அனுசூயாவும், தனக்குமுன் ஆறு கால்கள் வட்டமிடும் சமயம் நிலைகுலைந்து நடுங்கிய தாமோதரன் சாரும், வெற்றிலை போட்டுக்கொண்டு வெண்கல செம்பு விற்கும் பொதுவாளும், குத்துக்காலிட்டு அமரும் கருப்பியும், அவள் சார்ந்த மக்களும் ஞாபகத்தில் அழியாமல் இருந்தார்கள். மனிதர்களல்லாமல், சுமித்ரா தூங்கும்பொழுது எப்படி தனது கைகளை வைத்துக்கொள்வாளோ அப்படித்தான் மரணம் நிகழ்ந்தும் படுத்திருக்கிறாள், பணிச்சிகள் மூத்திரம் அடிக்க எப்படி நிற்பார்கள், பணியன்கள் குழந்தைகளுக்கு கந்தக சாலா என்றோ, சீராக சாலா என்றோ பெயரிடவில்லை, குள்ளர்கள் வயதானவர்கள் என்று தெரிந்ததில் , குழந்தைகள் உற்சாகம் இழந்தார்கள், சித்திரை மாதங்களில்தான் அங்கு அதிக பிரசவங்கள் நடந்தன, போன்றவைகளும் படத்தின் காட்சிகளை போல மனதில் ஒன்றிவிட்டிருந்தன. ஆதலால் இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது, முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பித்தாலும், வயநாட்டில் யாரை மறந்துவிட்டோம் , எந்தக் கவித்துவத்தை திரும்பவும் அசைபோடலாம் என்று எந்த பக்கத்தை வேண்டுமானாலும் சுதந்திரமாக புரட்டி வாசித்தேன்.
இந்தமுறை புருஷோத்தமன், சுமித்ராவிடம் கொண்ட அன்பை, அவள் அவனை ஆணாக மதித்து கால்சட்டை போட்டுவிட்ட விதத்தை , நிர்மலாவில் அவன் சுமித்ராவை அடையாளம் கண்டதில் நானும் தெரிந்து உணர்ந்தேன். நீண்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்த சுமித்ராவின் மீது வெறுப்பு ஏற்பட்டு காறித்துப்ப துணிந்த மரியாவின் காரணம் மறந்துவிட்டிருந்தது. மீட்டெடுத்துக்கொண்டேன். தண்ணீரின் முதல் குளிர்ச்சியை தாங்க முடியாத அப்புவின் வீட்டில் சுமித்ரா இருந்திருக்கிறாளா, ஒரே போர்வைக்குள் தூங்கினாளா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். கௌடரின் இருமலும் , அது ஆரம்பிக்கும் நாளை சுமித்ரா வட்டமிட்டு நினைவு படுத்தி நெய்யரிசி கஞ்சி எடுத்துக்கொண்டு செல்வதையும் அறிந்து , ஒரு தோழியின் இழப்பு அவருக்கு எப்படி இருக்கும் என வருந்தினேன். சுபைதாவுக்கு யானைக்குட்டி என்ன செய்தது என்ற ரகசியம் அறிந்து, முதல் முறை வாசித்தபொழுது அவமான வலியை எப்படி இனம் காணாமல் இருந்துவிட்டேன் என்று அதிசயித்தேன். வாசுதேவனை விளக்கமாக சொல்லும் , அவர்கள் பரஸ்பரம் பார்த்ததில்லை அத்தியாயத்தில், "ஒருவேளை அப்படி ஒரு மனநிலை வாய்த்தால் பிரியத்தின் மேல்தான் அவள் மனம் சாயும்" எனும் வரிகளில் மனம் லயித்தேன். "போபனையும் மொழியையும்" படிப்பதை விட்டுவிட்டு சுமித்ரா மரம் வெட்டுபவனின் உடல் அசைவுகளை எண்ணியதை நான் மறந்திருக்கவில்லை. ஆனால் செய்யதலி, சூப்பியிடம் கோவேறு கழுதைகள் எப்படி உருவாகிறது என்று சொல்லி சிரித்ததை மறந்துவிட்டிருந்தேன்.
“ஒரு பண்பாடு முழுமையாக அழிந்தபின் அதில் ஒரு நூல் மட்டும் எஞ்சுமென்றால் அந்நூலில் இருந்து அப்பண்பாட்டை ஏறத்தாழ மீட்டுவிட முடியும் என்றால் அதுவே காவியம்” என்று ஜெயமோகன் சமீபத்திய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அப்படி பார்த்தால், செவ்வாயில் காலூன்றி வாழ நேரிடும் பிற்கால மனிதன் வயநாடு என்ற கிராமத்தையம், மனிதர்களையும், சூழலையும், பண்பாட்டையும் சுமித்ரா அல்லது இத்ரமாத்திரம் நூலை வைத்துக்கொண்டு உருவாக்கிவிட முடியும் என நினைக்கிறேன்.
வ.சௌந்தரராஜன் 
02/11/2018



Tuesday, 13 February 2018

நாங்கள் விழுதுகளாய்  இருக்கிறோம்  அப்பா...







“குட்மார்னிங் ஷைலு, நான் பாலு பேசறேன்”
ஒவ்வொருமுறை என் அலைபேசியில் அவர் பெயர் வரும்போதும் நான் பதற்றமாகிவிடுவேன். இயல்பாய்ப் பேசத் தொடங்க பத்து நிமிடங்கள் ஆகும்.  எவ்வளவு பெரிய ஆளுமை அவர். எத்தனை பேருக்கு ஆதர்ஷம், கனவு, வாழ்நாள் லட்சியம், தொலைதூரத்து ஏக்கம், மட்டுமல்ல தன் மைல்கற்களைத் தானே தாண்டிய ஒரு அபூர்வம், அதன்வழி சிந்தாமலிருக்கும் பூரணத்துவம்.
“ஷைலு என்னை அப்பான்னு கூப்பிடும்மா, மற்றவங்க என்னைக் கூப்பிடறதை விட நீ  கூப்பிடனுன்னு  ஆசையாயிருக்கம்மா” என்ற அவரை அப்பா என்று என்னால் கடைசிவரை  கூப்பிட முடிந்ததில்லை. ஒரு மஹா சமுத்திரத்தை எனக்குள் மட்டும் தேக்கி வைத்திட எனக்கு தைர்யம் வந்ததேயில்லை.
“நான் கௌம்பறேன் ஷைலம்மா” என்று ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் மறக்காமல்  சொல்வீர்களே, இறுதிச் சந்திப்பில் மட்டும் என்னிடம் சொல்லிக்கவேயில்லயே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்தபோது “ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் ஷைலு, நல்லாயிருக்கேன்” என நான் நம்பும்படி சொன்னீர்களே சார்.  உள்ளுக்குள் எதை மறைத்து வைத்திருந்தீர்கள்? ஏன் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? பிறந்து சில மாதங்களிலேயே அப்பாவை இழந்த எனக்கு எதற்காக அந்த உறவின் தளிர்களைத் தரிசிக்க வைத்தீர்கள்? தலைகோதி, கைபிடித்து எதற்காக அதன் எல்லைவரை அழைத்துச் சென்றீர்கள்?
ஆனாலும் ஆனாலும் எனக்குள்  இதுவரை சேமித்து வைத்திருக்கும் நினைவுகள் போதுமெனக்கு. இந்தப் பேரிரைச்சலிலும் நான் நிறைவடைந்திருக்கிறேன்.
நான் நல்ல சினிமாவைப் பார்க்க மட்டுமே தெரிந்தவள். அதை விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடத் தெரியாது. எனக்கு அன்பைப் பெறவும், பொத்திப் பாதுகாக்கவும் அதனை அடுத்த நெஞ்சுக் கூட்டிற்குள் கடத்தவும் மட்டுமே தெரியும், அதனால் மட்டுமே நான் அவருடைய மகளானேன். பார்க்கிற எல்லோரிடத்திலும், ‘இது
ஷைலு என் மக’ என நானே கூச்சப்படுமளவுக்கு என்னை அறிமுகப்படுத்துவார்.
தன் அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காகத் திருவண்ணாமலைக்கு வந்த அவர் தினமும் மாலையில் ‘வம்சி’  அலுவலகத்திற்கு வருவார். மிகவும் வித்தியாசமானதொரு காஸ்ட்யூமில் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டுத் தலையில் துண்டுகட்டி அதைத் தோளுக்குச் சற்று கீழே தொங்கவிட்டுக்கொண்டு வந்து உட்காருவார். சென்னையில் கூடக் கிடைக்காத உலகத் திரைப்படங்கள் இங்கே வைத்திருக்கிறீர்களே என ஆச்சரியப்பட்டு கை நிறைய படங்களை அள்ளி சேகரித்துக்கொள்வார். புத்தகக் கடைக்கு வரும் நண்பர்களுக்கு அவரின் இருப்பு பேரதிர்ச்சியாக இருக்கும். என்ன சாப்பிடலாமென்றால் ‘பகோடா சொல்லம்மா, காரப்பொரி சாப்பிடலாம்’ என்று கேட்டு சாப்பிடும் அவரைத் தெருவில் போவோர்களும் வருபவர்களும் அதிசயமாய் பார்த்துக்கொண்டே போவார்கள். கடைக்குள்ளே வரும் வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதை நான் பார்த்ததுண்டு. ஒரு டீ குடித்துவிட்டு நாங்கள்  மலை சுற்றும் வழியிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று கதைகளாகப் பேசிக்கொண்டிருப்போம். தமிழின் ஆகச் சிறந்த கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள்,  தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் , தன் சினிமா அனுபவங்கள்,  தான் எடுக்கப்போகும் திரைப்படங்கள் என்று சுழலும் அப்பேச்சிலிருந்து துண்டித்துக்கொள்ள எப்போதும் மனசே வந்ததில்லை.
 இரு நாட்கள் எங்களுடன் தங்க வந்திருந்த சாரும் மவுனிகாவும் ஒரு மதிய உணவிற்குப் பிறகு நன்றாக ஓய்வெடுத்தார்கள். அன்று மாலை அவரின்  கதைநேரக் கதைகளைத் திருவண்ணாமலை பார்வையாளர்களுக்காகக் திரையிட்டோம். மிகக் கண்டிப்பானதொரு வாத்தியாராய் மாறி படம் பார்ப்பதற்கு வைக்க வேண்டிய கலர், கான்டிராஸ்ட், ஒலி என  சொல்லித் தருகிறார். ஆப்பரேட்டருக்கு அது சரிவரப் புரியாதபோது அவரே குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதைச் சரி செய்கிறார். தன் படைப்பு மிகச் சரியான வடிவத்திலும் துல்லியத்திலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்ற, ஒரு படைப்பாளிக்கே உரிய ஆர்வம் பிரதிபலித்த நிமிடங்கள் அவை. என்னுள் பிரமிப்பாய் நிலைபெற்றதும்கூட.
அடுத்தநாளே வாய்த்த  இரண்டு மணிநேர கார் பயணம் போதும் என் வாழ்வு அர்த்தப்பட.  மாலையும் இரவுமல்லாத  மங்கும் பொழுது அது. சில நேரங்களில் நாம் நினைக்கும்போதே மழை பெய்யுமே அது போல, என்னவென்றே தெரியாமல் காலையிலிருந்தே மனம் சந்தோஷத்தில் அலையடிக்குமே அது போல, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சார் சொல்லும் ஒவ்வொரு கதையையும் நானும் படித்திருந்தேன். ஜி.நாகராஜன், தி.ஜா., சுந்தர ராமசாமி, அவருக்கும் எனக்கும் எப்போதும் பிடித்த பிரபஞ்சன் என அடித்த சுழல் லா.ச.ரா. வில் வந்து நிலைகொண்டது. லா.ச.ரா.வின் பச்சைக் கனவொளியில்  கிறங்கிய பேச்சின் நடுவே ’எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா  நான் கொஞ்சம் உன் மடியில் படுத்துக்கறேனே’ எனப் பின்னிருக்கையில் என் மடியில் படுத்து உறங்கிப்போன மவுனியை எங்கள் கதாநாயகர்களும் நாயகிகளும் தொந்தரவு செய்யவேயில்லை.
இந்த ஐந்தாறு வருடங்களில் அநேகமாய் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசுவார். தன் சினிமாப் பட்டறையில் உச்சமாக இலக்கிய வகுப்பெடுத்த பெருமிதத்தை, தன் மாணவன் மிகக் கண்டிப்பாக நவீன இலக்கியம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை, ஏதோ ஒரு மாணவன் கதைகளைப் படித்தபின் எழுதிக் கொடுத்த சினாப்சிஸில் தன்னைக் கரைத்துக் கொண்டதை, அவருக்குப் பிடித்த அவருடைய மவுனி புள்ளி குத்த முடியாத காரணங்களால் அவரிடம் பேசாமல் இருந்த துக்கத்தைப் பேசி ஆற்றிக் கொள்ள, எப்போதும் படைப்பாளியிடம் அந்தஸ்து தள்ளியே நிற்கும் மாயைக்குத் தான் இரையாகாத பேராண்மையை, இந்த வயதில் தான் தனியனாய் வாழ நேரிட்ட துயரம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் அடுத்த அழைப்பிலேயே மழைநீர் முகத்தில்பட்ட குழந்தையாய்க் குதூகலிக்கவுமான வாழ்க்கை அவருக்கு வாய்த்திருந்தது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லத்தான் மிகப்பொருத்தமானவன் என்றும், அவனவன் தன் வாழ்க்கையிலிருந்துதானேம்மா படம் எடுக்க முடியும், என் படங்கள் எப்போதும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாவேதான் இருக்கு என்று பேசி சிரிப்பார். நான்தான் அவரின் சோகங்களிலிருந்து வெளிவரத் தெரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
2011 சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்த என்னிடம்  வந்து  உட்கார்ந்து ’ஒரு டீ சொல்லம்மா’ என்று பேச ஆரம்பித்தார். வழக்கம்போல மானசி தாத்தாவிற்காக ப்ளாக் டீ வாங்கி வர ஓடினாள். ‘வெற்றியோட  ஆடுகளம் படம் பாத்திட்டு நேரா வரேம்மா, அய்யோ எப்படி எடுத்திருக்கான், ஜட்ஜஸ் சரியா அமஞ்சா இந்தப் படம் ஆறு அவார்டு வாங்கும், ஒரு வேளை ஜூரி அவார்டு ஜெயபாலனுக்குக் கிடைக்கும். சொந்தக்குரலில் பேசியிருந்தால் தேசிய விருதே கிடைக்கும்’ என்றார்.  அந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட  தேசிய விருதுகள் அவ்விதமேயானது. விருது அறிவிக்கப்பட்ட அன்று அவருக்கிருந்த சினிமா நுட்பமும் சரியான திரைப்படம் குறித்த தன் அவதானிப்பும் தன்  வாழ்வை சினிமாவில் மட்டுமே வைத்துக் கரைத்துக் கொண்டிருக்கும் அக்கலைஞனின் அசாத்திய நம்பிக்கையும் என்னை உறைய வைத்தது.
என்  ‘வம்சி புக்ஸ்’ சில புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது ஒரு பதிப்பாளராய்ப் பெருமிதத்தில் லேசாய் என் மனம் ததும்பிக் கொள்ளும். அதில் எப்போதும் எங்கள் பாலுமகேந்திரா சார் தான் இருப்பார். எந்த காம்ப்ரமைசும் இல்லாமல், தான் உருவாக்கிய கதைநேரக் கதைகளை மூன்று பாகங்களாகவும் தனக்கு எப்போதும் ஃப்ரெஷ்ஷாகப் பார்க்கத் தோன்றும் வீடு படத்தையும் புத்தகமாக்கி அவர் கைகளில் கொடுத்து அந்த முக சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் நான் தரிசித்துவிட்டேன். அட்டை வடிவமைப்பில் சின்னச் சின்ன திருத்தங்களைக் கூட மிக நுட்பமாகப் பார்த்து தன் திரைப்படக் கல்லூரி அலுவலகத்திற்கு டிசைனரை வரச்சொல்லி, திருத்தி மீண்டும் எனக்கு அனுப்பி சரிபார்த்து என அவர் காட்டும் பொறுமையும் படைப்பின் மீதான அக்கறையும் நாம் அவரிடம் கற்றுக்கொண்டே ஆக வேண்டியது. வீடு திரைக்கதை புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்வது தொடர்பாக ஒரே நிமிடத்தில் முடிவெடுத்தோம். ‘ என் அம்மாவுக்குன்னு போடலாம்மா. சரிதானே ஷைலு’ என்றவர் மிக அற்புதமான கவிதையாய் ஒரு சமர்ப்பணம் எழுதி அனுப்பினார்.
மனுஷ்யபுத்திரனின் கவிதைவரி போல ‘நாளைக்கு வந்தேன்’ எனச் சொல்லும் குட்டி  இளவரசியின் மனசொத்தவர். காலம், நேரம், ஒரு தேதி வைத்து வேலைகளை முடிப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. மருத்துவமனைக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் கூப்பிடுகிறேன்.
‘சார், ஷைலஜா பேசறேன் சார்’
‘அய்யோ ஷைலு,  நம்புவியாம்மா நீ? நானே கூப்பிடணும்னு இருந்தேன். ஐ வாஸ் சேர்ச்சிங் யுவர் நெம்பர். புது நெம்பர் உன்னோடது சேவ் பண்ணியிருந்தேன். அத எனக்கு எடுக்கத் தெரியல ஷைலு. ஐம் சாரி ஷைலு. வீடு பட டிவிடியை நான் இன்னும் முன்னாடியே குடுத்திருக்கணும்மா’
‘சார் தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்ல சார், நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்க மட்டும்தான் நான் கூப்பிட்டேன்’
‘எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்கேன். ஐ ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்’
பேசி இரண்டு நாட்கள்கூட முழுமையாய்க் கடந்து போகவில்லையே. என்னவாயிற்று சார் உங்களுக்கு?
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், மாலையில் எங்களுடன் மூன்று மணிநேரம் இருப்பார். கூட்டம் அதிகமாகயிருக்கும். நீங்கள் வரவேண்டாமென்றால் ‘ஆஃபீஸ்ல போரடிக்குது ஷைலம்மா, என் பேரப் பிள்ளைகளோட இருக்கேனே’ என்று ஆசைஆசையாய் வருவார். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வாசகனையும்
சினிமா தாகம் கொண்டவர்களையும் பெயர் கேட்டு  ‘வாழ்த்துக்களுடன் பாலுமகேந்திரா’ என்று எழுதித் தேதியிட்டுக் கொடுத்து நெகிழவைப்பார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளத் துடிக்கும் எந்த இளமனதையும்
அவர் உதாசீனப்படுத்தியதில்லை. இனி தான் நிறைய டெலி
 ஃபிலிம் எடுக்கப்போவதாகவும் சக்காரியாவின் கதைகள் தனக்கு மிகவும் நெருக்கமாகயிருக்கிறதென்றும் அவருடைய  ‘யாருக்குத் தெரியும்’ கதை தனக்குப் பிடித்த கதைகளில் ஒன்றென்றும் ஜெயஸ்ரீயிடம் பேசினார். அவள் மொழிபெயர்த்த யேசுகதைகள் தொகுப்பைப் பற்றி நிறைய நேரம் அவளோடு விவாதித்தார்.
‘இன்னக்கி இங்க வர்றதுக்கு முன்ன ஒரு சின்ன நாட் மனசிலப் பட்டுதும்மா, கேளு’
என்று அம்மாவிற்கும் மகனுக்குமான உறவைப் பற்றிய குறும்படத்திற்கான கதையைச் சொல்கிறார். பிண்ணனியில் அன்னலஷ்மி என்று யாரோ யாரையோ கூப்பிடுவதைக் கேட்டு அதிர்ந்து, பின் சிரித்துக் கொண்டே பதின் வயதில் தனக்கேற்பட்ட காதலையும், அவள் தனக்குச் சொல்லிக்கொடுத்த காமத்தையும் சொல்லி சிரிக்கிறார்.
நானும் பவாவும் சேர்ந்து நண்பர்களுக்காக ஒரு சிறு கல்வீடு கட்டினோம். அதன் திறப்புவிழாவை  எங்கள் மகன் வம்சியின் பிறந்த நாளன்று வைத்திருந்தோம். அந்தக் கல்வீட்டின் தரையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்த அவர், ‘என் அம்மா ஒரு சந்தோஷமான மனுஷி. அவள் வீடு கட்ட ஆரம்பித்ததும் தன் எல்லா சந்தோஷங்களையும் இழந்துவிட்டாள். அந்த வலியின் மிச்சம்தான் என் ‘வீடு’. ஆனால் என் மகள் ஷைலு இந்த வீட்டைக்கட்டித் தன் சந்தோஷங்களை இதில் நிறைத்திருக்கிறாள். இது அசாத்தியமான ஒன்று, எனக் கவிதையாய்ப் பேசிக்கொண்டே போனார். மாலையில் ஒற்றைஅறை கொண்ட எங்கள் நில கெஸ்ட் ஹவுசைத் திறந்துவைத்தபோது நாங்கள் விரும்பி அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் அபூர்வமாய் எங்களுக்கு நிலைத்துப்போனது.
சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் ஒருமுறை அவரைப் பார்த்து விடுவதும், ஒன்றாய் ஒருவேளை சாப்பிடுவதுமாய்த் திரும்பிவருவோம். என்கூட தங்க மாட்டேங்கிறீங்க என்று  அவருக்குப் பெரிய ஆதங்கமுண்டு. வேறு எந்த வேலையும் இல்லாமல் மருத்துவப் பரிசோதனைக்காக மட்டுமென்று சென்னை சென்றபோது அவரிடம் நாங்கள் அங்கு வந்து தங்குவதாகச் சொன்னோம். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். நானும் பவாவும் ஜெயஸ்ரீயும் நண்பருமாய்ப் போவதற்குள் ஒரு வகுப்பறையை ஒழித்து சுத்தம் செய்யவைத்து புதிய படுக்கை விரிப்புகள், தலையணைகளில் ஆரம்பித்து என்னென்ன தேவையோ அவ்வளவையும் செய்து மூன்றாம் நாள் திரும்பி வரும்போது பெற்ற தகப்பனைப்போல மருமகனுடன் செல்லும் மகளைக் கண்ணீர் மல்க கார் கதவை அடைத்துவிட்டு நின்ற அந்த பிரம்மாண்ட உருவம் எனக்கும் பவாவிற்கும் வாழ்நாளில் மங்கிப் போகாதது.
 இப்போது நினைவுகள் ஊற்றெடுத்துப் பொங்கிப் பொங்கி வார்த்தைகளுக்கு வழிவிடுகிறது.
திரைக்கலைஞர் மம்முட்டியின் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பெயர் வைப்பதில் யோசனையாக இருந்த நாட்களில்  ‘மூன்றாம் பிறை’ என்ற தலைப்பு ஒத்துப் போகிறது. அந்தத் தலைப்பிற்காய் நான் அவரிடம் அனுமதி கோருகிறேன். ‘ திஞுணூதூ ஞ்ணிணிஞீ ஷைலம்மா, நல்ல தலைப்பு அது, மூன்றாம் பிறையைக்  கொஞ்ச நேரம்தான் பார்க்கமுடியும். ஆனால் அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் நல்ல காரியங்கள் பலதையும் செய்வார்கள். அதயே வைய்யம்மா ‘ என்று என்னை உற்சாகப்படுத்தினார். பின்னாளில் என் வலைதளத்திற்கும் அதுவே பெயராக ஆனது.
‘பவா என்றொரு கதைசொல்லி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் படத்தை வெளியிட்டு பேசிக் கொண்டேயிருந்தார். மொத்த உரையும் மிக நெருக்கமாகக் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி எங்களைக் கூச்சத்திலும், அதீத நெகிழ்விலும் கரைய வைத்தார். பத்து முறையாவது கண்கலங்கிக் கைதொழுது நின்றிருப்பேன். பவாவிற்குப் படைப்பாளி எப்படி குடும்பத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் படைப்பாளியின் மனைவி என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றும் அதையெல்லாம்
என் மகள் ஷைலுக்கு நீங்கள் கொடுக்கக்கூடாதென்றும் தன் அனுபவத்திலிருந்து பேசித் தீர்த்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே  எஸ்.எல்.ஆர். கேமராவில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு தாத்தா பேசுவதைப் படம் எடுத்து, தான் எடுத்த படத்தைத் திருப்பிப் பார்த்த வம்சியை அவ்வளவு கூட்டத்திலும் கவனித்திருக்கிறார். பேச்சின் நடுவே ‘வம்சி நாங்களெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதை லேபில் கொண்டுபோய்க் கொடுத்து, அவன் டார்க்ரூமில் கொண்டுபோய்க் கழுவி எடுத்திட்டு வர்றவரைக்கும் பொறுமையாய்க் காத்திருந்து, பெற்ற பிள்ளையைப் பார்ப்பதுமாதிரி பார்ப்போம். புகைப்படம் எடுத்தவுடன் திருப்பிப் பாக்காதே. அப்படிப் பாத்தா நீ எடுத்த படத்துமேல உனக்கு நம்பிக்கையில்லன்னு அர்த்தம். எடுப்பதற்குமுன் இதுதான் நான் எடுக்கப்போற ஃப்ரேம்ன்னு மனசில ஃபிக்ஸ் பண்ணு’ என்று அவனுக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தார்..
வம்சியையும் மானசியையும் அப்படிப் பிடிக்கும் அவருக்கு. பிள்ளைகளை வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாலை வாக்கிங் போய்விட்டு வரும்போதே காய்கறிகள் வாங்கிவந்து, தானே ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து, தாத்தாவும் பேரப்பிள்ளைகளுமாய்ச் சாப்பிட்டு விளையாடின நாட்களை இனி நான் அவர்களுக்கு மீண்டும் தர முடியாமல் காலம் உறைய வைத்துவிட்டதே.
 நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் கேட்டார்,
 ‘வம்சி என்ன பண்ணப்போறான்மா?’
‘அவன் இப்ப சிக்ஸ்த் படிக்கிறான் சார், பரோடாவில் போய் டிசைன்ஸ் படிக்கணும்னு சொல்றான் சார்’
‘இல்லம்மா, அவன் என்னமோ எங்கிட்ட வந்திடுவான்னுதான் தோணுது’
காலம்தான் எந்தக் கருணையும் இல்லாமல் ஓடுகிறதே. இரண்டு வருடங்களுக்கு முந்திய ஒரு டிசம்பர் 31 இரவு பத்து மணியிருக்கும். குழந்தைகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சட்டென்று வம்சி சொல்கிறான், ‘அம்மா நானொரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு இருக்கேன்’
சின்னச் சின்ன மன அசைவிலும் உடல் மொழியிலும் சிதறின துளிகளைக்கொண்டு ஒரு மனிதன் ஒரு குழந்தையை எப்படி அவதானித்திருக்கிறார் என்று நான் மீண்டுமொருமுறை ஆச்சரியப்பட்டுப் போனேன்.
நானும் ஜெயஸ்ரீயும்  அவரைப்போய்ப் பார்த்த ஒரு மதிய வேளையில், நான் மொழிபெயர்த்த  ‘சுமித்ரா’ நாவல் பற்றிப் பேச ஆரம்பித்தோம். இந்த நாவல் படமாக வந்ததையும் அது சரியாக எடுக்கப்படவில்லையென மூல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் வருத்தப்பட்டார் என்றும் சொன்னேன். மிகக் கடுமையாகக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. கதை மட்டும்தான் எழுத்தாளனுக்குச் சொந்தம், அது படமாவது ஒரு ஃபிலிம் மேக்கருக்கானது. அது அந்தக் கதையின் மறு ஜென்மம். அது பற்றி எழுத்தாளன் பேசவே கூடாது என்றார். பேச்சு அப்படியே அப்போதுதான் பல சூறாவளியில் அகப்பட்டு வந்த ‘விஸ்வரூபம்’ படத்தைப் பற்றி வந்தது. கமல் ஓர் அசாத்தியமான கலைஞன்,  இந்தப் படத்தில கமல் வச்ச ஒரு ஷாட்டைக் கூட என்னால வைக்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார்.
வம்சியைப் பற்றி எப்போதும் விசாரித்துக் கொண்டேயிருப்பார்.
‘ஷைலு, வம்சி இப்ப என்ன பண்றான்?”
நிறைய வேர்ல்டு கிளாசிக்ஸ் பாக்கறான் சார். அவனுக்கு போட்டோகிராபிதான் விருப்பமா இருக்கு. சாந்தினிகேதன் போய்ப் படிக்கப் போறானாம் சார்’
‘வெரி குட், ஆனா அதுக்கெதுக்கு அவன் அங்கேயெல்லாம் போணும், இன்னும் மூணு வருஷம் முடிச்சிட்டு தாத்தாகிட்ட வரச் சொல்லம்மா. அவன நான் பாத்துக்கறேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா உருவாக்கிக் காட்டறேன்.
கடைசிவரை தாத்தாவின் கை பிடித்து சினிமா மொழி கற்க என் மகனுக்கு வாய்க்காமலே போய்விட்டது.
‘ஷைலு அவங்கிட்ட ‘ சந்தியாராகம்’ படம் இருக்கா?’
‘இல்ல சார்’
‘அப்படியா’ என டேபிளுக்குக் கீழே குனிந்தவர் ஒரு டிவிடியை எடுத்துப் பொறுமையாய் ‘ என் அன்பு பெயரன் வம்சிக்கு, வாழ்த்துக்களோடு தாத்தா பாலுமகேந்திரா’ என்று தன் அழகான கையெழுத்தில் எழுதி ‘வம்சிகிட்ட கொடம்மா’ என்றார். அவர் எழுதி முடிக்கும்வரை எழுந்துநின்று, பெருகும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் நின்றிருந்தேன். எனக்குத் தெரியும் தமிழ்நாட்டில் அந்தப் படம் கிடைக்காமல் தேடியலையும் எத்தனை சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்று.
மகனே தாத்தா கை பிடித்து அழைத்துச் செல்லவில்லையென்றாலும் உனக்கான திசையையும் நீ முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அக்கினிக் குஞ்சினையும் உன்னிடம்தான் விட்டுச் சென்றிருக்கிறார். அதை இதயத்தில் ஏந்திக் கொள்.
‘ஷைலு வாம்மா, நாம படம் பாக்கலாம்’ எனக் கூட்டிப் போய், தான் இதுவரை எடுத்த ‘தலைமுறைகள்’ படத்தின் சில காட்சிகளை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறார். அதே அறையில் உட்கார்ந்து  ஒரு க்ரீன் டீ குடித்துக்கொண்டே பெயரிடப்படாத அக்கதையை முழுமையாகக் கேட்ட நியாபகங்கள் நெஞ்சில் மூள்கிறது. படத்தில் சுப்புத்தாத்தாவாய் மெல்ல மெல்ல நடந்து, கண்களின் ஓரம் ஈரம் காட்டி உட்கார்ந்திருக்கும் சாரைப் பார்த்து, கால் தடுக்கி விழும் தாத்தாவைப் பார்த்துப் பதறி விழுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாய் அவை மாறிப் போகும் உன்மத்தத்தில் பல காட்சிகள் தெரியாமல் கண்ணில் நீர் முட்டுகிறது. எழுந்து வெளியே வருகிறோம். சினிமாப் பட்டறையில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறார்கள். அதை உடனே உணர்ந்தவர், ’இவங்க பேரு ஷைலு, பெஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர். என்னோட படத்துக்கு மியூசிக் கூட போடாத கட்டத்தில நான் இதுவரைக்கும் யாருக்கும் போட்டுக் காண்பிச்சதில்ல, சினிமால இருக்கற எந்தக் கொம்பனுக்கும் நான் காட்டமாட்டேன். ஆனா நான் ஷைலுக்குக் காட்டுவேன், பிக்காஸ் ஷீ ஈஸ் மை டாட்டர்’ என்கிறார்.
‘ஷைலு’ எனப் பிரியம் ஊறின வார்த்தைகளில் என்னை அழைக்க இனி யார் இருக்கிறார்கள்? மெல்ல என் கைப்பிடித்து என்னுடன் நடந்து வரும் கால்கள் எங்கே?
கண்ணாடிப் பெட்டிக்குள் என்னைப் பார்த்துப் பேசாமல் படுத்திருக்கும் அவரைப் பார்த்த துக்கத்தில் அருகில் நின்ற ‘சுகா’வின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெடித்து அழுகிறேன்.  சுகாவும் என்னுடன் சேர்ந்து  பதில் தெரியாது உடைந்து அழுகிறார்.
ஆனால் அப்பா, என் அன்பான அப்பா, ‘ஷைலு நான் என் கடைசிகாலத்தில் திருவண்ணாமலையில்தான் இருக்கப் போகிறேன். நீயும் பவாவும்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சொன்னதை ஒரு மகளாக  நான் நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் மகனிடமும் அகிலா அம்மாவிடமும்  வேண்டி உங்கள் இன்னொரு மகன் பாலாவிடம் பெற்ற அஸ்தியைக் கையில் ஏந்தியபடி மனசும் உடம்பும் பதறப்பதற நிற்கிறோம். நானும் பவாவும் சிறிது சிறிதாய்ச் செப்பனிட்டு பிள்ளைகளுக்காகவும் நண்பர்களுக்காகவும் உருவாக்கியிருக்கும் எங்கள் நிலத்தில் அதை விதைத்து, எங்களோடு நீங்கள் கலந்திருக்குமாறு செய்திருக்கிறோம்.
கொழும்பில் மட்டக்களம்பு மாகாணத்தில் அமிர்தகழி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த அந்தக் கால்களும், திரும்பி சொந்த மண்ணிற்குப் போகவே முடியாமல் போனதற்காய் கடைசி நிமிடம்வரை அழுது தீர்த்த கண்களுமாய்  என் ஆசான் நாடற்றவனாக மின்சார மயானம் நோக்கிப் போகிறார் என்று சோமீதரன் கதறினான்.
உங்களை இதயத்தில் ஏந்திக்கொண்ட பல ஆயிரம் பிள்ளைகளாய்  நாங்கள் இருக்கிறோம்.  எப்போதும் நீங்கள் சொல்வதுபோல இந்தப் பிரபஞ்ச சக்தி எங்களை உங்களிடமே எப்போதும் தக்க வைத்திருக்கும்.  

Monday, 5 February 2018

பெருநிலத்தின் ஒற்றை விருட்சம் பாக்யலஷ்மி

ஒரு சுயசரிதையைப் படிப்பதால் நமக்கு என்ன நேரும். அதில் ஒருவகைப்புனைவும் இருக்காதே என்ற பல கேள்விகளுடன் தான் ஸ்வரபேதங்கள் என மலையாளத்தில் பாக்யலட்சுமி என்கிற டப்பிங் கலைஞர் எழுதி தமிழில் கே. வி. ஷைலஜா அவர்கள் மொழிபெயர்த்த நூலினை எடுத்தேன்.
சுயசரிதையில் காந்தியடிகளின் சத்தியசோதனையும்,உ.வே.சாவின் என்சரித்திரம் வாசித்திருந்தாலும்,இரண்டு பெரிய ஆளுமைகளும் தனக்கென பாதை வகுத்து அதில் பயணிக்கையில் ஏற்படும் சோதனகளை அறிந்து இந்த சமூகத்தின் கொடையாக தான் வாழ ஆசைப்பட்டடு பயணித்தவர்கள்.சில கலைஞர்களின் சுய சரிதையினையும் வாசித்திருக்கிறேன்.அவர்கள் அந்தக் கலைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அதனால் ஏற்படும் உயரங்களையும், வீழ்ச்சிகளையும் தெரிந்தே பயணப்பட்டவர்கள்.ஆனால் பாக்யலட்சுமியின் வாழ்க்கை இலட்சியத்திற்காகவோ,கலைக்காகவோ ஒப்புக்கொடுக்க பயணப்பட்ட வாழ்க்கை அல்ல.டப்பிங் தியேட்டருக்குள் அதைப்பற்றி எவ்வித மனத்தயாரிப்புமின்றி வாழ்க்கை அவளை பெரும் காற்றினில் தூக்கிவீசப்பட்ட ஒரு இலையைப் போலத்தான் ஸ்டுடியோவிற்குள் வீழ்கிறாள்.
பிறந்து தாயின் கைபிடித்து நடக்கத் துவங்கிய கணத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் துயரமும்,தனிமையுமே வழிகாட்டுகிறது.தனிமை ஒன்றே அவருக்கு துணையாக வருகிறது.ஒவ்வொரு அன்பிலும் ஏமாற்றமும்,பரிகசிப்பும்,சுரண்டலுமே அவளுக்கான பரிசாக உலகம் தருகிறது.பதிலுக்கு அனைவருக்கும்,அன்பையும்,மெளனத்தையும் அளித்படி ஒரு துறவியென கடந்து செல்கிறார்.தன்மீது அன்பு கொண்ட சிலரையும் வாழ்வு பறித்துக் கொள்கிறது.புரிந்து கொள்ளப்படாத தன் பணத்தின் மீது மட்டுமே வெறி கொண்ட ஒரு தாம்பத்யம்,அதற்காகவே பெற்ற தாயிடமிருந்து பிரித்து டப்பிங் தியேட்டருக்குள் இழுத்து தள்ளிவிட்ட பெரியம்மா,
முன் எச்சரிக்கையுன் வரும் காதல்,என வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவள்மீது துயரமும்,தனிமையும் கொண்ட நதி யின் கரையினில் அமர வைக்கிறது. இன்னும் சில மணித்துளிகளில் பிரசவிக்க நேரிடும் என்கிற நொடியிலும் பிறருக்காக குரல். கொடுக்க ஓடும் அவலம்.ஆனால் அவளுக்கென்று குரல் கொடுக்க யாரும் இல்லாத உலகம்.கேரளத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் அவள் குரல் சிரிக்கிறது,அழுகிறது.ஆனால் அவளின் அவளுக்காக நிஜவாழ்வின் அனைத்தும் ஊமைகளாகவே இருக்கிறார்கள்.அனைத்தும் இருந்தும் பெருநிலத்தின் ஒற்றை. விருட்சமென தனித்தே அனைத்து திசைகளிலிருந்து வரும் துரோக ஊழிக்காற்றினையும்,எப்போதோ சில நண்பர்கள் தான்.
பெற்ற இரு குழந்தைகள் இருக்கும் திசையிலிருந்து வரும் தென்றலையும் தழுவியபடி அவ்விருட்சத்தின் கிளைகள் காற்றில் விரித்து அலைந்தபடி இருக்கிறது.ஒவ்வொரு பெண்ணும் இல்லை துரோகத்தை நம் மீது எந்த நிமிடமும் வீசத் தயாரக இருக்கும் இப் பூவுலகில் பிறக்க நேர்ந்திட்ட அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழ்க்கை பாக்யலட்சுமியினுடையது.
கே.வி.ஷைலஜா மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார்.பாக்யலட்சுமியுடன் இலகுவாக நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சாமிநாதன், 
திருவண்ணாமலை

Sunday, 4 February 2018

”சிதம்பர நினைவுகள்” – புத்தக அனுபவம்!

            பொதுவாகவே வம்சியின் புத்தகங்கள் என்னை வசீகரிக்கும் – நல்ல வாசிப்பானுபவம், எழுத்தாளர்கள், வடிவமைப்பு, எழுத்துரு என எல்லா வகையிலும்! ஜெயமோகனின் ‘அறம்’. பாரதி மணியின் ‘புள்ளிகள். கோடுகள், கோலங்கள்’ போன்ற புத்தகங்கள் இதில் அடக்கம்!
டிசம்பர் 2003 லிருந்து டிசம்பர் 2016 வரை ஒன்பது பதிப்புகள் கண்ட ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகத்தை, இந்த வருடம்தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன் – பெயரும், முதல் கட்டுரையும் சொந்த ஊரின் நினைவுகளாக இருக்கின்றனவே என்றுதான் வாங்கினேன் – மற்றபடி, புத்தகத்தைப் பற்றி வேறெதுவும் நான் அறிந்திருக்கவில்லை! கவிஞர் பாலசந்திரனின் கட்டுரை ஒவ்வொன்றிலும் அவரது வாழ்வானுபவம் வாசகனின் மனதைக் கரைக்கிறது – மொழிபெயர்ப்பென்றே தெரியாத அளவுக்கு உணர்வுகளைக் கடத்தும் ஷைலஜா அவர்களின் நடை பிரமிக்க வைக்கிறது!
“ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று.
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்திவைத்துக் காத்திருக்கும்.
எப்போதும்.”
முகவுரையில் உள்ள பாலசந்திரனின் இவ்வரிகள் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்பட்டு, நம்மை வியப்பிலாழ்த்துகிறது!
எல்லோர் வாழ்விலும் அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிலருக்கே அவற்றை எழுத்தில் வடிக்க வாய்க்கிறது. அதிலும் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த உரைநடைக்கு ஒரு கலை நயத்தோடு கூடிய இலக்கியத் தரம் கிடைத்துவிடுகிறது. அப்படித்தான் சுள்ளிக்காடு பாலசந்திரனின் இருபது கட்டுரைகளும் வாழ்க்கையை உள்ளபடி, அதன் ஏற்ற இறக்கங்களுடன், அன்பு, இரக்கம், கோபம், வெறுப்பு, காதல், ஈர்ப்பு என எல்லாவற்றுடனும் ஒளிவு மறைவின்றி படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறபோது, படைப்பாளிகள் மறைந்து, நாமும் ஒரு பார்வையாளனின் நிலையை அடைந்து விடுகிறோம்!
பாலசந்திரன் வித்தியாசமான மனிதர் – வாழ்க்கையுடன் உண்டான போராட்டங்களில், சமரசத்துக்கே இடம் தராமல், பல தழும்புகளுடன் வெற்றி பெரும் போராளி! ஏற்றங்களை விட சறுக்கல்களில் அதிக அனுபவம் பெறுபவர் – சிறிதும் தயக்கமின்றி அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், மூன்றாம் மனிதனாக எட்டி நின்று நம்முடன் வேடிக்கை பார்ப்பவர். சமூகத்தின் மீதான கோபம், ஏழ்மையின் வலி, காதலின் சுவையும், கசப்பும், மனித மன விகாரங்கள், விஸ்வரூபங்கள், மனித நேயம் அனைத்தையும் உள்ளபடி, எந்தவித மறைப்புகளும் இன்றி எளிதாக எழுதிச் செல்கின்றார். வாசகனால் அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாதவை அந்த அனுபவங்களின் ஆழமான பதிவுகள். உண்மைதானா அல்லது புனைவா? என்ற சந்தேகம் எழும்போதெல்லாம், அந்த அனுபவங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் அந்தக் கேள்வியையே அர்த்தமற்றதாக்கி விடுகின்றன!
சிதம்பரம் கோயில் பின்னணியில், வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் கதையில் தன்னம்பிக்கை ஆனந்த நடமாடுகிறது. அப்பாவின் அஸ்தியுடன் நதியில் நாமும் கரைந்தோடுகிறோம். தீயில் கருகிய காதல், திருப்பித் தரும் முத்தத்தில் நிறைவு பெறுகிறது.
அம்மாவை நினைத்து, “அவமதிப்பவனாக……. பாசமற்றவனாக…….நன்றி இல்லாதவனாக…….குற்ற உணர்ச்சியில் எனக்கு மூச்சு முட்டியது” என்கிறார்.
“பசிதான் பரம சத்தியம். பைத்தியம்கூடப் பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.”
முதல் கர்ப்பத்தைக் கலைத்துவிட நேரும்போது அவர் படும் வேதனை
“உலகின் முடிவுவரை பிறக்காமல் போக இருக்கும் என் மகனே,
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத் தவிர –
ஆனாலும் மன்னித்துவிடு என் மகனே.”
மார்த்தா அம்மாவின் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட காரணம், சிவாஜியுடன் சந்திப்பு, ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் வாங்கிய அறை, அமைதியாக இரவு முழுதும் கடற்கரையில் தங்கிய சாந்தம்மா, விஷக்கன்னி லைலாவின் தற்கொலை, ஸ்ரீவத்சனின் கவிதையும், தரித்திரமும், தான் மோகித்த ராதிகா, தற்கொலை செய்துகொள்ளும் மனநோயாளி – இப்படி அவரது அனுபவங்கள் நம்மைப் புரட்டிப் போடுகின்றன!
தேங்காய் எண்ணை வாசத்துடன் வக்கணையாகச் செய்யும் அவியல் குறிப்பும் உண்டு!
படிக்க வேண்டிய நல்லதொரு மொழிபெயர்ப்புப் புத்தகம் – வாழ்வியல் கட்டுரைகள் - வாழும் வரை நினைவில் வாசம் செய்யும் அனுபவப் பதிவுகள்!
அன்புடன்,

டாக்டர் ஜெ.பாஸ்கரன்.